Welcome To Literary Bookshelf
Sangam literature comprises some of the oldest extant Tamil literature, and deals with love, traditions, war, governance, trade and life.!

இந்திய இலக்கியச் சிற்பிகள் :
உரைவேந்தர் ஒளவை சு. துரைசாமிபிள்ளை
ஆசிரியர்: ச. சாம்பசிவனார்

uraivEntar auvai turaicAmi piLLai
by ca. cAmpacivanAr
In tamil script, unicode/utf-8 format




    Acknowledgements:
    Our Sincere thanks go to Tamil Virtual Academy for providing a scanned PDF of this work.
    This etext has been prepared using Google OCR online tool and subsequent proof-reading of the output file.
    Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.

    © Project Madurai, 1998-2020.
    to preparation
    of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
    are
    https://www.projectmadurai.org/

"உரைவேந்தர் ஒளவை சு. துரைசாமிபிள்ளை"
ச. சாம்பசிவனார்


    Source:
    உரைவேந்தர் ஒளவை சு. துரைசாமிபிள்ளை
    ச. சாம்பசிவனார்
    சாகித்திய அகாதெமி
    © சாகித்திய அகாதெமி
    முதல் பதிப்பு: 2007 ISBN 81-260-2366-X
    சாகித்திய அகாதெமி, இரவீந்திர பவன், 35, பெரோஸ்ஷா சாலை, புது தில்லி 110001.
    விற்பனை :
    குணா பில்டிங்ஸ், 443, அண்ணாசாலை, தேனாம்பேட்டை, சென்னை 600 018.
    விலை: இருபத்தைந்து.
    அச்சு : ஸ்ரீ விக்னேஷ் பிரிண்ட்ஸ், சென்னை-83.
    Uraivendar Avvai Su. Duruisami Pillai: Monograph in Tamil
    S.Sambasivanar.
    Sahitya Akademi, New Delhi, 2007, Rs. 25.
    -------------

    முகவுரை

      "நம் நாட்டில் கற்றோர் எனப்படுபவர் (இந்நாட்டில்) வாழ்ந்தார் என்றாலும் அவருடைய எண்ணங்களும் செயலும், பிற நாட்டவர் நல்கியனவாகவே இருந்தமையால், வேற்று நாட்டவராகவே விளங்கினர். குழவிப் பருவத்தே, தாய், தான் தந்த பாலொடு உடன் ஊட்டிய தமிழ் மொழியை இகழ்ந்தனர்; தமிழ் நினைவைக் கைவிட்டனர்; தமிழ் வாழ்வைத் துறந்தனர்; தமிழ் நடையைத் தாழ்த்தினர்; தமிழுடையை மாற்றினர்; தமிழ்க் கல்வியைத் தூற்றினர்; தமிழ்ப் பண்பாட்டைக் கைவிட்டுத் தமிழ் மக்கட்குரிய சான்றாண்மையைக் கை தூவி, காலஞ் சென்ற தேசியகவி பாரதியார் கூறுவதுபோல 'நாமமது தமிழரெனக் கொண்டு' உயிர் வாழ்ந்தனர். தாய் நாட்டிலிருந்து கொண்டே வேறொரு பேய் நாட்டு மக்களாக நம்மை மாற்றிவிட்டதே இந்த அந்நியமொழிக் கல்வி' என அண்ணல் காந்தியடிகள் முதலிய சான்றோர் கழறிய சொற்கள் இன்னும் ஒலி மாறவில்லை!"

    என்று 50 ஆண்டுகட்கு முன்பு (1954) எழுதிய எழுத்து இன்றுங் கூடப் பொருந்து-வதாகவே உள்ளது. இவ்வாறு கூறியவர் 'உரைவேந்தர்' என உத்தமர்களால் போற்றப்படும் ஒளவை. சு.துரைசாமி பிள்ளையாவர்!

    சாதாரண ஒரு நடுத்தரக் குடும்பத்தில் பிறந்து, கல்லூரிப் படிப்பையும் தொடர முடியாமல், நகராட்சி அலுவலகத்தில் சேர்ந்து பணிபுரிந்தவர்; உள்ளத்தே ஆழப் புதைந்து கிடந்த தமிழுணர்வால், கரந்தைத் தமிழ்ச் சங்கம் போந்து, ஆசிரியப் பணியிலிருந்து கொண்டே 'வித்துவான்' தேர்வு எழுதிப் பல்வேறு உயர்நிலைப் பள்ளிகளில் பணிபுரிந்தவர்; தமது கடும் உழைப்பினாலும், முயற்சியினாலும் ஆராய்ச்சித் துறையில் வித்தகராக விளங்கியவர்; ஏடு பார்த்து எழுதுதல், கல்வெட்டுக்களைப் படியெடுத்தல், செப்பேடுகளைத் தேடிக் காண்டல் இன்னோரன்ன செயல்களால், பல்கலைக்கழகங்களில் ஆராய்ச்சிப் பேராசிரியராகத் திகழ்ந்தவர்; செந்தமிழில் சீரிய புலமை பெற்றதோடன்றிச் சைவ சித்தாந்தத் திலும் நுண்மாண் நுழைபுல மிக்கவர்; தமிழ் உணர்வுள்ள நூற்றுக்கணக்கான மாணவர்களை உருவாக்கியவர்; தமிழ் இலக்கிய வரலாறு, பண்டைக் காலத் தமிழ் மன்னர் வரலாறு போன்ற அரிய நூல்களை ஆக்கியவர்; பல்வேறு நூல்கட்கு 'உரைநயம்' கண்ட உரவோர் ; ஊர்களின் உண்மைப் பெயர்களைத் தக்க சான்றுகளுடன் நிறுவியவர்; நாநலம் மிக்கவர்; எழுதுவது போலவே பேசுவதும், பேசுவது போலவே எழுதுவதும் செய்யவல்லவர்! உயர்நிலைப்பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகம் எனப் பல்வேறு நிலைகளில் பணி புரிந்து கொண்டே இரவெல்லாம் கண்விழித்து ஆயிரக்கணக்கான பக்கங்கள் எழுதிக் குவித்தவர்; ஆங்கிலத்திலும் போதிய புலமை பெற்றவர்; வடமொழியும் அறிந்தவர்! தாம் வாழ்ந்த காலத்திலேயே சித்தாந்த கலாநிதி ', 'உரைவேந்தர்', 'தமிழ்ச்செம்மல்' எனும் தகைசால் பட்டம் பெற்றவர்! 'ஒளவை' யைக் கண்ணாற் கண்டோமில்லை ; இந்த 'ஒளவை'யைக் காண முடிந்ததே என்று பலரும் மகிழ்ந்து போற்றும்படி வாழ்ந்தவர் ! ஆம்! அவரே, 'உரைவேந்தர்' ஒளவை சு.துரைசாமி பிள்ளை.

      'தோன்றிற் புகழொடு தோன்றுக'

    என்னும் வள்ளுவர் வாய்மொழிக்கேற்ப வாழ்ந்தவர்!

    இத்தகு சான்றோரோடு 1951ஆம் ஆண்டு முதல் நட்புக் கொள்ளும் பேறு எனக்குக் கிட்டியது. அவரினும் வயதில் இளையவனே எனினும், என்னையும் ஒருபொருட்டாகக் கருதி என்பால் பேரன்பு காட்டிய பெருந்தகை! யான், மதுரைத் திருவள்ளுவர் கழகத்துச் செயலாளராக இருந்தபோது, சைவ சித்தாந்தக் தொடர் சொற்பொழிவுக்கு ஏற்பாடு செய்ததோடு, அவரது அறுபதாவதாண்டு மணிவிழாவைச் சிறப்புறக் கொண்டாடவும், அதில், 'உரைவேந்தர்' என்னும் உயரிய பட்டத்தை வழங்கவுமான நிகழ்ச்சி நடந்ததை இன்று நினைத்தாலும் எனதுள்ளம் பூரிப்புக் கொள்கிறது.

    இத்தகு தொடர்பு என்பால் இருந்தமையால், இவரது இனிய வாழ்க்கை வரலாற்று நூலினை எழுதும் பொறுப்பைப் புதுதில்லி, 'சாகித்திய அகாதெமி ' எனக்களித்ததைப் பெருமையாகக் கருதுகின்றேன்.

    அண்மைக் காலத்தில் நம்மிடையே வாழ்ந்தவர் 'உரைவேந்தர்' எனினும் இவரது வாழ்க்கைக் குறிப்பை ஒருவரும் முறையாக எழுதி வைக்கவில்லை. புலவர் தி.நா. அறிவொளி எழுதிய வாழ்க்கைக் குறிப்பும்; உரைவேந்தரின் நூற்றாண்டு நிறைவை யொட்டி வெளிவந்த 'உரைவேந்தருக்கு ஒரு நூற்றாண்டு' எனும் சிறுவெளியீடும்; அதில் வெளிவந்த கோமான் ம. வி. இராகவன் எழுதிய வாழ்க்கைச் சிறு குறிப்பும், சென்னையிலுள்ள என் ஆசிரியப் பெருந்தகை பேராசிரியர் திரு. கு. சிவமணி வழங்கிய 'இருபதாம் நூற்றாண்டுத் தமிழ்த் திறனாய்வாளர் ஒளவை சு.து." என்ற 'கருத்தரங்கக் கட்டுரை'யும் இந்நூல் எழுதப் பெரிதும் துணைபுரிந்தன. உரைவேந்தரின் திருமகனார், மருத்துவர் திரு . ஒளவை து. மெய்கண்டான் அளித்த குடும்பச் செய்திகளும், உரைவேந்தரே, நூல்களின் முன்னுரைகளில் தந்த குறிப்புக்களும் கைகொடுத்து உதவின.

    இந்த நூலை மேலும் விரித்து எழுதுவதற்கு இயலும்; நூலினைப் படிப்போர்க்கு அலுப்பு ஏற்படாதவாறு சுருக்கமாகவே எழுதப்பட்டுள்ளது!

    இந்நூலைப் படிப்பவர் எவருக்காவது, அன்னைத் தமிழ் மீது தணியா ஆர்வமும் சைவசித்தாந்தத்தைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற வேட்கையும் உண்டாகுமானால் அதுவே எனக்குப் பெரும் பேறு!

    வாழ்க தமிழ்!

    ச. சாம்பசிவனார்
    -----------------

    பொருளடக்கம்

      முன்னுரை 5. நற்றமிழ் நாவலர்
      1. இல்லற ஏந்தல் 6. சைவசித்தாந்தச் செம்மல்
      2. பேராசிரியப் பெருந்தகை 7. நிறைபுகழ் எய்திய உரைவேந்தர்
      3. நூலாசிரியர் நூல்கள்
      4. உரைநயம் கண்ட உரவோர்
    -----------------

    முன்னுரை

    தமிழர்க்கு இரண்டு கண்கள்' என்று சொல்லத்தகுவன தொல்காப்பியமும், திருக்குறளும் ; ஏறத்தாழ மூவாயிரம் ஆண்டுகட்கு முற்பட்டதாகிய 'தொல்காப்பியம்', தமிழர்செய் நற்றவத்தால், நூல் முழுமையாகக் கிடைத்துள்ளது. இதற்கு அக்காலத்தே உரைகண்டவர் பலர். அவருள் முதன்மையானவர் - இளம்பூரணர். தொல்காப்பியம் முழுமைக்கும் உரைகண்ட சான்றோர். இவர்தம் உரையே, பின்னர் வந்த உரையாசிரியர்கட்குக் 'கலங்கரை விளக்கம்' எனலாம். நயவுரை காண்பதில் நாயகர் இவர்!

    தொல்காப்பியம் பொருளதிகாரத்தில் இடம் பெறுவது 'உவமையியல்'. ஒரு பொருளோடு ஒரு பொருளை ஒப்பிட்டுக் காண்பது 'உவமை' எனப்படும். இதனை விளக்க வந்த இளம்பூரணர்,

      "இதனாற் பயன் (உவமையியலின் பயன்) என்னை மதிப்பதோ வெனின், புலன் அல்லாதன புலனாதலும்; அலங்காரமாகிக் கேட்டார்க்கு இன்பம் பயத்தலும். ஆப் போலும் 'ஆமா' என உணர்த்திய வழி, அதனைக் காட்டகத்துக் கண்டான், முன் கேட்ட ஒப்புமைபற்றி இஃது ஆமா' என்று அறியும். 'தாமரைபோல் வாள் முகத்துத் தையலீர்' என்றவழி, அலங்காரமாகிக் கேட்டார்க்கு இன்பம் பயக்கும்!"

    என்பர். 'உவமையின் பயன்யாது?', என்பதற்கான விளக்கம் இது. இருவகைப் பயன்கள்; ஒன்று; தெரியாத ஒன்றைத் தெரியப் படுத்துதல். (எ.டு.) 'காட்டுப் பசு (ஆமா) எவ்வாறு இருக்கும்?' என்று ஒருவன் கேட்டால், அது வீட்டுப் பசுவை (ஆ)ப் போல் இருக்கும்' எனல். மற்றொன்று; செய்யுட்கு அணி (அலங்காரம்) ஆக அமைந்து, படிப்பவர்க்கு இன்பம் தருதல். (எ.டு.) தாமரை போன்ற ஒளி (வாள்) பொருந்திய முகத்தினையுடைய பெண்களே (தையலீர்!).

    இவ்வாறு உரைநயம் காணும் வித்தகர்கள், இளம்பூரணருக்குப் பின்னும் நம் தமிழகத்தில் தோன்றியுள்ளனர். நச்சினார்க்கினியர், பேராசிரியர், சேனாவரையர், பரிமேலழகர் போன்றோர் இவ் வரிசையில் வைத்து எண்ணத்தக்க பெரும் உரையாசிரியர்கள்.

    அண்மைக் காலத்தில் வாழ்ந்த பெரியார்களில், பெரிய புராணத்துக்கு விளக்கவுரை கண்ட சிவக்கவிமணி' சி.கே. சுப்பிரமணிய முதலியார், திருக்குறளுக்கும் கம்பராமாயணத்துக்கும் விளக்கவுரை கண்ட கவிராச பண்டிதர் செகவீர பாண்டியனார் ஆகியோர் குறிப்பிடத்தக்கோராவர். இவர்கள் வரிசையில் வைத்து எண்ணத்தக்க பேராசிரியர் - ஒளவை சு. துரைசாமி பிள்ளை ஆவார்!

      "நூலுக்கு நூலருமை காட்டுவதில் நுண்ணறிஞன்
      மேலுக்குச் சொல்லவில்லைவேர்ப்பலாத் - தோலுக்குள்
      உள்ள சுளைகொடுக்கும் உண்மை உழைப்பாளன்
      அள்ளக் குறையாத ஆறு!"

    என்று புரட்சிக்கவிஞர் பாரதிதாசனாரால் போற்றப் பெறுபவர் 'உரைவேந்தர்' ஔவை துரைசாமிபிள்ளை!

    'உரைவேந்தர்', இல்லற ஏந்தலாக இலங்கியவர்; பேராசிரியப் பெருந்தகையாகப் பிறங்கியவர்; சங்கத் தொகை நூல்கட்கும் பிறவற்றிற்கும் உரைநயம் கண்ட உரவோராகத் திகழ்ந்தவர்; சைவத்தின் சிறப்பையும் சைவ சித்தாந்தத்தின் மேன்மையையும் எடுத்துரைத்த சித்தாந்த வித்தகர்; தமிழ்ச் சொற்களின் பொருள் நயம் காண்பதிலும், ஊர்ப்பெயர்களின் உண்மைதனை எடுத்துரைப்பதிலும் சொல்லின் செல்வராக விளங்கியவர். இவற்றால் உரைவேந்தர்' எனப் போற்றப் பெற்றவர்; உயர்பண்புகள் நிறைந்த சீரிய பண்பாளர்; இவ்வகையில் புகழ்ச் செல்வராக வாழ்ந்தவர்!

    இத்தகு பேராசிரியரின் வாழ்க்கை வரலாற்றை அறிவதனால், ஒவ்வொருவரும் 'நற்றமிழுக்கும், நம் அருமைத் திருநாட்டுக்கும் பாடுபட வேண்டும்' எனும் உயர் எண்ணம் கொள்வர். அதற்கு இந்நூல் பெரிதும் உதவும் என நம்பலாம்.
    ----------------

    1. இல்லற ஏந்தல்

      "சங்க இலக்கியங்கள் இரண்டாயிரம் ஆண்டுகட்கு முற்பட்ட பழமையுடையவை என்று கூறும் போது பழமையில் ஏதோ பெருமையிருப்பதாக எண்ணி, அதனைக் குறைத்துக் கூறி மகிழ்கின்ற அன்பர்கள் சிலர் இன்றும் இருக்கின்றனர். தமிழ் நல்கும் தேனும், பாலும் உண்டு வளரினும், அவர்களது உள்ளத்தில் தமிழ்பால் வேறுபட்டு நினைக்கும் ஒருவகை உணர்வு இருந்தே வருகிறது. அவர்கள் குருதியின் ஒவ்வொரு துளியினும் ஊறிநிற்கும் இவ்வேற்றுமை யுணர்வு நாளடைவில் தான் நீங்கும். ஏனெனில், அஃது அவர்கள் பால் பல்லாயிரம் ஆண்டுகளாக வேரூன்றிப் பச்சை கொண்டிருப்பது!"

      "மிகப்பழமை வாய்ந்த சங்க இலக்கியம் தோன்றிய காலம், தமிழகத்துத் தமிழ் மக்களைத் தமிழ் மன்னரே, தமிழ் நெறியில், தமிழ் மொழியில் ஆட்சி புரிந்த காலம்; மக்கள், தமிழே நினைந்து, தமிழே மொழிந்து, தமிழ்ச் செயலே புரிந்த தனித்தமிழ்க் காலம்; வைதிகம், பௌத்தம், சயினம் முதலிய சமய வுணர்வுகள் பெரிதும் பரவாத காலம் ; புலவர்கள் இயற்றமிழும், பாணர்கள் இசைத்தமிழும், கூத்தர்கள் நாடகத் தமிழும் பேணி வளர்க்க, முடிமன்னரும் குறுநிலத் தலைவரும், செல்வரும், அம் மூவர்க்கும் பெருங்கொடை புரிந்து, முத்தமிழ் வளர்த்த பெருமைக் காலம் ; முதுபெரும் புலவர்கள் மன்னர் பேரவையில் இருந்து, அரசியற் கருத்துக்கள் அளவளாவி இருந்த அருமைக்காலம்!"

    - இவ்வாறு, முப்பத்தேழு ஆண்டுகளுக்கு முன், 'சங்க இலக்கியத் தனிச்சிறப்பு' எனும் கட்டுரையில், முத்தமிழ் வளர்ந்த - வளர்த்த பான்மை குறித்தும், தமிழர்களில் ஒரு சிலர் தமிழின் பெருமை அறியாதிருக்கும் அவல நிலை குறித்தும் எழுதியவர் 'உரைவேந்தர்' என ஊரும் உலகமும் போற்றும் ஒளவை சு. துரைசாமி பிள்ளையாவார்!

    பிறப்பும் படிப்பும்

    ’சான்றோர் உடைத்து தொண்டைநாடு' என்பது பழமொழி. இந்நாட்டின் பாற்பட்ட தென்னார்க்காடு மாவட்டம், புலவர் பெருமக்கள் தோன்றிய சிறப்புக்குரியது. இம்மாவட்டத்தில், திண்டிவனத்திற்கு அண்மையில் அமைந்திருப்பது, 'ஒளவையார் குப்பம்' என்னும் சிற்றூர். அவ்வூரில், கருணீகர் (ஊர்க் கணக்கர்) மரபில் தோன்றியவர் சுந்தரம்பிள்ளை என்பார்.

    இவர், தமிழின் மீது அளவற்ற அன்புடையார்; மயிலம் முருகன்மீது. பல செய்யுள் நூல்கள் இயற்றிய மாண்பினர். இவருக்கு அருமை வாழ்க்கைத் துணைவியாக வாய்த்தவர் சந்திரமதி அம்மையார். இவர்களின் இல்லறப்பயனாய்ப் பெற்ற மக்கள் ஐவர். அவர்கள் முறையே மயிலாசலம், முத்துக்குமாரசாமி, சுப்பிரமணியம், பூமாதேவி, துரைசாமி என்னும் பெயரினர். பூமாதேவியும், துரைசாமியும் இரட்டைப் பிள்ளைகள்.

    5.9.1902-இல், தோன்றிய அந்த ஐந்தாங் குழந்தையே 'உரைவேந்தர்' ஒளவை சு. துரைசாமி பிள்ளையாவார்! பெண் குழந்தை பூமாதேவி இயற்கை எய்திவிட்டது!

    உரைவேந்தர், தாய்ப்பால் இல்லாமல் வளர்ந்த பிள்ளை. 'தமிழ்ப்பாலில் திளைக்கப் போகும் இவர்க்குத் தாய்ப்பால் எற்றுக்கு' என இறைவன் கருதினன் போலும்!

    இக்குழந்தை, பிற்காலத்தில் தமிழகத்தில், உரைஉலகில் ஒரு பொற்காலத்தை உருவாக்கப் போகிறது என்று கருதித்தான் இறைவன் 'ஒளவை' என்னும் சொல்லை முதலாகவுடைய ஊரில் இந்தச் செந்தமிழ்ச் செல்வம் பிறக்குமாறு செய்தனன் எனலாம்!

    உள்ளூரில் தொடக்கக் கல்வி கற்ற உரைவேந்தர், திண்டிவனத்தில் இருந்த அமெரிக்க ஆர்க்காடு நற்பணி உயர்நிலைப் பள்ளியில் (அப்போது ஏ.ஏ.எம். உயர்நிலைப் பள்ளி என அழைக்கப்பட்டது; பின்பு வால்டர்ஸ் கடர் உயர்நிலைப் பள்ளி) பள்ளியிறுதி வகுப்புவரை பயின்று சிறப்பாகத் தேறினார்.

    பின்பு , வேலூர் 'ஊரிசு' கல்லூரியில் இடைநிலை (Intermediate) வகுப்பிற் சேர்ந்து பயின்றார். ஆனால் கல்வியைத் தொடர்ந்து படிக்க வாய்ப்பில்லாது போயிற்று.

    தந்தைக்குப் பின்னர், தமையனார் மயிலாசலம் பிள்ளையின் பொறுப்பில் குடும்பம் இருந்தது; அவர்தம் துணைவியார் புண்ணியகோடி என்பவர். இவர்களின் நல்லாதரவு உரைவேந்தருக்கு இருந்தது எனினும், ஏதேனும் ஓர் அலுவல் பார்க்க வேண்டிய நிலை ஏற்பட்டது. ஆதலின் வருவாய் நாட்டத்தால், 'உடல் நலத் தூய்மைக் கண்காணிப்பாளர்' (Sanitary Inspector) பணியில் அமர்ந்தார். ஆனால் அப்பணியில் நீடிக்க விரும்ப வில்லை. தமிழ்ப்பணி யாற்றுதற்கென்றே தோன்றியவராதலால், நகராட்சி மன்ற அலுவலிலிருந்து விலகினார்!

    இளமையில் தமிழார்வம்

    உரைவேந்தர், சைவக் குடும்பத்தில், அதிலும் தமிழின்மீது அளவிலாப் பற்றுக் கொண்ட குடும்பத்தில், செய்யுள் இயற்றும் வன்மையுடைய ஒருவரின் திருமகனாராகப் பிறந்தவராதலின் இயல்பிலேயே தமிழ்ப்பற்றுக் கொண்டவராயிருந்ததில் வியப்பில்லை, மேலும், அ.ஆ. ந. உயர்நிலைப் பள்ளியில் உரை வேந்தருக்குத் தமிழறிவுறுத்தியவர், தமிழாசிரியர் சீகாழி கோவிந்தசாமி ரெட்டியார் ஆவார். அப்போதே, தம் தமிழாசிரியர்பாலிருந்து ஐங்குறுநூற்றுக் கையெழுத்துப் படியினை ஆராயும் திறன் பெற்றிருந்தார் உரைவேந்தர். படிப்பை முடித்து, நகராட்சியில் அலுவல் பார்க்கத் தொடங்கியவர், ஆறே மாதத்தில் விலகி விட்டாரெனில், அதற்கு அவர்பாலிருந்த ஆழ்ந்த தமிழார்வமே காரணம் எனலாம். அவரது மனத்தில் ஓயாது அலைமோதிக் கொண்டிருந்த எண்ணம், 'தமிழை முறையாகப் பயில வேண்டும்; தமிழ்ப் பேராசிரியராகத் திகழ வேண்டும்' என்பதேயாகும்!

    கரந்தைக் 'கல்வி'

    அக்காலத்தில், தஞ்சையையடுத்துள்ள 'கரந்தைத் தமிழ்ச் சங்கம்' தமிழுக்குச் செய்த தொண்டுகள் எண்ணில் பலவாம். 'தமிழவேள்' எனத் தரணி போற்றும் த.வே. உமாமகேசுவரனார் அதன் தலைவராக இருந்து, அளப்பரிய தொண்டுகள் புரிந்து வந்தார் !

    தனித்தமிழ் பயில்வதற்கு ஏற்ற இடம் கரந்தைத் தமிழ்ச் சங்கமே என்றுணர்ந்த உரைவேந்தர், தமது 22-ஆம் வயதில், சொந்த ஊரான ஒளவையார் குப்பத்தை விட்டுத் தஞ்சைத் திசைநோக்கித் தமது, நெடிய இனிய தமிழ்ப் பயணத்தைத் தொடங்கினார்.

      "அந்நாளில், 'பழுமரம் நாடும் பறவை' போல், கரந்தைத் தமிழ்ச் சங்கம் என்னும் பேரால மரத்தினை நாடிச் சென்று, அதன் தண்ணிய நிழலிலே இளைப் பாறி, நற்றமிழ் நலம் மாந்தி, விழுதாக வெளிப் போந்து, பழந்தமிழின் வளமையையும், செழுமையையும் தம் உரையாலும் எழுத்தாலும் வளர்த்துப் பரப்பிய பெருந்தொண்டில் ஈடுபட்ட புலவர் பெரு மக்கள் பலராவர். அவர்களுள் தலையாயவர் நம் ’ஒளவை'.

    என்று, கரந்தையில் வாழ்ந்த பேராசிரியர் கு. சிவமணி கூறுவது இவண் கருதத் தகும்!

    சிவமணக்கும் இன்சொல் ; உருமணக்கும் திருநீறு ; இயலருள் ஒழுகும் கண்கள்; அருள் மணக்கும் திருநோக்கு : இளநகை ஒளிர் செவ்வாய்; சொற்பொறுக்கும் செவிகள்; வீரவுரை நவிலும் நாக்கு : செம்பாகத் தமிழ் பேசிச் சிரிப்புக் காட்டும் முகம் ; எடுப்பான திருவுருவம் - இத்தனையும் கொண்டு விளங்கியவர் தமிழவேள்' த.வே. உமா-மகேசுவரனார். பொங்கு தமிழ்த்தாய்ப் பணி போற்றி நின்ற புலவர் குழாம் குடியேறத் தகுந்தவாறு, கரந்தைத் தமிழ்ச் சங்கத்தை வளர்த்த சான்றோர் இவர்! இத்தகு சங்கத்தோடு அணுக்கத் தொடர்புடைய புவர்கள் பலர். அவருள் குறிப்பிடத்தகுந்தோர் இருவர். ஒருவர், 'கரந்தைக் கவியரசு' சு. வேங்கடாசலம் பிள்ளை . மற்றவர், 'நாவலர்' ந.மு. வேங்கடசாமி நாட்டார்.

    'கரந்தைக் கவியரசு' தஞ்சை தூய பேதுரு உயர்கலாசாலை, திருவையாற்று அரசர் கல்லூரிகளில் தலைமைத் தமிழ்ப் புலவராயிருந்து, கரந்தைக் கல்லூரிப் பேராசிரியராய் விளங்கியவர். இலக்கணத்தையும் இனிமையுறக் கற்பிக்கும் திறனும், எவரிடத்தும் இனிமையாகப் பழகும் பண்பும் கொண்டவர். 'தமிழ்ப் பொழில்' என்னும் திங்களிதழின்
    ஆசிரியராக இருந்தவர்.

    அவ்வாறே, ந.மு. வேங்கடசாமி நாட்டாரும், திருச்சி பிசப் ஈபர் கல்லூரியிலும், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலும் தமிழ்ப் பேராசிரியராக இருந்து, பின்னர்க் கரந்தைத் தமிழ்ச்சங்கக் கல்லூரித் தலைவராகவும் இருந்தவர். சிலப்பதிகாரம், அகநானூறு முதலான நூல்களின் உரையாசிரியர்.

    இவ்விருவர்பாலும் தமிழ் கற்றுத் தமிழாசிரியராக வர வேண்டும் என விரும்பியதனால் தான், கரந்தைத் தமிழ்ச் சங்கத்தை நாடி வந்தார் உரைவேந்தர்.

    ஒருவரைப் பார்த்த அளவிலேயே அவரின் திறமையை அளந்தறியும் ஆற்றல் பெற்ற 'தமிழவேள்', தம் சங்கத்தின் பெருமைகருதி வந்த உரைவேந்தரைத் தமிழ்ச்சங்கப் பள்ளியில் ஆசிரியராகப் பணியிலமர்த்தினார். அதனுடன், சங்க நூலகப் பணியும் தரப்பெற்றது. இவ்விரண்டுமே, உரைவேந்தர் மனம் மகிழும் நற்பணிகளாயின!

    உரைவேந்தர், தம்முடைய அருங்குணம், அருஞ்செயல்களால் தமிழவேளின் உள்ளத்தைப் பெரிதும் கவர்ந்து கொண்டார் என்பதற்குச் சில சான்றுகள் காட்டலாம்.

    சங்கத்தின் சார்பில், 'தொல்காப்பியம் - தெய்வச் சிலையார் உரை' நூல் வெளியிட ஏற்படாயிற்று. ஓலைச் சுவடி படிப்பதில், முன்பே பயிற்சி பெற்றவர் உரைவேந்தர். எனவே தெய்வச் சிலையார் ஏட்டினைப் படித்து, அதனைப் பகர்த்து எழுதும் பணி இவருக்குத் தரப்பட்டது. அப்போது, தமிழவேள் உரைவேந்தரை யழைத்து, 'Juries to Students' என்ற ஆங்கில நூலைக் கொடுத்து, 'முதலில் இந்த நூலைப் படிக்கவும்' என்று கூறினார். உரை வேந்தரும் அதனைப் படித்து இன்புற்றார்.

    'தமிழவேள்' தமிழில் மட்டுமன்றி ஆங்கிலத்திலும் புலமையாளர் என்பது குறிப்பிடத்-தக்கது. அந்நாளைய சென்னை மாகாண ஆளுநர் சர். ஆர்தர்ஹோப் என்பவர் பேசிய ஆங்கிலப் பேச்சை அப்படியே ஏற்ற இறக்கத்துடன் தமிழில் மொழிபெயர்த்து, அனைவரின் பாராட்டைப் பெற்றவர். இத்துணையளவு ஆங்கிலப் புலமையிருந்தும் மற்றவர்களுடன் தமிழில்தான் உரையாடி மகிழ்வார்! இவருடனிருந்து பழகிய பான்மையினால் தான், உரைவேந்தரும், பிற்காலத்தில் தமிழில் மட்டுமன்றி ஆங்கிலத்திலும் புலமை பெற முடிந்தது!

      "திரிபின்மை நீக்கிய விசேடம், இயைபின்மை நீக்கிய விசேடம் என்ற இடங்களிலும் எங்கள் ஐயத்தைத் தமிழவேள் போக்கினார். இதுபோல் பல சமயங்களில் எங்கட்கு ஆசிரியராகவும், சிக்கல்களில் நடுவராகவும் இருந்தார். 1924ஆம் ஆண்டிலேயே இதைச் செய்தார். அவரிடத்து மீளா அடிமையாகக் கூடிய மனப்பான்மை எங்கட்குத் தோன்றியது!

      "அவர் தமிழில் பேசிய பேச்சுக்கள், எங்களைக் கவர்ந்தன. அவர் பேச்சில் வேற்று மொழி கலக்கவே கலக்காது; எங்களைத் தமிழில் பழக, ஊக்குவித்தவர் அவரே!"

    என்று நற்றமிழில் பேசும் பெற்றியைத் தமிழவேளிடமிருந்து கற்றுக் கொண்டதாக உரைவேந்தர் கூறுவது எண்ணத்தக்கது.

    1925ஆம் ஆண்டு முதல் 1928ஆம் ஆண்டுவரை, கரந்தையில் தங்கியிருந்தார் உரைவேந்தர்; ஆசிரியப்பணி, ஏடு பெயர்த்தெழுதும் பணி, தமிழவேள் முதலான அறிஞர்களுடன் அவ்வப்போது உடன் சென்று உதவும்பணி ஆகிய இவற்றுக் கிடையே, வேங்கடாசலம் பிள்ளை, நாட்டார் ஆகியோரிடம் அமயம் நேரும் போதெல்லாம், தமிழ்ப்பாடம் பயின்று, 1930-இல், சென்னைப் பல்கலைக்கழக 'வித்துவான்' தேர்வும் எழுதி வெற்றி பெற்றார்.

    பிற்காலத்தில் 'பேராசிரியப் பெருந்தகை' ; 'சித்தாந்த கலாநிதி', 'உரைவேந்தர்' முதலான பெரும் புகழ் பெற்றமைக்கு அடித்தளமாக அமைந்தது கரந்தைத் தமிழ்ச் சங்கமே எனில், மிகையன்று!

    இல்லறம் ஏற்றல்

    உரைவேந்தர்தம் வாழ்க்கைத் துணைவியாக வாய்த்தவர், உலோகாம்பாள் ஆவார். கோட்டுப்பாக்கம் (காவேரிப்பாக்கம்) என்ற ஊரில் வாழ்ந்த அண்ணாபிள்ளை - இலட்சுமி ஆகியோரின் முதல் மகள்! வள்ளுவர் மொழிந்த 'வாழ்க்கைத் துணைநலம்' என்பதற் கேற்ப, உரைவேந்தருக்கு எல்லா வகையானும் நலமாக அமைந்தவர். அதனால் தான், உரைவேந்தர் எவ்விதக் கவலையு மின்றித் தமிழை ஆராய்வதிலும், ஆசிரியப்பணி ஆற்றுவதிலும், மிகப்பெரிய மாநாடு அல்லது கூட்டங்களில் தலைமை தாங்கிப் பேருரை அல்லது சொற்பொழிவு செய்வதிலும் ஓர் இம்மியளவும் தவறாமல், கடமை யாற்ற முடிந்தது; பெரும்புகழும் பெற முடிந்தது.

    இவ்விருவர்தம் இல்லறப் பயனாய்ப் பெற்ற மக்கள் பதினொரு பேராவர்.
      1. திருவள்ளுவன் - பிறந்த சில நாட்களில் இறந்து போனான்
      2. பாலகுசம் - கணவர் இரமணன் (காதல் மணம்)
      3. நடராசன் - மனைவி தாரா
      4. மணிமேகலை - கணவர் சுப்பிரமணியம்
      5. திலகவதி - கணவர் நரசிம்மன்
      6. தமிழரசி - கணவர் குமாரவேலு
      7. ஆண்மகவு - பிறந்த சில நாட்களில் இறப்பு
      8. திருநாவுக்கரசு - மனைவி முத்துலட்சுமி
      9. திருஞானசம்பந்தன் - மனைவி சந்திரிகா
      10. மெய்கண்டான் - மனைவி சீதா
      11. நெடுமாறன் - மனைவி கலாவதி

    உரைவேந்தர் 'மணிமேகலை' என்ற நூலினை எழுதுங் காலத்துப் பிறந்த மகவுக்கு 'மணிமேகலை' என்றும்; மெய்கண்டார் அருளிய 'சிவஞான போதம்' நூலினை எழுதுங்காலத்துப் பிறந்த மகனுக்கு 'மெய்கண்டான்' என்றும் பெயர் சூட்டி மகிழ்ந்தார்.

    உரைவேந்தர் குடும்பங்களில் ஒருவருக்காவது ’நடராசன்' என்று பெயர் வைப்பது தொன்று தொட்டு வரும் வழக்கமாக இருந்துள்ளது!

    மதுரையில் நடந்த ஒரு கூட்டத்தில் 'உரைவேந்தர்' சொற்பொழி வாற்றிக் கொண்டிருக்கும் போது தம் குழந்தை (7ஆவது) இறந்த செய்தி வந்தது. 'அக்குழந்தையை அடக்கம் செய்ய ஏற்பாடு செய்து விடுக; கூட்டம் முடிந்த பின் வருகிறேன்' என்று சொன்னாரெனில் இவரது கடமையுணர்வையும் 'எல்லாம் இறைவன் செயல்' என்று எண்ணும் மனவுறுதியையும் அறிய முடிகின்றது.

    துணைவியார் உலோகாம்பாளே, பிள்ளைகளை நன்முறையில் பேணிவளர்த்த பெருமாட்டியாவார் ! பிள்ளைகளிடம் கண்டிப்பாக இருப்பார்; சில நேரங்களில் வெகுண்டு கடிந்துரைப்பதும் செய்வார்.

    உரைவேந்தர் இறந்தபின் (1981), தமது இறுதிக்காலம் வரை (ஏறத்தாழ 70 வயது வரை), மருத்துவராகத் திகழ்ந்த மகன் மெய்கண்டானது இல்லத்திலேயே இருந்து, காலமானார். மெய்கண்டானின் மனைவி சீதாவின் பேரன்பும் பராமரிப்பும் உலோகாம்பாளுக்கு இருந்தது!

    உரைவேந்தரின் மூத்த மகனார் ஒளவை நடராசனார். தம் தந்தையைப் போன்றே சொல்லேருழவர். தமது விடாமுயற்சியால் பல்வேறு உயர்பதவி வகித்துத் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராக இருந்து பேரும் புகழும் பெற்றவர்!
    ஏனையோரனைவருமே உயர் படிப்புப் படித்துப் பல்வேறு பணிகளில் சிறந்து விளங்குகின்றனர்.

    உரைவேந்தரின் மக்கள் பதினொருவரில், பிறந்தவுடனே இறந்த இருவர் போக எஞ்சிய ஒன்பது பேரில், மூத்தமகள் பாலகுசமும், மகன் திருஞானசம்பந்தனும் இயற்கை எயதி விட்டனர்!

    சற்றுப் பருமனான உடம்பு; குட்டையான வடிவம்; முழுக்கை (ஜிப்பா)ச் சட்டை அடிக்கடி பொடி போடும் பழக்கம், தலைமுடியைக் குறைத்து வைத்திருப்பார்; நெற்றியில் திருநீற்றின் மணம் வீசும்; வீட்டில் கைமேசை வைத்தே எழுதுவார்; பெரும்பாலும் 'பேனா' வைப் பயன்படுத்தாமல் மைதொட்டு, அழகாக நிறுத்தி எழுதுவார்; எப்போதும் தமிழ் - சைவச் சிந்தனையே! குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட செயலைச் செய்வதில் வல்லவர்; மறந்துங்கூட மனைவியிடத்திலோ, பிள்ளைகளிடத்திலோ கடிந்து பேசமாட்டார்! செந்தமிழ் நடையில் தான் பேசுவார்! ஒவ்வொரு நாளும் ஏதாவதொரு நூலைப் படித்த பின் தான் படுக்கைக்குச் செல்வார்; பெரும்பாலும் அஃது ஆங்கில நூலாகவே இருக்கும்!

    இவ்வகையில் 'இல்லற ஏந்தலா'கத் திகழ்ந்தவர் 'உரைவேந்தர்' எனலாம்.
    ------------------

    2. பேராசிரியப் பெருந்தகை

      "பலதிறப்பட்ட பொது நலப் பணிகளிலும் ஆசிரியப் பணி அருமை வாய்ந்தது. அதற்குரிய பண்புகள், படிப்பாலோ, பயிற்சியாலோ பெறலாவன அல்ல! பிறவிப் பேறாகக் கருவிலேயே உருவாவதற்குரியன. குலன் அருள் தெய்வம் கொள்கை மேன்மை, கலைபயில் தெளிவு கட்டுரை வன்மை, நிலம் மலை நிறைகோல் மலர்நிகர் மாட்சியும் அமைபவன் 'நூல் உரை ஆசிரியன்' என நல்லாசிரியர்க்குரிய பண்புகளைத் தொன்னூல்கள் தொகுத்துக் கூறுகின்றன. பிள்ளையவர்கள் (உரைவேந்தர்) இப்பெறலரும் பண்புகள் அனைத்தையும் கருவிலே வாய்த்த திருவாகப் பெற்ற பிறவியாசிரியர், ஆசிரியராவார், மாணவர் உள்ளத்தில் தம் மாட்டுத் தனி மதிப்பும் மரியாதையும் தம்மிச்சையாகவே தோன்றச் செய்யும் சான்றோராக அமைதல் வேண்டும். அவர்க்கு இன்றிமை யாத அடிப்படைப் பண்பு, அசைவற்ற தன்னம்பிக்கை; அதனை அடுத்து வேண்டப்படுவன பெருமிதமான தோற்றப் பொலிவு, நகை தவழும் மலர்ந்த முகம், எடுப் பான இனிய குரல், தெளிவான திருத்திய உச்சரிப்பு, அரிய கருத்துக்களையும் எளிய முறையில் எடுத்துச் சொல்லும் சொல்வன்மை, இவையனைத்தும் பிள்ளையவர்களிடம் சிறப்பாக அமைந்திருந்தன. இப்பண்புகள், மாணவர்களை அவரிடம் அழலின் நீங்கார் அணுகார் அஞ்சி, நிழலின் நீங்கா நிறைந்த நெஞ்சமொடு பழகச் செய்தன. அவர் ஒழுக்கமும், உறுதியும், ஒழுங்கும் மாண வர்களை அவரிடம் பக்தியும் பணிவும் கொண்டு ஒழுகச் செய்தன. எத்தகைய துடுக்கான மாணவனும், அவரிடம் அடக்கமின்றி நடந்து கொள்ளத் துணிந்த தில்லை!"

    இவ்வாறு உரைவேந்தரின் ஆசிரியப் பண்புகளை மனங்குளிர எடுத்துரைப்பவர், அவர்பால் தனியே தனித்தமிழ் கற்று, வித்துவான் ஆகித் தமிழாசிரியப் பணிபுரிந்த கோமான் ம.வி. இராகவன் ஆவார்!

    மாவட்டக் கழகப் பள்ளிகளில்....!

    கரந்தையை விட்டு வெளியேறிய உரைவேந்தர், 1929 முதல் 1941 வரை, வட ஆர்க்காடு மாவட்டக் கழக (District Board) உயர்நிலைப்பள்ளிகளில் தமிழாசிரியராகப் பணிபுரிந்தார். அக்காலத்தில் 'தமிழ்ப் பொழிலி'ல் இவர் எழுதிய கட்டுரைகள் மூலம், இவர் காவிரிப்பாக்கம் - காரை, செய்யாறு, போளூர், திருவத்திபுரம், திருவோத்தூர், செங்கம் முதலான பல்வேறு ஊர்களில் தமிழாசிரியராக, தலைமைத் தமிழாசிரியராகப் பணிபுரிந்தமை அறிய முடிகின்றது. அக்கால ஆட்சியாளர்களால், உரைவேந்தர், அடிக்கடி பல்வேறு ஊர்களில் பணிமாற்றம் செய்யப்பட்டார்.

    உரைவேந்தரின் பெருந்தமிழ்ப் புலமைக்கு உரிய இடம், உயர்நிலைப் பள்ளியாகாது; எனினும், தன்னைத் 'தலையாகச் செய்வானும் தான்' என்பதை நன்குணர்ந்தவராதலின், பள்ளிப் பணியிலிருந்து கொண்டே தமது தமிழ்ப் புலமையை மேலும் வளர்த்துக் கொண்டார். பணியேற்ற சில நாட்களுக்குள்ளாகவே இவரின் புகழ் வெள்ளமென எங்கும் விரைந்து பரவலாயிற்று. பள்ளி ஆசிரியர்களும், மாணவர்களும், நகரத்துப் பெரியவர்களும் இவரைப் பற்றிப் பெருமையாகப் பாராட்டிப் பேசலாயினர். பள்ளிப் பணி நேரம் தவிர எஞ்சிய நேரத்தில், நூல் ஆய்வு செய்தல், இதழ்களுக்கு அரிய கட்டுரைகளை அனுப்புதல், இலக்கிய மன்றங்களுக்கும் சமய நிகழ்ச்சிகளுக்கும் சென்று உரையாற்றுதல், இடையிடையே ஏடுகள் படித்தல் எனப் பல்வேறு ஆக்கப் பணிகளை இடையறாது செய்து வந்ததால், அப்போதே நல்ல பேரும் புகழும் கிடைக்கலாயின.

    உரைவேந்தர், சேயாறு கழக உயர்நிலைப் பள்ளியில் தலைமைத் தமிழாசிரியராக இருந்தபோதுதான், புலவர் கா. கோவிந்தன், ம.வி. இராகவன் ஆகியோர், இவர்பால் தனித்தமிழ் கற்க மாணவர்களாகச் சேர்ந்து, முறையே பயின்று, பிற்காலத்தில் சிறப்புப் பெற்றவர்கள்.

    ம.வி. இராகவன் என்பார், தாம் எவ்வாறு உரைவேந்தர்பால் அணுகித் தமிழைக் கற்றார் என்பதை ஒரு கட்டுரையில் விரிவாக எடுத்துரைக்கின்றார்:

      "ஏற்ற ஆசிரியரை எய்தப் பெறாமல் ஏக்கமுற்றிருந்த யான், ஊக்கம் பெற்று அவரை (உரைவேந்தர்) நேரில் ஆய்ந்தறியத் தொடங்கினேன். அவர், பிறரோடு பழகும் பண்பையும், பள்ளியில் பாடம் நடத்தும் பாங்கையும் கவனித்தேன். உரையாற்றும் அவைகட்குச் சென்று, அவர் சொற்பொழிவுகள் பலவற்றைக் கேட்டேன். நான் எதிர்பார்த்த தகுதிகள் யாவும் அவரிடம் ஏற்றமுற நிறைந்திருப்பன கண்டு, என் தமிழ்ப் பசியைத் தணிவிக்கும் தகவுடையார் அவரே எனத் தெளிந்து, அவரை அணுகி என் விருப்பத்தைக் கூறி வேண்டிக் கொள்ளத் துணிந்தேன்!"

    என்று கூறுபவர், 37 அடிகள் கொண்ட பாடலையும் எழுதி உரைவேந்தரின் இல்லத்திற்குச் சென்றார். வீட்டு வெளித் திண்ணையில் புத்தகக் குவியல்களுக்-கிடையே, சிறிய சாய்வு மேசை முன் அமர்ந்து, ஏதோ குறிப்பெடுத்துக் கொண்டிருந்தவரைக் கண்டு வணங்கித் தாம் தமிழ் கற்க விரும்புவதாகக் கூறினார். உரைவேந்தரும் அவரின் தகுதியையும் உணர்ச்சியையும் வேட்கை விருப்பத்தையும் அறிந்து பாடம் சொல்ல இசைவளித்தார். முறையாகத் தமிழ் பயின்று சென்னைப் பல்கலைக்கழக வித்துவான் தேர்வெழுதி, முதல் வகுப்பில் மாநிலத்தில் இரண்டாமவராகத் தேர்ச்சி பெற்று, உயர்நிலைப் பள்ளித் தலைமைத் தமிழாசிரியராக ஏறத்தாழ முப்பது ஆண்டு பணிபுரிந்தார்.

    "இந்நிலைக்கு என்னை உருவாக்கி, வழிகாட்டி, வாழவைத்த வள்ளல் பிள்ளையவர்களேயெனின், அவர் பெருமைக்கு வேறு சான்று வேண்டுவதில்லை !" என்கின்றார் ம.வி. இராகவன்.

    இவ்வாறே உரைவேந்தரிடம் தமிழ் பயின்று 'வித்துவான்' ஆகிப் பின்னர்த் தமிழ் முதுகலை முதலான பட்டம் பெற்றுத் தமிழகச் சட்டமன்றப் பேரவைத் தலைவராகப் பெருமை பெற்றவர் கா. கோவிந்தனாவார். சங்ககால அரசர் வரிசை, சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை முதலான பன்னூல்கள் எழுதியவர். பி.டி.சீனிவாச அய்யங்கார் எழுதிய தமிழர் வரலாறு (History of Tamil) என்ற ஆங்கில நூலைத் தமிழில் மொழிபெயர்த்தவர் என்பதோடு அவர் எழுதிய தவறான முடிபுகள் சிலவற்றைத் தக்க சான்றுகளுடன் மறுத்து, அந்தந்த அதிகாரங்களின் பின்னிணைப்பாகத் தமது கருத்தைத் தந்தவர். இவ்வாறே கால்டுவெல் துரைமகனார் எழுதிய திராவிட மொழி ஒப்பிலக்கணம் (Comparative Grammar of Dravidian Languages) என்ற ஆங்கில நூலையும் தமிழில் மொழிபெயர்த்தவர்.

    உயர்நிலைப் பள்ளிப் பணியின் போதே இத்தகைய நன்மாணவ மணிகளை உருவாக்கினார் என்றால், பின்னர்த் தியாகராசர் கல்லூரிப் பேராசிரியராக அமர்ந்தபோது எத்தகைய தமிழ் உணர்வுள்ள இளைஞர்களை உருவாக்கியிருப்பார் என்று ஊகித்துக் கொள்ளலாம்!

    கழகத் தொடர்பு

    சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்துடனும் அதன் ஆட்சியாளர் வ. சுப்பையா பிள்ளையுடனும் உரைவேந்தர் கொண்ட தொடர்பு மிக நெடிது. 1939 ஆம் ஆண்டில், உரைவேந்தர், வடார்க்காடு மாவட்டம், போளூரில், மாவட்டக் கழக உயர்நிலைப் பள்ளித் தலைமைத் தமிழாசிரியராகப் பணிபுரிந்த சமயம். அப்போது மாவட்டக் கல்வி அதிகாரியாக இருந்த ச. சச்சிதானந்தம் பிள்ளை, அப்பள்ளிக்குப் பார்வையிட வந்தபோது, உரைவேந்தரின் இலக்கண, இலக்கியப் புலமையையும், மாணவர் உள்ளம் ஈர்க்குமாறு கற்பிக்கும் திறனையும், சித்தாந்தச் செந்நெறிப் புலமையினையும், நேரிற்கண்டு வியந்தவர், சென்னையிலிருந்த வ. சுப்பையா பிள்ளையைக் கண்டு, உரை வேந்தரைப் பற்றி வியந்து கூறினார். இத்தகு பெரும் புலமை பெற்றவரின் தொடர்பு, தம் கழகத்திற்குத் தேவையென உணர்ந்த சுப்பையா பிள்ளை, ஒருநாள் போளூருக்குச் சென்றார்; ஆனால் உரைவேந்தர் அப்போது ஊரில் இல்லாமையால், மடல் ஒன்று எழுதி, உரைவேந்தரின் துணைவியாரிடம் கொடுத்துவிட்டுத் திரும்பினார். உரைவேந்தர், அம்மடலைக் கண்டு மகிழ்ந்து, சென்னைக்குச் சென்று, கழக ஆட்சியாளரிடம் உரையாடியதன் விளைவாக, முதற்கண் 'சீவக சிந்தாமணிச் சுருக்கம்' நூல் எழுதியனுப்ப இசைவளித்தார். அந்நூல் அச்சானதும் அடுத்தடுத்துப் பல நூல்கள், கழகத்தின் வழி வெளிவந்தன!

    அரிய ஆராய்ச்சியாளர்

    உரைவேந்தர், தமது தமிழ் ஆய்வுக்கு ஏற்ற அருங்களம் கிடைக்காதா என்று ஏங்கிக் கொண்டிருந்த வேளையில் திருப்பதி திருவேங்கடவன் கீழ்த்திசைக் கல்லூரியில் ஆராய்ச்சியாளர் பணி கிடைத்தது! இரண்டாம் போர்க்காலத்தில் 1942இல் அப்பணியில் அமர்ந்தார். ஆங்கு வேலை பார்த்த வடமொழி, பாலிமொழி போன்ற பிறமொழிப் பேராசிரியர்களின் அரிய நட்புக் கிடைத்தது!

    கழக ஆட்சியாளர் வ.சுப்பையா பிள்ளையின் வேண்டுகோட் கிணங்க, நாவலர் ந.மு.வே. நாட்டார், மணிமேகலைக் காப்பியத்திற்குப் புத்துரை எழுதும் பணியை மேற்கொண்டார். போதிய உடல் நலம் இன்மையால், தம் மகளார் சிவ. பார்வதியம்மையாரைக் கொண்டு பதவுரையும் விளக்கவுரையும் எழுதி, எஞ்சிய நான்கு காதைகளையும் சமய நூல்களை நன்கு ஆராய்ந்து எழுத வேண்டும் என்று எண்ணிய வேளையில், திடுமென இயற்கை எய்தினார். அதன் பின்னர்க் 'கரந்தைக் கவியரசு' வேங்கடாசலம் பிள்ளையின் விருப்பத்திற் கிணங்க, மணிமேகலையின் இறுதி நான்கு காதைகளுக்கும் விளக்கவுரை எழுதிக் கொடுத்தார் உரைவேந்தர். இப்பகுதிகள், புத்த சமயக் கோட்பாடு களையும் தருக்க முறைகளையும் விரிவாக இயம்புவன. எனவே, தாம் பணிபுரிந்த கீழ்த்திசைக் கல்லூரி வடமொழிப் பேராசிரியர் பிரபாகர சாத்திரியார், பாலிமொழிப் பேராசிரியர் ஐயாசாமி சாத்திரியார் ஆகியோரின் உதவியாலும் ஆங்கிருந்த நூல்நிலையத்து அரிய நூல்களின் உதவியாலும் விளக்கவுரை எழுதித் தம் ஆசிரியர்க்குப் புகழ் ஈட்டிக் கொடுத்தார்!

    உரைவேந்தரின் புகழ், தமிழகமெங்கும் பரவத் தொடங்கிற்று. தமிழகத்தின் தலைசிறந்ததாகத் திகழும் அண்ணாமலைப் பல்கலைக் கழகம், கற்று வல்ல பெரும் புலவர்களைப் பேராசிரியர்களாகக் கொண்டது ; நாட்டுக்கும் நற்றமிழுக்கும் பாடுபடும் மாணவ நன்மணிகளை ஆண்டுதோறும் அர்ப்பணித்துக் கொண்டிருப்பது. அத்தகு சீர்சால் கழகம், உரைவேந்தரைத் தன்பால் ஈர்த்தது. 1943 சூன் திங்களில் அப்பல்கலைக் கழக ஆராய்ச்சித் துறையில் விரிவுரையாளராக அமர்த்தப் பெற்றார். ஆங்கே, எட்டு ஆண்டுகள் பணிபுரிந்தார்!

    உரைவேந்தரின் ஆராய்ச்சி மனப்பான்மைக்கு அப்பல்கலைக் கழகம் மேலும் உரமிட்டது. 'சைவ சமய இலக்கிய வரலாறு', ’ஞானாமிர்தம்' முதலான அரிய நூல்கள் இவரால் எழுதப்பட்டுப் பல்கலைக்கழகத்தின் வெளியீடுகளாயின.

    ஆங்கே பணிபுரிந்த பல்வேறு பேராசிரியர்களிடம் பழகவும், நட்புக் கொள்ளவும் உரைவேந்தருக்கு நல்வாய்ப்பாயிற்று. அவர்களில் கல்வெட்டுப் பேரறிஞர், தி.வை. சதாசிவப் பண்டாரத்தார், இலக்கண, வரலாற்று ஆய்வாளர் க. வெள்ளைவாரணனார் ஆகியோர் குறிப்பிடத்தக்கோராவர்! கல்வெட்டு ஆராய்வதில் முன்பே அனுபவம் பெற்றிருந்த உரை வேந்தருக்கு , இவ்விருவரின் நட்பால், அவற்றில் ஈடுபாடு மேலும் மிகுந்தது !

    அண்ணாமலைப் பல்கலைக் கழக ஆராய்ச்சித் துறையில் இருந்தபோது, 'புறநானூறு' போன்ற பல சங்க இலக்கியங்கட்கு விளக்கவுரை எழுத முடிந்தது! பிற்காலத்தில் 'உரைவேந்தர்' என்ற பெரும்புகழ் பெறுதற்கு அடித்தளமாக அமைந்தது இங்கேதான் என்று கூறினும் மிகையாகாது!

    தியாகராசர் கல்லூரிப் பணி

    அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தைப் போலவே, அன்னைத் தமிழின் வளர்ச்சிக்கு ஒருநிலைக்களனாக விளங்குவது மதுரையில் உள்ள தியாகராசர் கலைக்கல்லூரி 'கல்வித் தந்தை' எனப் போற்றப்படும் கருமுத்து தியாகராசச் செட்டியாரால் நிறுவப் பெற்றது. அவர் தொடங்கிய 'தமிழ்நாடு' என்னும் நாளிதழ், நாட்டு மக்களிடையே நல்ல தமிழைப் பரப்பியது உலகறிந்த செய்தி. தமிழின்பால் அளவிறந்த பற்றுக் கொண்ட இவர், தமிழ்ப்புலமை பெறவேண்டும் என்பதற்காகவே, புலவரேறு அ. வரதநஞ்சைய பிள்ளை என்னும் தமிழ் மேதையை வரவழைத்துத் தமது மாளிகையில் ஓரிடம் தந்து இருக்கச் செய்து, அவருக்கு உணவு முதலான பல்வேறு வசதிகள் செய்து கொடுத்து, அவர்பால் தமிழைக் கற்றார் எனின், கருமுத்துவின் ஆழ்ந்த தமிழுணர்வை ஒருவாறு அறிந்து கொள்ளலாம். அவ்வாறே தியாகராசர் கல்லூரியிலும் தமிழில் நன்கு புலமை பெற்ற பேராசிரியர்களைத் தாமே 'நேர்முகக் காண்டல்' மூலம் அறிந்து, பணியில் அமர்த்தியவர். தமிழ்ப் பேரறிஞரும் நாவலர் சோமசுந்தர பாரதியாரின் தலை-மாணவருமான முனைவர் அ.சிதம்பரநாதச் செட்டியாரைக் கல்லூரி முதல்வராக ஆக்கினார். முனைவர் சி.இலக்குவனார், முனைவர் மா. இராசமாணிக்கனார், பைந்தமிழ்ப் பாவலர் அ.கி. பரந்தாமனார் போன்றோர் இக்கல்லூரித் தமிழ்த் துறையை அணிசெய்த பெருமக்களாவர். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்த உரைவேந்தரை, விரும்பி வரவழைத்துத் தம் கல்லூரியில் பேராசிரியப் பணி தந்து பெருமை பெற்றவர் 'ஆலை அதிபர்' கருமுத்துச் செட்டியார்!

    அண்ணாமலைப் பல்கலைக்கழகப் பணியிலிருந்து விலகிய உரைவேந்தர், இக்கல்லூரியில் 1951 சூலைத் திங்களில் பணியிலமர்ந்தார்.

    கற்பிக்கும் முறை

    ஆசிரியத் தொழில் என்பது தெய்வீகத் தொண்டு, 'ஏதோ ஊதியம் வாங்குகின்றோம், எதையோ சொல்லித் தருகின்றோம்' என்றில்லாமல், வருங்காலத் திருநாட்டை ஒளிரச் செய்யும் மாணவ நன்மணிகளை உருவாக்கும் பொறுப்பு நம்பால் உள்ளது என்று எண்ணிக் கடமையாற்ற வேண்டும். இந்திய நாட்டின் குடியரசுத் தலைவராக விளங்கிய டாக்டர் இராதாகிருட்டிணன், இப்போதுள்ள டாக்டர் அப்துல் கலாம் ஆகியோர் நல்லாசிரியர்களால் உருவாக்கப் பட்டவர்கள். இவ்வகையில் உரைவேந்தர், ஆசிரியத் தொழிலுக்கு முற்றிலுமாகத் தம்மை ஆயப்படுத்திக் கொண்டவர். கரந்தைப் பள்ளி, உயர்நிலைப்பள்ளி, திருவேங்கடவன் கீழ்த்திசைக் கல்லூரி, அண்ணாமலைப் பல்கலைக்கழகம் எனப் படிப்படியாக ஒவ்வொரு நிலையிலும் பல்வேறு அனுபவங்களைப் பெற்றதனால் அவை யனைத்தையும் தியாகராசர் கல்லூரியில் பயன்படுத்திப் பேரும், புகழும் பெற்றுக் கொண்டார்.

    கற்பிப்பதில் உரைவேந்தர் கையாண்ட முறை புதுமையானது. மாணவர்களைச் சொற்களுக்குத் தனித்தனியே பொருளுணரச் செய்வதில், கருத்துக்களை அவர்களது உள்ளத் திரையில் உருவோவியமாகப் பதியச் செய்வதையே நோக்கமாகக் கொண்டு, அதற்கு ஏற்பக் கற்பிக்கும் முறையைக் கையாண்டார். குறிப்பாகச் செய்யுட் பாடம் நடத்தும் பொழுது ஒவ்வொரு செய்யுளையும் கருத்து விளங்க, நிறுத்த வேண்டிய இடங்களில் நிறுத்தி, இடத்திற்கு ஏற்ப எடுத்தும் படுத்தும் வலிந்தும் மெலிந்தும் தெளிவாக இசையொடு படித்துக் காட்டுவார். அப்படிப் படிக்கும்போதே, பாட்டின் திரண்ட கருத்து, மாணவர்கள் உள்ளத்தில் நன்றாகப் பதிந்து விடும்; பல சொற்களுக்கு மாணவர்களே பொருள் உணர்ந்து கொள்வர். ஒருகால் பொருள் விளங்காதன இருப்பின், அவற்றிற்குப் பொருள் கூறுவார்.

    உரைநடைப் பாடம் நடாத்துவதிலும் தனிமுறையைக் கையாண்டார். வரிசையாகப் படித்துக் கொண்டு போனால், மாணவர்கள் சோர்வடைவர் என்பதனால், அதன் மையக் கருத்தைச் சுட்டிக் காட்டி, ஒவ்வொரு பத்தியிலும் கூறப்படும் அதன் செய்திகளை வகைப்பட விரித்துரைத்து, முடிவில் அவற்றை நிரல்படத் தொகுத்துக் கூறுவார். இதனால் உரைநடைப் பாடத்திலும் மாணவர்கள் தெளிவும் மனநிறைவும் பெறுவர் !

    தொல்காப்பியம் போன்ற பேரிலக்கண நூல்களைப் பாடம் சொல்வதிலும் உரைவேந்தர் பேரார்வமுடையவர். அவர் கற்பிக்கும் திறத்தினால், மாணவர்கள் இலக்கணத்திலும் ஆழ்ந்த பற்றுக் கொள்வதுண்டு! தொல்காப்பியத்தைப் பாடம் சொல்லும் பொழுது. குறிப்பிட்ட உரையாசிரியரின் உரையை மட்டும் விளக்குவதோடு நின்றுவிடாமல், வேறு உரையாசிரியர்களின் கருத்தையும் ஒப்பிட்டுச் சொல்வார். சில நேரங்களில் தனித்தனித் தலைப்புக்களில் ஆய்வுரைகள் எழுதிவரச் செய்து அம்மாணவர்களை வகுப்பில் படிக்கச் செய்து, திருத்தமும் சொல்வார். இம் முறையால், மாணவர்கள், தாம் பயின்ற நூல்களில் ஐயம் திரிபின்றித் தெளிவு பெறுவர்!

    ’யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்' என்பதற்கேற்பத் தம்பால் கல்வி பயிலும் மாணவர்கள் தம்மைப் போலவே கல்வியறிவில் சிறந்து விளங்க வேண்டும் என்பதே உரைவேந்தரின் நோக்கம்.

    மாணவர்கள் பால் உரைவேந்தர் காட்டிய பேரன்பு எல்லை கடந்தது. அவர்களை, 'ஐயா, ஐயா' என்று அன்போடு அகமிக மகிழ அழைத்திடுவார். தம்மிடம் பயிலும் மாணவர்கள், சிறப்பாகத் தேறிச் சீராக வாழ வேண்டும் என்பதில் அளவற்ற ஆர்வம் கொண்ட அருளாளர் ! தாம் அரிதில் கற்றுத் தேர்ந்த தமிழ்ச் செல்வத்தை மாணவர்கட்கு வாரி வழங்குவதில் 'கல்விக் கொடையாளரா' கத் திகழ்ந்தார். பெரிய கூட்டங்களில் கூடத் தம் மாணவர்கள் அவையஞ்சாது பேசும் திறன் பெற்றவர்களாக விளங்க வேண்டும் என்று எண்ணி, அதற்கான பயிற்சிகளையும் அளிப்பார். தம்மைக் கண்டு அளவளாவ வரும் அறிஞர்கள், புலவர்கள், செல்வர்கட்குத் தம் மாணவர்களையும் அறிமுகப் படுத்தி வைப்பார்!

    உரைவேந்தர், தியாகராசர் கல்லூரியில் பணிபுரிந்தபோது அவர்தம் தமிழ்ப் புலமையையும், சைவ சித்தாந்தத் தேர்ச்சியையும் நேரில் அறிந்த கருமுத்துச் செட்டியார், தம் அருமைத் துணைவியார் திருமதி. 'கலையன்னை ' இராதா தியாகராசனாருக்கு ஆசானாகவும் இருக்கச் செய்தார். சமயம் நேரும்போதெல்லாம் செட்டியாரின் மாளிகைக்குச் சென்று, பரந்துபட்ட தமிழ் இலக்கியச் செல்வத்தையும், ஆழ்கடலென விளங்கும் சைவ சித்தாந்தக் கருத்துக்களையும் அம்மையார் உளங் கொள்ளுமாறு இனிது எடுத்துரைத்தார் ! இதனால், கற்றுவல்ல புலவர்களிடையேயும், செம்மாந்த தமிழ் நடையில் பேசும் பேராற்றலைப் பெற்றார் கலையன்னையார். ச.சாம்பசிவனார், மதுரைத் திருவள்ளுவர் கழகத்தின் செயலாளராக இருந்தபோதுதான் கலையன்னையாரின் முதல் தமிழ்ச் சொற்பொழிவு அரங்கேறியது. 'சிலம்பொலி ' என்ற தலைப்பில், எவ்விதக் குறிப்புமின்றிக் கடல் மடைதிறந்த வெள்ளம் போல் ஒருமணி நேரம் ஆற்றிய அவ்ஒலி, இன்றும் செவி மடுத்தோர்தம் செவிகளில் ரீங்காரம் செய்து கொண்டிருக்கிறது. இதன்பின்னர், அன்னையார் பல்வேறு இலக்கியக் கூட்டங்களிலும் சமய மாநாடுகளிலும் அரியவுரையாற்றியுள்ளார். உரைவேந்தரிடம் தமிழையும் சைவ சித்தாந்தத்தையும் பயின்ற பான்மையினால் தான் இன்றும், தியாகராசர் கலைக் கல்லூரியில் - திங்கள் தவறாமல் சைவ சமயச் சொல்பொழிவுகளைத் தக்க அறிஞர்கள் வாயிலாக நடாத்தி வருகின்றார்! மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளைக்கு ஒரு சாமிநாத ஐயர் வாய்த்தது போல, உரைவேந்தருக்குக் கலையன்னையார் வாய்த்தது தமிழுக்கும் சைவத்துக்கும் ஆக்கமெனலாம்!

    தியாகராசர் கல்லூரியில் உரைவேந்தர்பால் பயின்று வெளி யேறியோர், பிற்காலத்தில் பேராசிரியர்களாக - கவிஞர்களாக - அரசியல் வித்தகர்களாக விளங்கினர்; விளங்கி வருகின்றனர். ஆசிரியத் துறையில் உரைவேந்தர் எய்திய உயர்வு, இயல்பாக அமைந்த வளர்ச்சியேயாகும். ஆசிரியர்க்கு உரிய அரிய பண்புகள் அனைத்தும், இவருக்கு இயற்கையிலேயே இனிதமைந்திருந்தன.

    இவ்வகையில் உரைவேந்தரைப் 'பேராசிரியப் பெருந்தகை' என்று போற்றுவது சாலப் பொருந்தும் எனலாம்.
    --------------------------

    3. நூலாசிரியர்

      "பயனுள்ள வரலாற்றைத் தந்த தாலே
            பரணர்தான்; பரணர்தான் தாங்கள் ! வாக்கு
      நயங்காட்டிச் செவிக்குத்தேன் தந்த தாலே
            நக்கீரர் தான், தாங்கள்! இந்த நாளில்
      கயன் மன்னர் தொழுதமொழி காத்ததனால், தொல்
            காப்பியர்தான் காப்பியர்தான் எங்கும்
      தயங்காமல் சென்று தமிழ் வளர்த்த தாலே
            தாங்கள், அவ் ஒளவைதான்! ஒளவை யேதான்!"

    என்பது உரைவேந்தரிடம் கல்வி கற்றுப் பலர்போற்றும் கவிஞராகத் திகழ்ந்த மீ. இராசேந்திரனின் கவிதை!

    இத் தமிழ்நாட்டில் எண்ணற்ற தமிழ்ப் பேரறிஞர்கள், மாநாடுகளிலும் மேடைகளிலும் பேசிய பேச்சுக்கள், நூலாக எழுதாமையால், காற்றோடு காற்றாக மறைந்து போயின. அவ்வாறே கல்லூரி, பல்கலைக்கழகங்களில் பெரும் பேராசிரியர்களாக இருந்தவர்கள் கூடத் தமது நுண்மாண் நுழைபுலத்தை நூல் வடிவில் காட்டாது போயினர்! சிலர், மேடை முழக்கமிடுவர்; ஆனால் எழுத்துத் திறமை இருக்காது! அவ்வாறே, அரிய பல நூல்களை எழுதுவர்; ஆனால், மேடையேறிப் பேசும் நாவன்மை இருக்காது. இவ்விரண்டும் ஒரு சேரப் பெற்றவர் ஒரு சிலரே! அவருள் ஒருவராக விளங்குபவர் உரைவேந்தர்!

      "பிள்ளையவர்கள் (உரைவேந்தர்) இணையற்ற பேராசிரியர் மட்டுமன்று, ஈடற்ற நூலாசிரியருமாவர்! தம் கோள் நிறுவவும், தம் பெயர் பரப்பவும், தம் வாழ்வுக்கு வசதி பெறவும் நூலியற்றுவோர் பலர்! தமிழ்மொழியின் உயர்நிலையில் உள்ள குறையை நிறைவு செய்யவும், அதன் நூல்வளம் பெருக்கவும், நூலியற்றுவோர் ஒரு சிலரே! அவ்வொரு சிலருள், பிள்ளையவர்களும் ஒருவராவர்!"

    என்று உரைவேந்தரின் நூலாக்கப் பணியைப் போற்றுகின்றார், அவரின் மாணவர் ம.வி. இராகவன்.

    நூற் பட்டியல்

    பி.வி. கிரி என்பார் தாம் தொகுத்த 'உரைவேந்தருக்கு ஒரு நூற்றாண்டு' என்னும் சிறுவெளியீட்டில், உரைவேந்தர் எழுதிய நூல்களைப் பின்வருமாறு பட்டியலிட்டுக் காட்டுகின்றார்:

      1. திருமாற் பேற்றுத் திருப்பதிகவுரை,
      2. திருவோத்தூர் தேவாரத் திருப்பதிகவுரை,
      3. ஐங்குறுநூறு உரை
      4. புறநானூறு உரை,
      5. பதிற்றுப்பத்து உரை,
      6. நற்றிணை உரை,
      7. ஞானாமிர்தம் உரையும் விளக்கமும்,
      8. சிவஞான போத மூலமும் சிற்றுரையும் பதிப்பும்,
      9. சிலப்பதிகாரச் சுருக்கம்,
      10. மணிமேகலைச் சுருக்கம்,
      11. சீவகசிந்தாமணிச் சுருக்கம்,
      12. சூளாமணி,
      13. சிலப்பதிகார ஆராய்ச்சி,
      14. மணிமேகலை ஆராய்ச்சி,
      15. சீவகசிந்தாமணி ஆராய்ச்சி,
      16. யசோதர காவியம் மூலமும் உரையும்,
      17. தமிழ் நாவலர் சரிதை -மூலமும் உரையும்,
      18. சைவ இலக்கிய வரலாறு,
      19. நந்தா விளக்கு,
      20. ஒளவைத் தமிழ்,
      21. தமிழ்த் தாமரை,
      22. பெருந்தகைப் பெண்டிர்,
      23. மதுரைக் குமரனார்,
      24. வரலாற்றுக் கட்டுரைகள் (வரலாற்றுக் காட்சிகள்),
      25. சேரமன்னர் வரலாறு,
      26. சிவஞானபோதச் செம்பொருள்,
      27. திருவருட்பாப் பேருரை,
      28. ஞானவுரை,
      29. பரணர் (கரந்தை ),
      30. தெய்வப்புலவர் திருவள்ளுவர்,
      31. புதுநெறித் தமிழ் இலக்கணம் (இரு பகுதிகள்),
      32. மருள் நீக்கியார் நாடகம்,
      33. மத்த விலாசம் (மொழிபெயர்ப்பு),
      34. Introduction to the Study of Thiruvalluvar.

    உரைவேந்தர், அக்காலத்தில், 'தமிழ்ப் பொழில்', 'செந்தமிழ்ச் செல்வி', 'செந்தமிழ்' மற்றும் மலர்களில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பாக வெளிவந்த சில நூல்களும் இப்பட்டியலில் உள்ளன. 'ஒளவைத் தமிழ்' எனும் பெயரில் வெளிவந்த நூல்தான், 'நந்தா விளக்கு' எனும் பெயரில் மறுபதிப்பாக வந்துள்ளது.

    இவற்றை ஊன்றி நோக்கினால், இவற்றில், சங்க இலக்கியங்கள் உண்டு; காப்பியங்கள் உண்டு; வரலாறு உண்டு; சைவமும் சைவ சித்தாந்தமும் உண்டு; நாடகம் உண்டு; மொழிபெயர்ப்பும் உண்டு; ஆங்கிலமும் உண்டு என்பது தெரியவரும்.

    மேலும், முதன் முதலாக உரைவேந்தர் எழுதியது. மருள் நீக்கியார்' என்ற நாடக நூல் என்றும், அஃது அச்சாகவில்லை என்றும் கூறுகின்றார் தி.நா. அறிவொளி.

    ஏடுபெயர்த்தலும் கல்வெட்டு ஆய்வும்

    தமிழகத்தைப் பொறுத்தமட்டில், அச்சுக் கருவிகள் வருவதற்கு முன்பு, பனை ஓலையில் எழுதும் பழக்கமே இருந்தது. சங்க காலத்திற்கு முன்பிருந்தே இத்தகு பழக்கம் தமிழர்களிடம் இருந்து வந்துள்ளது. இரண்டு கடல் கோளினால் அழிந்துபோன ஏடுகள் எண்ணில் பலவாம்! தமிழர் செய்தவத்தால் எப்படியோ தொல்காப்பியம் மட்டும் கிடைத்தது. மூவேந்தர் ஆட்சி முடிவுக்கு வந்த பின், வேற்றவராட்சியால், தமிழகம் பட்டபாடு சொல்லுந் தரமன்று; அந்நிலையில் ஏடுகளைப் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டுமே என்ற எண்ணம் பலருக்கு இல்லாமற் போனதில் வியப்பேதுமில்லை. அன்றியும் அறியாமையால் அழித்த ஏடுகள் எண்ணிறந்தன. ஆடிப்பதினெட்டாம் பெருக்கின்போது, ஒவ்வொருவரும் தத்தம் வீட்டிலிருந்த ஏடுகளைக் காவிரியாற்றில் போட்டனர் என்பது வரலாறு. எப்படியோ சில ஏடுகள் தப்பித்தன. இவ் வேடுகளைத் தேடிக் கண்டுபிடித்து அச்சுக்குக் கொண்டு வந்த பெருமை தமிழ்த் தாத்தா' உ வே சாமிநாத ஐயருக்கு உண்டு. அதில் அவர்பட்ட பாடுகளை என் சரித்திரம்' நூலில் விரிவாக எழுதியுள்ளார்.

    உரைவேந்தருக்கு இளமையிலிருந்தே ஏடு படிக்கும் ஆர்வம் இருந்து வந்தது. அவருக்கு முதன் முதல் தமிழ் அறிவுறுத்திய ஆசிரியர், திண்டிவனம் அ. ஆ. நா. உயர்நிலைப் பள்ளித் தமிழாசிரியராய் இருந்த சீகாழி கோவிந்தசாமி ரெட்டியார், தம் வீட்டில் ஏடுகள் பல வைத்திருந்ததை அறிந்த உரைவேந்தர், ஆர்வம் காரணமாக அவ்வப் போது, அந்த ஏடுகளைப் படிப்பது வழக்கம். அதுவே பிற்காலத்தில் நூல் ஆய்வு செய்வதற்கு உறுதுணையாயிற்று எனலாம்.

      "1921ஆம் ஆண்டில், கோடைவிடுமுறையில், எனக்குத் தமிழ் கற்பித்த ஆசிரியர், சீகாழி திரு. கோவிந்தசாமி ரெட்டியார் அவர்கள், இந்நூலின் (சூளாமணி) அச்சுப்படி ஒன்றும், ஏட்டுச் சுவடி ஒன்றும் வைத்து, ஒப்பு நோக்கிப் பல திருத்தங்களும் விடுபட்டசில பாட்டுக்களும் சேர்த்துக்கையெழுத்துப் படியொன்று ஆயத்தம் செய்தார்கள். ஏடு படித்த வருள் யானும் ஒருவன் ஆயினும், அத்துணைத் தமிழ்ப் பயிற்சியில்லாமையால், அப் ’படி'யில் கருத்தூன்றாது போயினேன்!"

    என்று உரைவேந்தர் குறிப்பிடுவது இங்குக் குறிக்கத் தகும்.

    தமிழ் ஏடுகளைப் படித்து உண்மை காண்டல் என்பது ஓர் அரிய செயல். இது குறித்து உ.வே. சாமிநாத ஐயர் 'என் சரித்திரத்தில் கூறுவது இங்கு நோக்கத் தகும்:

      "பாடபேதக் கடலுக்குக் கரைகாணவே முடியவில்லை. மனம் போன போக்கிலே எழுதிய கனவான்களால் விளைந்த விபரீதம் எவ்வளவோ ஏட்டில் உண்டு . இது 'கொம்பு', இது சுழி', என்று வேறுபிரித்து அறிய முடியாது. மெய்யெழுத்துக்குப் புள்ளியே இராது. 'ரகரத்திற்கும், காலுக்கும் (ரா) வேற்றுமை தெரியாது. 'சரபம்', 'சாபமா' கத் தோற்றும்; 'சாபம்', 'சரபமா'கத் தோற்றும். "இடையின ரகரத் திற்கும், வல்லின றகரத் திற்கும் பேதம் தெரியாமல் தடுக்கி நின்ற இடங்கள் பல! உரை இது, மூலம் இது, மேற்கோள் இது என்ற வேறுபாடு தெரியாமல் முட்டுப்பட்ட சந்தர்ப்பங்கள்
      பல!"

    - இத்தகைய இடர்ப்பாடுகள் உள்ளமையால்தான், தமிழ்ப் புலவர் பலரும் ஏடுபடிப்பதிலும், படி' எடுப்பதிலும் ஆர்வம் காட்டாது போயினர். அந்த நிலையிலும் ஒரு சிலர் அரும்பாடுபட்டு அவற்றை நுட்பமாகப் படித்துப் பொருள் உணர்ந்து, நூல் வடிவில் கொண்டு வந்தனர். அவர்களில் ஒருவர் உரைவேந்தர்!

    உரைவேந்தர் கரந்தையிலிருந்தபோது தம் ஆசிரியர் வேங்கடாசலம் பிள்ளையின் விருப்பத்திற்கிணங்கச் சிதம்பரம் மீனாட்சி கல்லூரியில் முதல்வராகப் பணி புரிந்த உ வே. சாமிநாத ஐயரிடமிருந்து தொல்காப்பியம் - சொல்லதிகாரம் - தெய்வச் சிலையார் உரையின் ஏட்டுச்சுவடியை வாங்கிவரச் சென்றார். ஆங்கு ஐயரைக் கண்டு, விவரம் கூறினார். அவரும் அந்த ஏட்டை உரைவேந்தரிடம் கொடுத்து, இதனைப் படி' என்று சொல்ல, எவ்விதப் பிழையுமின்றி ஏட்டினைப் படித்தார். அதனைக் கேட்டு மகிழ்ந்த ஐயர், "நீங்களும் , ஏட்டில் உள்ள பழைய நூல்களைக் கண்டு ஆராய்ச்சி செய்யலாம்; அதற்கான தகுதி உங்களிடம் உள்ளது!" என்று பாராட்டினார். அப்பாராட்டு, உரைவேந்தருக்குப் பேரூக்கம் அளித்தது. அன்று முதல், ஏடு படித்து ஆராய்வதில் மேலும் ஆர்வமுடையவரானார்!

    கரந்தையில் இருந்தபோது, மேற்கூறிய தொல்காப்பியம் - தெய்வச் சிலையார் உரையுள்ள ஏட்டினைப் படிப்பதும் அதனைப் பெயர்த்து எழுதலுமாகிய பணிகள் தரப்பட்டன. பின்பு, தமிழ்ப் பொழில் இதழில் தொடர்ந்து அது வெளிவந்தது. அப்போது இதழாசிரியராக இருந்த 'கவியரசு' அரங்க. வேங்கடாசலம் பிள்ளை , அந்த ஓலைச்சுவடி படிப்பதில் உரைவேந்தருக்கு இடை யிடையே எழும் ஐயங்களைப் போக்குவதிலும், பிற உரை யாசிரியர்களான இளம்பூரணர், சேனாவரையர், நச்சினார்க்கினியர் ஆகியோரின் உரை நலங்களை ஒப்பிட்டு விளக்கம் அளிப்பதிலும், உரைவேந்தருக்குப் பெருந்துணை புரிந்தார்.

    ஏடு படித்தல், பெயர்த்தெழுதல் முதலானவற்றில் போதிய பயிற்சி பெற்ற உரைவேந்தர், கல்வெட்டறிஞர் தி.வை சதாசிவப் பண்டாரத்தாரின் உதவியால் கல்வெட்டுக்களைப் படிப்பதிலும், 'படி' எடுப்பதிலும் திறமை பெற்றார். இதற்கான சான்று ஒன்று:

    மதுரைத் தமிழ்ச் சங்கச் செந்தமிழ்க் கல்லூரியில் பேராசிரியராகப் பணிபுரிந்த ச. சாம்பசிவனார், புலவர் இறுதியாண்டு மாணவர்கட்குத் 'தென்னிந்தியக் கல்வெட்டுக்கள் ' பாடம் நடத்த வேண்டியிருந்தது. மதுரைக்கு அருகே உள்ள ஒற்றைக்கடை மலையடிவாரத்தில் நரசிங்கப் பெருமாள் கோயிலைப் பற்றிய கல்வெட்டும் பாடத்தில் இடம் பெற்றிருந்தது. இது பற்றி மாணவர்கட்கு நேர்முகப் பயிற்சி அளிப்பதற்காகச் சங்கச் செயலர் அற நெறியண்ணல்' கி. பழநியப்பனார், மற்றும் கல்லூரிப் பேராசிரியர்கள், வகுப்பு மாணவர்கள் ஆகியோருடன் உரைவேந்தரையும் உடன் அழைத்துக்கொண்டு கல்வெட்டுப் 'படி' எடுப்பதற்கான கரி, மெல்லிய தாள் முதலான கருவிகளுடன் ஆங்கே சென்றோம். உரைவேந்தர், அக் கல்வெட்டைப் படித்துப் பாடநூலோடு ஒப்பிட்டுக் காட்டி விளக்கமளித்ததுடன், அதனை எவ்வாறு படி எடுப்பது என்பதையும் செயல்முறைப் பயிற்சியால் செய்து காட்டினார். ஆசிரியர்கட்கும் மாணவர்கட்கும் பெரும் பயனாக அமைந்தது!

    இவ்வாறு கல்வெட்டில் நல்ல பயிற்சியும், திறமையும் பெற்றதனால் தான், உரைவேந்தர் தாம் எழுதிய பல்வேறு நூல்களிலும் ஆங்காங்கே கல்வெட்டுச் சான்றுகள் தந்து, மெய்ப்பிக்க முடிந்தது!

    நூல்களும் உரைகளும்

    முன்னர்க் காட்டியவாறு உரைவேந்தர் எழுதிய நூல்கள் முப்பத்து நான்கு எனத் தெரிய வருகின்றது. இவற்றில் சிலவற்றைப் பற்றி முழுமையாகத் தெரிவதற்கில்லை. இருப்பினும் இன்றி யமையாத நூல்களைப் பற்றியும், உரைகளைப் பற்றியும் இவண் அறியலாம்.

    சங்க இலக்கியமான எட்டுத் தொகை யில் நற்றிணை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, புறநானூறு எனும் நான்கு நூல்களுக்கு விரிவான விளக்க உரை எழுதியுள்ளார் உரைவேந்தர். ஒவ்வொரு நூலைப் பற்றியும் விரிவாக எழுத இடமுண்டு. ஈண்டுச் சிலவே சுட்டப்படுகின்றன.

    புறநானூறு மூலமும் உரையும்

    400 பாடல்கள் கொண்ட இதனை முதன் முதல் அச்சேற்றி நூல் வடிவில் கொணர்ந்தவர் உ வே. சாமிநாத ஐயராவர் ! எனினும் உரைவேந்தர் எழுதிய இந்நூலில் சில தனிச் சிறப்புக்கள் உண்டு.

    உண்மையில் இந்நூலுக்குப் பழையோர் ஒருவர் எழுதிய பழைய உரையும் ஒன்று உண்டு. அஃது 1 முதல் 266 வரையுள்ள பாட்டுக்களுக்கு மட்டுமே கிடைத்துள்ளது. 267,268 ஆகிய இரண்டும், முற்றிலுமாக இல்லை . 269 முதல் 400 வரையுள்ள பாடல்களுக்கு உ வே. சாமிநாதஐயர் குறிப்புரை தந்துள்ளார்.

    உரைவேந்தர் எழுதிய உரைநூல், இரண்டு பகுதிகளாக 1947; 1951ஆம் ஆண்டுகளில் வெளிந்துள்ளன.

    எனினும் பழைய உரை கிடைக்காத 269 முதல் 400 வரையுள்ள 132 செய்யுள்களுக்கும் உரைவேந்தர், புத்துரை வரைந்திருப்பது பெருஞ் சிறப்பாகும்.

    உ வே.சா.வின் புறநானூற்றுப் பதிப்பை ஒப்பிட்டுச் செப்பம் செய்வதற்கு வாய்ப்பாகப் புறநானூறு ஓலைச்சுவடி ஒன்று உரைவேந்தருக்குக் கிடைத்தது. பல்கலை வல்லுநரும் பெருஞ் செல்வருமாகிய அரித்துவாரமங்கலம் வா. கோபாலசாமி ரகுநாத ராசாளியாரின் விருப்பப்படி, அவரிடமிருந்த புறநானூற்று ஓலைச் சுவடியைப் பள்ளியூர்த் தமிழாசிரியர் கிருட்டிணசாமி சேனை நாட்டார் 'படி' எடுத்து வைத்திருந்தார். அந்தப் படி' (copy) உரைவேந்தரின் புறநானூற்றுப்பதிப்புக்கு அடித்தளமாக அமைந்தது . உ .வே.சா.வின் அச்சுப்புத்தகத்தில், பின்னுள்ள 200 செய்யுட்களில் சிலபாட்டுக்களில் விடுபட்டிருந்த அடிகளும், சிலவற்றில் சில திருத்தங்களும், இந்த ஓலைச் சுவடி உதவியினால் செப்பம் பெற்றன. இது குறித்து உரைவேந்தர்,

      "இப் பிரதி திரு. டாக்டர் ஐயரவர்களுக்குக் கிடைக்காது போனது பற்றி என் மனத்தில் ஐயமொன்று ஊசலாடிக் கொண்டிருந்தது. டாக்டர் ஐயரவர்களுடைய முயற்சிக்கும் அகப்படாத நிலையில் ஏடுகள் பல தமிழ்நாட்டில் உள்ளன என்று ஐயம் தெளிந்தேன்!"

    என்கிறார்.

    பதிற்றுப்பத்து உரை

    பண்டைநாளைச் சேமன்னர் வரலாற்றை அறியப் பெரிதும் துணைபுரிவது பதிற்றுப்பத்து' என்னும் சங்க இலக்கிய நூலாகும். இதனை முதன் முதல் 1904 ஆம் ஆண்டு, பழைய உரையுடன் வெளியிட்டவர் உவே.சா. ஆவார்! இந்த அச்சுப் பதிப்பை வேறு இரண்டு சுவடிகளுடன் ஒப்பு நோக்கி விளக்கவுரை எழுதினார் உரை வேந்தர். அப்பதிப்பு 1951இல் கழக வெளியீடாக வெளிவந்தது.

    பதிற்றுப்பத்துக்கு உரைவேந்தர், உரை எழுதுவது அறிந்த அவருடைய ஆசிரியர் வேங்கடாசலம் பிள்ளை, மிக்க மகிழ்ச்சி கொண்டு, தாம் அந்நூலுக்கு எழுதி வைத்திருந்த உரையையும் கொடுத்து உதவினார். அவ்வாறே ந.மு.வே. நாட்டாரும், 'பதிற்றுப்பத்துப் பதிகங்கள், ஆராய்ச்சிக்கு இடமளிப்பதால் அவற்றுக்கு உரையெழுத வேண்டா; பதிற்றுப்பத்து ஓலைச் சுவடியில் கடவுள் வாழ்த்துச் செய்யுள் காணக்கிடைக்கவில்லை யாதலால் தொல்காப்பியப் பொருளதிகார உரையில் வரும் எரியன்ன நிறுத்தன்' என்று தொடங்கும் பாடலையே கடவுள் வாழ்த்தாகக் கொள்ளலாம்!" என்றும் உரைவேந்தருக்குக் கூறினார். இவ்வகையில் தம் ஆசிரியர் இருவர்க்கும் உரைவேந்தர் நன்றி பாராட்டுகின்றார்.

    பதிகங்களுக்கு உரை எழுதப் பெறவில்லை ஆதலால், தி.வை. சதாசிவப் பண்டாரத்தார் எழுதிய பதிகங்கள் பற்றிய ஆராய்ச்சி யை, இப்பதிற்றுப்பத்து நூலின் முன்னுரையில் அமைத்துக்கொண்டார் உரைவேந்தர்.

    ஐங்குறுநூறு உரை

    சங்க இலக்கியங்களில் ஒன்றான 'ஐங்குறுநூற்றில், முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல், பாலை' என ஐந்து அகத்திணைப் பாடல்கள் உண்டு. இவற்றில், 'மருதத்திணைக்கு மட்டும், முதற்கண் உரையெழுதத் தொடங்கினார் உரைவேந்தர். இந்நூல் 1938இல் வெளிவந்தது. இதனைப் பதிப்பித்தவர், உரைவேந்தரின் நன் மாணாக்கராகிய புலவர் கா. கோவிந்தன். இந்நூல் தோன்றிய காரணத்தைப் பின்வருமாறு புலப்படுத்துகின்றார் கோவிந்தன்:

      "யாங்கள் சேயாறு போர்டு உயர்கலாசாலையிற் கல்வி பயின்று வரும்போது, ஆசிரியர் திரு .ஒளவை சு. துரைசாமி பிள்ளையவர்கள் இவ்விளக்கவுரை யினை எழுதிவரக் கண்டோம். அவர்கள், எங்களுக்குத் திருக்குறளும் தொல்காப்பியச் சேனாவரையமும் கற்பித்து வருகையில், இடை யிடையே இந்நூற் செய்யுள்களின் பொருணலங் களை எடுத்துக் கூறுவர். யாங்களும் கேட்டுப் பெருமகிழ்வு கொள்வோம். மேலும், யாங்கள் மதுரைத் தமிழ்ச் சங்கப் பரீட்சைக்குப் படிக்க விரும்பியகாலத்தில், அப்பரீட்சைக்காக வரை யறுக்கப் பெற்ற மருதப் பகுதியின் உரையினைப் படிக்க நேர்ந்தபோது, இவ்வுரை எங்கட்குப் பேரின்பம் பயந்தது. இன்னோரன்ன நலங்களால் பேரூக்கம் கொளுத்தப் பெற்ற யாங்கள் இதனை வெளியிடுவது தக்கதெனத் துணிந்து இவ்வெளி யீட்டுச் செயலில் மேற்கொள்ளத் தொடங்கினோம்!"

    மேலும், இவ்வுரைநூல் அத்துணை எளிதாக வெளிவரவில்லை. தமிழ்ப்புலவர் சிலரும், செல்வர் சிலரும், "விளக்கவுரை எழுதிப் பதிப்பிக்கும் பணியிலிருந்து விலகிக் கொள்ளுமாறு" உரை வேந்தரை வற்புறுத்திப் பல்வேறு இடையூறுகளும் செய்யலாயினர். இத்தடைகளை எல்லாம் தாண்டித்தான் இவ்வுரைநூல் வெளிவந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    ஐங்குறுநூறு முழுமைக்கும், உரைவேந்தர் எழுதிய உரை விளக்கத்துடன், அண்ணாமலைப் பல்கலைக்கழகம் வெளியிட்டது.

    நற்றிணை உரை

    சங்க இலக்கியங்களில் ஒன்றான 'நற்றிணை'யை முதன் முதல் வெளியிட்டவர் பின்னத்தூர் அ . நாராயணசாமி ஐயர் ஆவார். ஓலைச் சுவடியிலிருந்து இந்நூலின் மூலத்தைத் தாம் எழுதிய உரையுடன் அச்சு வடிவில் கொணர்ந்தவர்.

    ஒருமுறை, சென்னை சைவசித்தாந்த மகாசமாசத்தின் செயலாளராக இருந்த மா. பாலசுப்பிரமணிய முதலியாருடன், பேராசிரியர் வையாபுரிப் பிள்ளையைக் காணச் சென்றார் உரைவேந்தர். அப்போது, உரைவேந்தரின் ஐங்குறுநூற்று உரை விளக்கத்தைத் தாம் படித்து மகிழ்ந்ததாகக் கூறிய வையாபுரிப் பிள்ளை, தம்மிடமிருந்த நற்றிணை ஏடு ஒன்றைத் தந்து, 'இதனையும் நீங்கள் ஆராய்ந்து வெளியிட வேண்டும்' என்று கூறினார். அவ்வாறே நற்றிணைக்கு உரை எழுதத் தொடங்கிய உரைவேந்தர், பின்னத்தூராரின் அச்சுப் பதிப்பை, நற்றிணையின் நான்கு ஏடுகளுடன் ஒப்பிட்டுப் பார்க்குங்கால், ஆயிரத்து ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட பாட வேறுபாடுகள் காணப்பட்டன. எனவே, போதிய உரை விளக்கத்துடன் கூடிய நற்றிணையை உருவாக்கினார் இவர்!

      "கரும்பைக் கணுக்கணுவாகத் தறித்துச் சுவை காண்பது போலப் பாட்டைத் தொடர் தொடராகப் பிரித்துப் பொருள் உரைப்பது, பழைய உரைகாரர் களான பரிமேலழகர், நச்சினார்க்கினியர் முதலியோர் கைக்கொண்ட முறை யாகும். அம்முறையிலேயே இவ்வுரையும் அமைந் திருப்பதால், படிக்கும்போது பல இடங்கள், 'உரைவேந்தர் உரையோ, பரிமேலழகர் முதலியோர் உரையோ?' எனப் பல முறையும் நம்மை மருட்டுகிறது!"

    என இந்நூலின் சிறப்பை விதந்து பாராட்டுகின்றார். 'கலையன்னை இராதா தியாகராசனார் !

    காப்பிய நூல்கள்

    ஐம்பெருங் காப்பியங்களில், சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி முதலான மூன்றுக்கும்; ஐஞ்சிறுகாப்பியங்களில் சூளாமணி, யசோதர காவியம் எனும் இரண்டுக்கும்; உரை கண்டுள்ளார் உரைவேந்தர். இவற்றில் முதல் மூன்றுக்கும் சுருக்கம்' எழுதியதனோடு அமையாமல் விரிந்த ’ஆராய்ச்சி'யும் எழுதியுள்ளார்.

    கழகம் 1985இல், வெளியிட்ட 'மணிமேகலை' உரைநூலுக்கு முதல் 26 காதைகளுக்கு ந.மு.வே. நாட்டார் உரை எழுதியுள்ளார் அவரது உடல்நிலை காரணமாக அதற்குமேல் எழுத இயலவில்லை எனவே, எஞ்சிய 4 காதைகளுக்கு உரை எழுதும் பணி உரைவேந்தருக்குத் தரப்பட்டது. இந்நான்கு காதைகளுமே, பௌத்த சமயக் கருத்துக்களையும், பிறசமய வாதங்களையும் விரித் துரைக்கும் சிக்கலானவை என்பர் அறிஞர். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பணிபுரிந்த போது, உரைவேந்தர், இப்பகுதிகட்கு, நாட்டார் கையாண்ட அதே முறையைப் பின்பற்றி எழுதினார். 'காதை யின் தொடக்கத்தில் அதன் சுருக்கம்; பின்பு, பகுதி பகுதியாக உரை என அமைந்துள்ளது. சமயக் கணக்கர் தந்திறம் கேட்ட காதை யில், அளவை வாதம், நிகண்ட வாதம், சாங்கிய வாதம், வைசேடிகவாதம், பூதவாதம் விளக்கப்படுவது கொண்டு உரைவேந்தரின் கடின உழைப்பைப் புரிந்து கொள்ளலாம்.

    இதற்கு முன்பே , 'மணிமேகலைச் சுருக்கம்' 1943ஆம் ஆண்டிலேயே, அதாவது, உரைவேந்தர், திருப்பதியில் பணிபுரிந்த காலத்திலேயே வெளிவந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    ’மணிமேகலை’க் காப்பியத்தின் சிறப்புக் குறித்து உரைவேந்தர் கூறுவது, மனங்கொளத்தகும்:

    "பண்டை நாளில் விளங்கியிருந்த நூலாசிரியர், உரையாசிரியர் பலரும் பெரிதும் ஈடுபட்ட தமிழருமை வாய்ந்தது இந்த அரிய காப்பிய நூல்! 'கற்பனைக் களஞ்சியமாக விளங்கிய துறைமங்கலம் சிவப்பிரகாச அடிகள், தாம் அருளிய திருவெங்கைக் கோவை'யில், கொந்தார் குழல் மணிமேகலை நூல் நுட்பம் கொள்வதெங்ஙன்?" என்றும்; அம்பிகாபதி என்பவரால், அம்பிகாபதிக் கோவைக்கண், 'மாதவி பெற்ற மணிமேகலை நம்மை வாழ்விப்பதே ' என்றும், தொனி நயம்படப் போற்றி உரைத்த அருமையுடையது; அழகிய செம்பாகமான நடையழகு வாய்ந்தது; ஏனைச் சீவகசிந்தாமணி, சிலப்பதிகாரம் என்ற இரண்டினும் எளிய நடை பொருந்தியது ; ஆங்காங்குச் சிதறித் தோன்றும் வளையாபதி, குண்டலகேசி என்ற காப்பியச் செய்யுட்களை நோக்க அவற்றினும் நடையழகு சிறந்திருப்பது. காவிரிப்பூம்பட்டினம், வஞ்சி, காஞ்சி முதலிய பெருநகரங்களின் பண்டைச் சிறப்பை எடுத்துக் காட்டுவது; இயற்கை அழகை இனிது காட்டி மகிழ்வுறுத்துவது; புத்த தருமங்களையும் பண்டைநாளில் தமிழகத்தில் நிலவிய பல சமயக் கருத்துக்களையும் விளங்க அறிவிப்பது; நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரத்தின் தொடர்ச்சியாக, கோவலனுக்கும் மாதவிக்கும் பிறந்த மகளாக மணிமேகலையின் துறவு நெறியைச் செஞ்சொற் சுவை ததும்பச் சொல்லும் சீர்மையுடையதாகும்!"

    உரைவேந்தர், செங்கம் மாவட்டக் கழக உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராக இருந்தபோதே எழுதிய நூல் சீவக சிந்தாமணிச் சுருக்கம்!' ஏறத்தாழ 3000க்கு மேற்பட்ட செய்யுட்கள் கொண்ட இந்நூலினைப் படிக்க மலையுறுவோர்க்குப் பெரிதும் பயன்படுமாறு கதைத் தொடர்பும், இனிமையும் குறையாதவாறு, சுருக்கி எழுதப்பட்ட ஓர் அருமையான நூல் இது! நூலின் தொடக்கத்தில் ஓர் ஆராய்ச்சி முன்னுரையும் தந்துள்ளார்!

    ஐஞ்சிறு காப்பியங்களில் ஒன்றான சூளாமணிச்சுருக்கம்' கழக வெளியீடாக 1970இல், வெளி வந்துள்ளது. இதன் முன்னுரையில் உரைவேந்தர் எழுதும் பகுதி, சிந்தனைக்கு விருந்தாக உள்ளது:

      "சமணமுனிவர்கள் நம் இனிய தமிழ் மொழிக்கண் செய்துள்ள காவியங்களுள், தேன் மணக்கும் தமிழ் நடையும், செம்மை மணக்கும் கருத்துக்களும் கொண்டு, படிப்போருள்ளத்தை உண்மைப் புலமையின் நுட்பத்தை நன்கறிந்து பேரின்ப மடையச் செய்யும் பெருமை யுடையது, இச் 'சூளாமணி' யேயாகும். இயற்கை யன்னையின் இன்பத் தோற்றத்தை நம் உள்ளக் கிழியில் எழிலொழுக எழுதிக் காட்டும் இனிய தூரியக் கோல் இச் செந்தமிழ்க் காவியம் என்பதற்கு என் உள்ளம் ஆசைப்படுகின்றது!"

    இவ்வாறு கூறும் இவர், இந்நூலினைச் சிறுகாப்பிய வரிசையில் சேர்த்தவரின் சிறுமை எத்தகையது என்பதைப் பின்வருமாறு சுட்டுகின்றார்:

      "சிறுகாவிய மென்பனவற்றுள் இதனை ஒன்றாக வைத்தவர், சிறுமை பெருமைகளைத்தெரிந்துணரும் மதுகையில்லாதவர் என்று கூறலாம்; ஏனெனில் காவிய நெறியிலாதல், கவிநடையிலாதல், கருத்து வகையிலாதல் இதன்கண் எத்தகைய சிறுமையும் காணப்படவேயில்லை"

      "சிந்தாமணிக்குப் போல, இச்சூளாமணிக்கும் உச்சி மேற் புலவர் கொள்ளும் நச்சினார்க்கினியர் ஓர் உரை எழுதி யிருப்பாராயின், இச்சூளாமணி, தமிழ்ப் புலவர் அனைவர்க்கும் சூளாமணியாய் மிகவிளங்கி யிருக்கும் என்று இனிது எடுத்து மொழியலாம்!"

    உரைவேந்தர் எழுதிய உரைநூல்களில் 'யசோதர காவியம்' என்பது மொன்று. பொதுவாக, மிகுந்த அளவில் பயிற்சியில்லாத நூல், எனினும் இதற்கும் உரை எழுதியுள்ளார். இஃது ஒரு சமண சமய நூல், முதன்முதலில் வடமொழியில் இயற்றப்பட்டது. பின்பு தமிழில் யாக்கப்பட்டது. 5 சருக்கம்; 330 செய்யுட்கள் கொண்டது. ஆனால் இதன் ஆசிரியர் பெயர் தெரிந்திலது. முதலில் மூலநூல் மட்டுமே அச்சில் வந்துள்ளது. உரைவேந்தரே முதன்முதலாக இதற்கு உரை எழுதியவர். பல படிகளை ஒப்பு நோக்கித் திருத்தங்கள் கண்டு, புத்துரை வகுத்துள்ளார். தொடக்கத்தில் ஓர் ஆராய்ச்சி முன்னுரை உள்ளது.

    இந்நூலாசிரியர், இசையைப் பற்றித் தவறான எண்ணத்துடன், நூலினை உருவாக்கி-யுள்ளார். அது தவறு என்பதை உரைவேந்தர் இம்முன்னுரையில் விரிவாக எடுத்து விளக்குவது அறிவுக்கு விருந்து எனலாம்.

      "இந்நூலாசிரியரால் பழி தூற்றப்பட்ட இசை யினைப் பற்றிச் சிறிது ஈண்டுக் கூறுவது வேண்டற் பாலதொன்று. இசை என்பது வழுத்த வாயும், கேட்கச் செவியும் பெற்ற உயிர்கட்கு இயல்பா யமைந்த இன்பப் பொருளாகும்... நிலவுலக வாழ்விற்கு நான்கு பொருள்கள் இன்றியமை யாதன என்றும், அவை முறையே உணவு, உடை, உறையுள், இசை' என்பன வாம் என்றும் அமெரிக்க நாட்டு அறிஞர் ஒருவர், "Music is the fourth great material want of our nature-first food, then raiment, then shelter, then music" -
      N.Bovee

      கூறுகின்றார்... இவ்விசை உடலோடு கூடி வாழும் மக்கட்கு மிக இன்றியமையாத-தென்பது... நாடோறும் ஓய்வின்றி உழைக்கும் எந்திரமொன்றும் உழைப் பிடையே மாசுபடிந்து அழுக்குறுவது போல், உடலோடியங்கும் உயிரும் மனத்தகத்தே தளர்ச்சி யும், தூய்மையில்லாத உணர்ச்சியும் பெறுவது இயல்பு. எந்திரங்கள் அழுக்கு அகற்றப்படுவது போல, மனமும் நாடோறும் தூய்மை செய்யப்பட வேண்டும். அதற்கு இசையே உரியதாகும். இசை, மனத்திற்படியும் தீய உணர்வுகளைப் போக்கி நல்லுணர்வுகளை - எழுப்புவதாகும். 'ஆறலை கள்வர் படைவிட அருளின் மாறுதலை பெயர்க்கும் மருவின் பாலை' என்று பல நூற்றாண்டுகட்கு முன்பிருந்த முடத்தாமக் கண்ணியார் மொழிந் தருளினர். சென்ற நூற்றாண்டில் செருமனியில் வாழ்ந்த ஆவர் பாச்' (Averbach) என்பவர், 'மனத்திற்படியும் மாசுகளைக் கழுவித் தூய்மை செய்கிறது இசை' என்று கூறினார்.... இசையும் ஒரோவழிக் காமம் முதலிய தீமை விளைப்பது குறித்து, அதனை விலக்குவது அறமன்று!.... பதினைந்து பதினாறாம் நூற்றாண்டில் வாழ்ந்த 'மார்டின் லூதர்' என்பவர், சமய உணர்வுகளுக்கு அடுத்த நிலையில் வைத்துச் சிறப்பிக்கத் தகுவது இசையே என்றும், தாவீது முதலிய தங்கள் சமய ஞானிகள், தம் கடவுட் கருத்துக்களை, இனிய இசைப்பாட்டுக்களில் வைத்துப் பாடியே செயற் கருஞ் செயல்களைச் செய்தனர் என்றும் கூறுவாராயினர்!"

    இம்முன்னுரை ஒன்றே போதும், உரைவேந்தரின் நுட்பமான புலமைத் திறத்தை அறிந்து கொள்ள! அன்றியும் இவரது ஆங்கில மொழியறிவு எவ்வாறெல்லாம் உதவுகிறது என்பதும் இதனால் அறியலாம்.

    சமய நூல்கள்

    உரைவேந்தர், அன்னைத் தமிழின்பால் எத்தகைய புலமையும் ஈடுபாடும் கொண்டவரோ, சைவசமயத்தின்பாலும் அவ்வாறே ஈடுபாடு கொண்டவர். இவர் எழுதிய சைவசமய - சைவசித்தாந்த நூல்கள் சிலவேயாயினும், மிக்க பெருமையுடையன.

    திருவோத்தூர் தேவாரத் திருப்பதிக உரை' நூல் ஏறத்தாழ 1935ஆம் ஆண்டில் வெளிவந்ததாகக் கொள்ளலாம். இஃது உரைவேந்தர் மறைந்த பின், அவர்தம் 23 ஆம் ஆண்டு நினைவு வெளியீடாக 1985இல் ஒளவை து. நடராசனாரால் வெளியிடப் பெற்றது.

    திருஞானசம்பந்தர் திருவாய் மலர்ந்தருளிய 'பூத் தேர்ந் தாயன கொண்டு நின் பொன்னடி' எனத் தொடங்கும் திருவோத்தூர்த் தேவராப் பதிகத்திற்கு அற்புதமான உரை தந்துள்ளார் உரைவேந்தர்.

    தொடக்கத்தில், 'ஓத்தூர்' என்ற ஊரின் விளக்கத்தையும் பின்னர்த் 'தேவாரம்' என்பதற்குரிய பல்வேறு பொருள் நயங்களையும் விளக்குகின்றார். "ஓத்தூர் என்பது ஓத்து - ஊர்' எனப் பிரியும். ஓத்து, ஓதப்படுவது, பாடப்படுவது பாட்டு என்றாற் போல. சேயோனாகிய முருகனுக்கு மலை நிலமும், பெருமான் என்ற பிரமனுக்குத் தாமரைப் பூவும் இடமானது போல, திருவோத்தூர், பரமனுக்கு உரிய இடமென்பதாம்!" என்று கூறிவிட்டு,

      "சுவாமிகள் (சம்பந்தர்) தேவாரத்திற்குச் , சுமார் ஐந்நூறு வருடங்களுக்குப் பின் தோன்றிய நன்னூல் இலக்கணமாகா தாகையால், தொல்காப்பியமே ஈண்டுக் கொள்ளப்படுவ தாயிற்று"

    என்று கூறுவது, இவருக்குரிய நுட்பான இலக்கணப் புலமைக்குச் சான்றாகும்.

    இனித் தேவாரம்' என்பதற்குரிய பல்வேறு பொருள் நயங்களைக் கூற வந்தவர், சைவத்திரு யாழ்ப்பாணத்து வண்ணைநகர் சுவாமிநாத பண்டிதர், விரித்தெழுதியவற்றைச் சுட்டிக் காட்டி, அதனை அப்படியே தந்துரைக்கின்றார் உரைவேந்தர்.

    தேவாரம்' என்பதற்குப் பல்வேறு பொருள் நயங்களில் ஒன்றை மட்டும் இவண் சுட்டலாம்:

      "பேரழகு , பேராண்மை , பெருங்கல்வி, பேரறம் முதலியவற்றை உடைய ஆண்மகனது இலக்கண முதலிய வற்றை ஓதல், கேட்டல்களைச் செய்த துணையானே, மகளிர்க்கு அவன் மாட்டுக் கழிபெருங் காமம் மீதூர்வதுபோல் சிவபிரானது இலக்கணங்களும் அருட் குணங்களும் பிறவும் திராவிட வேதத்தின்கண் (தேவாரத் திருமுறையில் ) கூறப்பட்டிருத்தலான் அவற்றை ஓதல், கேட்டல் - களைச் செய்த துணையானே மக்கட்குக் கழிபெருங் காதல் மீதூரு மென்று உணர்க"

    இவ்வாறு இன்னும் பல பொருள் நயங்களை எடுத்துரைக்கின்றார் உரைவேந்தர் !

    இத்தேவாரப் பதிகப் பாடலுக்கு 33 பக்க அளவில் உரைவிளக்கம் தந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ஞானாமிர்த மூலமும் பழைய உரையும்

    சைவ சித்தாந்த சாத்திர நூல்களில் பழைமையானது ஞானாமிர்தம்' என்ற நூல் மெய்கண்டார் அருளிய சிவஞான போதத்திற்கும் காலத்தால் முந்தியது. இது பழமையானது என்பதன்றி, நடையிலும் சற்றுக் கடின முடையது. இரும்புக் கடலை' என்று எண்ணி, ஒதுங்கியவர்களும் உண்டு.

    வாகீச முனிவர் என்பார் எழுதிய இந்நூலுக்குப் பழைய உரை ஒன்று உண்டு. அதனை ஏறத்தாழ 70 ஆண்டுகட்கு முன், மதுரைத் தமிழ்ச் சங்கம் வெளியிட்டுள்ளது. இதனை ஆராய்ந்து வெளியிடும் பணியைச் செய்தவர் சேற்றூர் சுப்பிரமணிய கவிராயர் ஆவார். அவர் தமக்குக் கிடைத்த சில ஏடுகளைக் கொண்டு, அரும்பாடு பட்டு, அந்நாளில் எழுதியது, மிகவும் பெருமைக்குரிய தொண்டாகும். சங்க நூல் வெளியீடுகளும், கல்வெட்டிலாகா வெளியீடுகளும் போதிய அளவு வெளிவராத காலம். அத்தகு நிலையிலும் கடும் உழைப்பால் இந்நூல் பதிப்பைச் செய்து முடித்த சிறப்பு கவிராயருக்கே உண்டு என உரைவேந்தரே புகழ்ந்து போற்றுகின்றார்!

    'ஞானாமிர்தத்' திற்குப் பின்னர்த் தோன்றிய சைவசித்தாந்த நூல்களின் உரைகளில் இவ் ஞானாமிர்தப் பகுதிகள் மேற்கோளாகக் காட்டப்பட்டுள்ளன. சிவப்பிரகாசம்' என்பது சைவ சித்தாந்த நூல்; அதனைக் குறித்த மற்றொன்று, சிவப்பிரகாசப் பெருந்திரட்டு'. இத் தொகை நூலில் ஞானாமிர்தத் திருவகவல்கள் பல கோத்துத் தொகுக்கப்பட்டுள்ளன. இவ்வாறே, முத்து முடிவு' என்ற பழைய நூல் ஒன்றிலும் ஞானாமிர்தப்பகுதிகள் சில இடம் பெற்றுள்ளன. இவற்றால் சமயதத்துவ ஆராய்ச்சி உலகில் இந்நூல் மிக்க மதிப்பும் பயிற்சியும் பெற்றிருந்தது என்பது புலனாகும்.

    இவ்வுண்மைகளை நன்கறிந்த உரைவேந்தர், அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் ஆராய்ச்சிப் பேராசிரியராகப் பணிபுரிந்த போது, 'ஞானாமிர்த மூலமும் பழைய உரையும்' பதிப்பிக்க வாய்ப்புக் கிடைத்தது. இது குறித்து உரைவேந்தர் கூறுவது வருமாறு:

      "சிறந்த நூற் பயிற்சி எனக்கு வாய்த்தபோது, ஞானாமிர்தக் குறிப்புக்கள் சில, சிவஞான பாடியத்தில் வரக் கண்டு, நூலை முழுவடிவில் படிக்க வேண்டும் என்ற வேட்கை உண்டாவ தாயிற்று. ஆகவே அதனை வாங்கிப் படித்த போது அதன் நலம் முற்றும் துய்ப்பதற்கு உரிய தமிழறிவு என்பால் இல்லாமை, மிக்க இடரை விளைத்தது. அதனால் சங்க நூற்பயிற்சியில் என் கருத்துப் படர்ந்தது. ஒரு சில நூல்களைப் பயின்றபின், ஞானாமிர்தத்தின் தமிழ்நலம் எனக்கு இன்பம் செய்வதாயிற்று!"

    என்று இந்நூலின் பால் ஆர்வம் ஏற்பட்டமை குறித்துக் குறிப்பிடுவர். இது குறித்த ஏடுகள் கிடைக்கின்றனவா என்று தேடுவதில் முனைப்பாக இருந்தார்.

      "1932ஆம் ஆண்டுக் கோடை விடுமுறைக்கு யான், என் ஊராகிய ஒளவையார் குப்பம் சென்றிருந்த போது, வீட்டின் ஒரு மூலையில் கிடந்த ஏடுகளைப் புரட்டிப் பார்க்கலானேன். அவற்றுள், ஒரு ஏட்டின் மேல், பெருமண்டூர்ச் சீபாலன் எழுதியது' என்ற குறிப்பு இருக்கக் கண்டு, அதனைப் பிரித்துப் பார்த்தேன். ஏடு ஒன்றைப் படிக்கவும், அதன்கண், இன்னிசை எழுவர்ப் பயந்தோள் - சுநந்தன் முதலிய எழுவரைப் பெற்றாள்' என்ற உரை இருக்கக் கண்டு, இது, 'ஞானாமிர்தம்' என்று அறிந்து அதனைப் படியெடுத்து அச்சுப் பிரதியோடு ஒப்பு நோக்கி னேனாக, வேறுபாடுகள் பல இருப்பது புலனா யிற்று !"

    என்று உரைவேந்தர் கூறுவதுகொண்டு, ஞானாமிர்த நூலைப் பதிப்பிக்க மேற்கொண்ட இவரது முயற்சி தெரிகிறது.

    பின்னர்க் குன்றக்குடியில், சிவக்கவிமணி சி.கே. சுப்பிரமணிய முதலியார் தலைமையில் நடந்த ஓர் ஆண்டு விழாவில், 'ஞானாமிர்தம்' என்ற பொருள் பற்றி உரைநிகழ்த்தினார் உரைவேந்தர். அதனைக் கேட்ட 'சித்தாந்த சரபம்' ஈசான சிவாசாரியார். இவரை அன்போடு நோக்கி, 'இரும்புக் கடலையைப் பக்குவமாக வேக வைத்துவிட்டீர்கள்!' என்று பாராட்டினார். பண்டிதமணியும், சிவக்கவிமணியும், இந்நூலை நன்கு ஆராய்ந்து வெளியிடுமாறு உரைவேந்தரிடம் கூறினர்.

    ஆனாலும் ஏடுதேடும் முயற்சியைக் கைவிடாமல், மேலும் சில கிடைக்கின்றனவா என்று முனைப்போடு செயல்பட்டார் உரைவேந்தர். நெல்லைக்கு அருகே இருந்த இராசவல்லிபுரம் சென்று, செப்பறைமடத்துத் தலைவராக இருந்த அழகிய கூத்தத் தேசிகரைக் கண்டு, உரையுடன் கூடிய ஞானாமிர்த ஏடு ஒன்றினைப் பெற்றார். அதன் பின்பு மேலும் சில ஏடுகள் கிடைத்தன. பெருமண்டூர்ச் சீபாலன் எழுதிய ஏடு ஒன்று; திருவெண்ணெய் நல்லூர் ஏடு ஒன்று; ஏனாதி பாடி ஏடு ஒன்று. இவ்வேடுகள் அனைத்தையும், மதுரைத் தமிழ்ச் சங்க வெளியீட்டுடன் ஒப்பிட்டு நோக்குங்கால் வேறுபாடுகள் பல கண்டு, புதிதாகக் குறிப்புரையுடன் ஞானாமிர்த நூலை வெளியிடத் துணிந்தார். அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆராய்ச்சித் துறைத் தலைவராக விளங்கிய கா. சுப்பிரமணிய பிள்ளையும், பல்வேறு ஏடுகளை ஒப்பு நோக்கி, வேண்டிய ஆராய்ச்சிக் குறிப்புக்களோடு இந்நூலை வெளியிட வேண்டும்' என்று கூறி, உரைவேந்தரின் இனிய நண்பர் க.வெள்ளைவாரணனாரை உறுதுணையாக வைத்துக் கொள்ளவும் ஏற்பாடு செய்தார்.

    ஆனால், அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திலிருந்தபோது செய்து வந்த இந்நூல் வெளியீட்டுப் பணி, மதுரைத் தியாகராசர் கல்லூரிக்கு வந்த பின்னரே நிறைவு பெற்றது. அதற்கு முழு ஆதரவு நல்கிய கருமுத்து, தியாகராசச் செட்டியாருக்கு நூன் முன்னுரையில் நன்றி தெரிவித்துள்ளார் உரைவேந்தர் !

    அண்ணாமலைப் பல்கலைக் கழக வெளியீடாக வந்த மற்றொரு சைவசித்தாந்த நூல், சிவஞான போத மூலமும் சிவஞான முனிவர் அருளிச் செய்த சிற்றுரையும்' என்பது.

    சைவ சித்தாந்த சாத்திர நூல்கள் பதினான்கு. இவற்றிற்கெல்லாம் மணிமுடியாய்த் திகழ்வது, மெய்கண்டார் அருளிய சிவஞான போதம்'. இதன்கண் அமைந்துள்ள நூற்பாக்கள் - 12. அதில் உள்ள அடிகள் - 40. மொத்தச் சொற்கள் -216; மொத்த எழுத்துக்கள் - 624. இப் பன்னிரண்டு நூற்பாப் பொருளை ஏதுக்களாலும் எடுத்த மொழியாலும் ஆராய்ந்து கூறுதற்கு ஏதுவாக 39 அதிகரணங்களும் 81 வெண்பாக்களும் உள்ளன.

    இவ் அரிய நூலுக்குப் பாட்டும் உரையுமாகிய வடிவில், சான்றோர் உரை கண்டுள்ளனர். பாட்டில், முதலுரை கண்டவர், திருத்துறையூர் அருணந்தி சிவாசாரியார். அதற்குச் சிவஞான சித்தியார்' என்று பெயர். அதற்குப்பின் கொற்றவன்குடி உமாபதிசிவாசாரியார், 'சிவப்பிரகாசம் என்ற பெயரில், எளிய முறையில் பாட்டு வடிவில் உரைகண்டுரைத்தார். இவ்வாறே, வடமொழிவல்ல சான்றோர் ஒருவர், இச் சிவஞான போதத்தை வடமொழியில் மிகவும் எளிய நடையில் பன்னிரு சுலோகங்களாக மொழிபெயர்த்துத் தமிழ் அறியாத வடபுல வாழ்நர்க்கு அறிவுறுத்தினார். அவர்க்குப்பின் சிவாக்கிரயோகிகள் என்பார், அவ் வடமொழிச் சிவஞான போதத்துக்கு வடமொழியிலேயே சிற்றுரையும் பேருரையுமாக உரையொன்று கண்டார்.

    நம் நாட்டில் ஆங்கில மொழி முதலிடம் பெற்றபோது, ஜே.எம். நல்லசாமிப் பிள்ளை என்பார். இச்சிவஞான போதப் பொருளை ஆங்கிலத்தில் எழுதி வெளியிட்டார். பிறகு, டாக்டர் பென்னத் (Dr.Bennet) முதலிய ஆங்கில நாட்டார், ஆங்கிலத்திலும் ; ஷாமாஸ் (Schomorus) என்ற ஜெர்மானியர் ஜெர்மனியிலும் எழுதினர்.

    திருவாவடுதுறை ஆதீனத்தைச் சேர்ந்த, முனிவர் பெருமக்களில் ஒருவராய் விளங்கியவரும், வடமொழிக் கடலையும் தென்மொழிக் கடலையும் நிலைகண்டு-ணர்ந்தவர்' என்று போற்றப் படுபவருமான மாதவச் சிவஞான சுவாமிகள், சிவஞான மாபாடியம்' என்ற பெயரால் பேருரையும், சிற்றுரையுமாக இரண்டினை எழுதினார்.
    அவரது சிற்றுரை நூலே உரைவேந்தரால் பதிப்பிக்கப் பெற்று அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தால் 1953இல், வெளியிடப் பெற்றது.

    இப்பதிப்பின் சிறப்புக்கள் பல. அவற்றுள் சில, இவண் குறிக்கத் தகும் :

    1. மாணவர்கட்கும் ஆராய்ச்சியாளர்கட்கும் பயன்படும் முறையில், உரையில் காணப்படும் இலக்கணக் குறிப்புக்களும், அரும் பொருள்களும் அடிக்குறிப்பில் விளக்கப்படுகின்றன;

    2. ஆராய்ச்சி நெறியின் பொருட்டு, அருஞ் சொற்பொருள் அகரநிரலும், துணைசெய்த நூல்நிரலும் சேர்க்கப்பட்டுள்ளன;

    3. ஒப்பு நோக்கும் கருத்தால் ஒருசில இடங்களில் சிவஞானமாபாடியக் கருத்துக்களும், பாண்டிப் பெருமாள் உரையும் காட்டப்பட்டுள்ளன.

    4. நூன்முகத்துக்கு இன்றியமையாமைபற்றி, நூலாசிரியர், உரையாசிரியர் வரலாறும் ; நூற்பொருளைப் பயில விரும்புவோர் பொருட்டுச் சிவஞானபோதச் செம் பொருளும் பிறவும் முன்னர்த் தரப்பட்டுள்ளன. (இதில் வரும் சிவஞான போதச் செம்பொருள்' பின்னர்த் தனி சிறுநூலாகவும், வெளிவந்துள்ளது!)

    சிவஞான முனிவரின் சிவஞான மாபாடியம்' என்னும் பேருரையையும், சிற்றுரையையும் படித்துப் பொருள் காண்பதென்பது கற்றுவல்ல புலவர்க்கே சிறிது கடினமாகும். ஆயினும் உரைவேந்தர், துணிந்து இப்பணியைச் செய்து முடித்தார். இது குறித்து இவர் கூறுவது வருமாறு:

      "சிவஞான போதத்தின் சிறப்பையும், சிற்றுரையின் மாண்பையும் நோக்குமிடத்து, எனது அறிவின் சிறுமை கண்டு என் உள்ளம் பேரச்சம் கொண்டது. எனினும் எந்தை மெய்கண்ட சிவத்தின் திருவடியை நினைவிற் கொண்டு, அவரது அருள் ஞானத்தை நன்குபெற்ற பெருமக்கள் வழங்கியிருக்கும் அருளுரைகளைக் கருவியாகவும், திருஞான சம்பந்தர் முதலிய சிவஞானப் பெருஞ் செல்வர் களின் செம்மொழிகளை முதலாகவும் கொண்டு, இப்பணியினை ஆற்றுதற்கு என் உள்ளம் ஒருப்படவே, ஒருவாறு யான் இயன்ற அளவு செய்துள்ளேன்!"

    சைவசிந்தாந்த ஆழ்கடலில் நன்முத்து எடுத்துக் கொணரும் வல்லமை படைத்தவர் உரைவேந்தர். எனினும் இவ்வாறு கூறுவது, இவரது பணிவுடைமையைக் காட்டுவதாகும்.

    இந்நூலும், அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் இருந்த போது மேற்கொண்ட பணி; ஆனால் மதுரைத் தியாகராசர் கல்லூரிக்கு வந்த பின்பே நிறைவுற்றது.

    உரைவேந்தர் எழுதிய நூல்களிலெல்லாம், தலையாயதும் மிகுதியான பக்கங்கள் கொண்டதுமான நூல், திருவருட்பா மூலமும் உரையும்' ஆகும். இஃது ஆறு திருமுறைகள் கொண்டது ; 5818 பாடல்கள் உடையது.

    அண்ணாமலைப் பல்கலைக் கழகம், தனது பொன்விழாவைக் கொண்டாடிய ஞான்று, திருவருட்பாவை உரையுடன் வெளியிடும் செந்தமிழ்ப் பணியைத் தொடங்கியது. பொன்விழாவினில், இதன் முதற்பகுதி மட்டும் வெளிவந்தது; பின்னர் ஒவ்வொன்றாக வெளியிடப் பெற்றது.

    இந்நூல் முன்னுரையில், பல்கலைக் கழகத் துணைவேந்தராக இருந்த வ. சொ. சோமசுந்தரம், பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.

      "19 ஆம் நூற்றாண்டின் இறுதிக் காலத்தே, வள்ளல் இராமலிங்க அடிகளார் என்னும் ஓர் ஒளிப்பிழம்பு வடலூரில் தோன்றி, உலகுக்கே ஒளி செய்தது. அவ் ஒளியிடைத் தோன்றிய இறைமுறையீடுகள் அருட்பா' என்னும் அரிய பெயரோடு ஆறுதிரு முறைகளாக வகுக்கப்பெற்றன. உயிர்களின் ஆன்மநேய ஒருமைப்பாட்டினை வற்புறுத்திய பெரும் அருளாளராக இவரை நாம் காண்கிறோம். மக்கள் பலரும் அருட்டிரு வள்ளலாரின் ஆறு திருமுறைகளையும் படித்த அளவிலேயே இறை வனிடத்து ஈடுபாடு கொள்வரேனும், முற்றிலும் பொருள் உணர்ந்து கொள்வார்களெனக் கூற இயலாது. இந்நிலையில் நல்லதொரு உரையை எழுதி நமக்களித்தவர் உரைவேந்தர் ஒளவை சு.துரைசாமி பிள்ளையவர்கள் ! சிறந்த முறையில் எழுதிய இவ்வுரை, அருள் மணம் கொண்டு விளங்கு வதை யாவரும் உணர்வர்!"

    திருவருட்பாவில் தம்மை முழுவதுமாக ஈடுபடுத்திக் கொண்டவர் அருட் செல்வர்' நா. மகாலிங்கனார் ஆவார். இவர், ஊரன் அடிகளாரைப் பதிப்பாசிரியராகக் கொண்டு, திருவருட்பா 6 திருமுறைகளையும் திருந்திய பதிப்பாக வெளியிட்டுள்ளார். தேனினும் இனிய இத்திருவருட்பாப் பாடலின் செம்பொருள் நுட்பங்களைத் தமிழ் இலக்கண இலக்கிய வரம்பினை உளங் கொண்டு, நுண்ணிதின் ஆராய்ந்து வெளிப்படுத்தும் முறையில் திருவருட்பாவுக்கு உரைகாணும் திட்டமொன்று இவரால் வகுக்கப்பட்டது. இவ் உரைப் பணியைச் சிறப்பாகச் செய்து முடிக்க முற்றிலும் தகுதி படைத்தவர் உரைவேந்தரே எனத் தேர்ந்து, கோவை சக்தி அறநிலையத்தின் சார்பில், பல்கலைக் கழக மூலமாகத் திருவருட்பா முழுமைக்கும் விளக்கவுரை காணச் செய்த பெருமை நா. மகாலிங்கனாருக்கு உண்டு.

    உரைவேந்தர் எழுதிய திருவருட்பா உரைநூலின் முதற்பகுதி 582 பக்கம் கொண்டது; இவ்வாறே ஏனைய 5 பகுதிகளுமெனில் உரைப் பெருக்கத்தின் மாண்பை ஓரளவு அறிதல் கூடும். பாடல் தலைப்பு; யாப்பு இன்னதென்பது, பாடப்பெற்ற தலம் ஆகியனவற்றை முதற்கண் கூறிப் பின்பு, பாடல் - உரை - பெரியதோர் விளக்கம்' என அமைத்துக் கொண்டார் உரைவேந்தர்.

    வரலாற்று நூல்கள்

    உரைவேந்தர் பல்துறை அறிவினர். ஆங்கில அறிவு, கல்வெட்டு ஆய்வு ஆகியன, இவர்தம் வரலாற்று நூல்கட்குப் பெரிதும் துணைபுரிந்தன. இவ்வகையில் இவர் எழுதியன, சைவ இலக்கிய வரலாறு, சேரமன்னர் வரலாறு, தமிழ் நாவலர் சரிதை மூலமும் உரையும், வரலாற்றுக் காட்சிகள் ஆகியன குறிப்பிடத் தக்கன.

    சைவ இலக்கிய வரலாறு (கி.பி. 7 முதல் 10ஆம் நூற்றாண்டு வரை): இஃது அண்ணாமலைப் பல்கலைக்கழக வெளியீடாக 1978இல், வந்தது.

    தமிழ்மொழி வாயிலாகத் தமிழர்கள் போற்றி வளர்த்த - பேரறிவு நிறைந்த இலக்கியம் பற்றியும், புலவர்களின் வாழ்க்கை வரலாறு பற்றியும், அவர்கள் வாழ்ந்த காலம், அரசியல் நிலை, சமயநிலை, சமுதாய வாழ்வு, கலை வளர்ச்சி முதலியன பற்றியும், தக்க அறிஞர்களைக் கொண்டு ஆராய்ந்து, தமிழ் இலக்கிய வரலாற்றினை எழுதி வெளியிடுதல், தமிழ் வளர்ச்சிக்குரிய சிறந்த பணிகளில் ஒன்றாகும். இதன் தேவையை நன்குணர்ந்த பெருந்தகை அண்ணாமலைப் பல்கலைக்கழகம் நிறுவிய கொடை வள்ளல் அண்ணாமலை அரசராவர்! அவர்தம் நோக்கத்தை நிறைவேற்றும் வகையில், அப் பல்கலைக் கழக ஆராய்ச்சித் துறையில் பணிபுரியும் ஆசிரியர்களைக் கொண்டு, தமிழ் இலக்கிய வரலாற்றை விரிவாக ஆராய்ந்து வெளியிடுவ தெனத் திட்டம் வகுத்து அதன்படி நூல்களை வெளியிட்டனர். அவ்வகையில் வெளிவந்ததே சைவ இலக்கிய
    வரலாறு' என்னும் நூல்!

    பல்கலைக் கழக ஆராய்ச்சித்துறையில் பணிபுரியும் ஆசிரியர் களைக் கொண்டு தமிழ் இலக்கிய வரலாறு எழுதும் பணி உருவாயிற்று. அவ்வகையில், ஆங்குப் பணியிலிருந்த உரை - வேந்தருக்குச் சைவ இலக்கிய வரலாறு ' எழுதும் பணி அளிக்கப்பட்டது.

    இந்நூலுக்கு அரியதொரு முன்னுரை வழங்கியுள்ளார் உரைவேந்தர். அதில் வரும் சில பகுதிகள் :

      "இலக்கியங்கள் பலவும், தாம் தோன்றிய காலத்து மக்கட் சமுதாயத்தின் சூழ்நிலையை எடுத்துக் காட்டும் இயல்பின என்பது அறிஞர் உலகம் நன்கறிந்த செய்தி. அந்நெறியில் சைவ இலக்கியங்கள், தாம்பிறந்த காலத்து வாழ்ந்த சைவ மக்களின் சமய உணர்வு ஒழுக்கங்களைத் தம்மைப் பயில்வோர்க்கு உணர்த்தும் அறக் கருவூலங் களாகும். ஆயினும் இவ்விலக்கியங்களின் தோற்றம், பேணற்பாடு முதலிய கூறுகளை உணர்தற்கு அவை தோன்றிய காலத்து, நாட்டு வரலாற்று அறிவு பெருந்துணையாகும். அக் காலத்தில் நாட்டில் நிலவிய அரசியல், பொருளியல், வாணிபம், தொழில் முதலியவற்றை உரைக்கும் நாட்டுப் பொது வரலாறு தெரிந்திருப்பது பெரிதும் நன்று. நம் தமிழ் நாட்டின் தவக்குறைவாலும் தமிழ் மக்களின் ஊக்கமின்மையாலும் அத்தகைய பொது வரலாறு ஒன்று இதுகாறும் எழுதப்படவே இல்லை !"

    ’சைவ இலக்கிய வரலாறு' என்னும் இந்நூலில், உரைவேந்தர் எடுத்துக் கொண்ட பகுதி, கி.பி. 7ஆம் நூற்றாண்டு முதல் 10ஆம் நூற்றாண்டு முடிய அமைந்த காலமாகும். சிறந்த செந்தமிழ் நூல்களாகிய சைவ இலக்கியங்கள் பற்றிய செய்திகள், தென்னிந்தியக் கல்வெட்டுக்கள், செப்பேடுகள், பிறநாட்டார் யாத்திரைக் குறிப்புக்கள் முதலிய வரலாற்றுச் சான்றுகள் கொண்டு தெளிவாக விளக்கப்பெற்றுள்ளன.

    உரைவேந்தர், சைவ நூல்கள் தோன்றி வளர்ந்த கால நிலை, சூழ்நிலையை அனைவரும் தெளிவாகப் புரிந்து கொள்ளுமாறு, சைவ இலக்கிய வரலாற்றின் தோற்றுவாயாகத் தமிழ்நாட்டு வரலாற்றைச் சுருக்கமாகவும், தெளிவாகவும் எடுத்துக் காட்டியுள்ளார். 'திருஞான சம்பந்தர் ' முதல், 'வேம்பையர்கோன் நாராயணன்' ஈறாகவுள்ள ஆசிரியர் வரலாறுகளை எழுதியுள்ளார் !

    இந்நூலின் சிறப்புக் குறித்துப் பல்கலைக் கழகத் துணை வேந்தர் தி.மு.நாராயணசாமி பிள்ளை,

      "பிள்ளையவர்கள் தமது புலமைநலம் அனைத்தும் தமிழ் நாட்டிற்குப் பயன்படும் முறையில் இவ் இலக்கிய வரலாற்றினை இனிமையும் தெளிவும் பொருந்திய செந்தமிழ் நடையில் எழுதி யுள்ளார்கள்!"

    என்று பாராட்டுகின்றார்.

    இவ் இலக்கிய வரலாறு மேலும் தொடர்ந்து வெளிவர வில்லை. உரைவேந்தர் மதுரைத் தியாகராசர் கல்லூரிப் பணிக்கு வந்தமையே காரணம்.

      "..... ஆசிரியர் வரலாறுகள் எழுதி முடித்ததும் , யான், மதுரைத் தியாகராசர் கல்லூரிக்கு வந்து சேர வேண்டிய நிலைமை ஏற்பட்டதனால் இந்த அளவோடு இவ்விலக்கிய வரலாறு வெளிவர வேண்டுவதாயிற்று. இக்கால எல்லைக்குள் நிற்கும் பெருமானடிகள் வரலாறு, இன்னும் காணப்படவில்லை! அண்ணாமலைப் பல்கலைக் கழக நூல் நிலையம் போலும் வரலாற்று ஆராய்ச்சிக்குத் துணை செய்யும் நூல்களும், பிற வெளியீடுகளும் மதுரையில் கிடைத்தல் அரிதானமையின் இவ்வரலாற்றினை மேலும் தொடர்ந்து எழுதுவதற்கு இயலவில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவிக்கக் கடமைப் பட்டுள்ளேன்!"

    என உரைவேந்தர் வருந்தியுரைப்பது. இவரது சைவ இலக்கியப் பற்றினைப் புலப்படுத்துவதாக உள்ளது.

    உரைவேந்தர் எழுதிய வரலாற்று நூல்களில் குறிப்பிடத் தக்க பெருமைக்குரியது. பண்டைநாளைச் சேரமன்னர் வரலாறு .' இந்த நூலை எழுத இவர் எடுத்துக் கொண்ட முயற்சிகள் அளப்பரியன. இது குறித்து உரைவேந்தர் கூறுவது இவண் அறியத்தகும்:

      "சங்க காலச் சேரர் இலக்கியங்களை யான் ஆராயத் தலைப்பட்டபோது, சேர நாட்டைப்பற்றிய குறிப்புக் களைத் தேடித் தொகுக்கும் கடமை உண்டாயிற்று. அக்காலை, மேனாட்டறிஞரான வில்லியம் லோகன் எழுதியனவும்; நம் நாட்டவரான திரு. நாகமையர், திரு. கே.பி.பதுமநாப மேனன், திரு.கே.ஜி. சேஷையர், திரு. சி. கோபாலன் நாயர் முதலியோர் எழுதியுள்ள நூல்களும்; திருவாங்கூர், கொச்சி, குடகு, தென் கன்னடம் ஆகிய பகுதிகளைப் பற்றிய அரசியல் வெளியீடுகளும் பெருந்துணை செய்தன. பழை யங்காடி, உடுப்பி, ஹொன்னாவர், கோழிக் கோடு, கண்ணனூர், பெல்காம் முதலிய பேரூர்களில் வாழ்ந்து வரும் நண்பர்கள் பலர் தெரிவித்த குறிப்புக் களும் எனக்கு மிக்க ஊக்கம் தந்தன. அதனால் சேரர் வரலாற்றைக் காண்பதற்கெழுந்த வேட்கை உறுதிப் படுவதாயிற்று. "சேர நாடு, கேரள நாடாயினபின், சேரமக்கள் வாழ்ந்த ஊர்களும் அவர்களிடையே நிலவிய ஒழுக்க நெறிகளும் மறைந்து ஒடுங்கின வாயினும், பழங்கால இலக்கியக் கண்கொண்டு நேரில் சென்று காண்போர்க்குப் புலனாகாமற் போக வில்லை !"

    இந்நூலில், இவர் மேற்கோளாக எடுத்தாண்ட நூல்களும் பலவாம். தமிழ் இலக்கண இலக்கியங்கள் தவிர, வடமொழி - ரிக் வேதம், தைத்திரீய ஆரணியகம், வியாசபாரதம், கல்வெட்டு, செப்பேடு, பிறவரலாறு, ஆராய்ச்சி உரைகள் எனப்பலவும் காட்டியுள்ளார் உரைவேந்தர். டாக்டர் எம். எஸ். வைரண பிள்ளை , இந்நூலுக்கு ஆங்கிலத்தில் எழுதிய முன்னுரையில், இவரைப் பாராட்டியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அவ்வாறே மா. இராசமாணிக்கனாரும், " இதுவரையில், இருள் படர்ந் திருந்த சங்ககாலச் சேரர் வரலாறு, இவ்வரலாற்று நூலால் விளக்க மடையும் என்று கூறுதல் பொருந்தும்!" என்று பாராட்டுகின்றார்.

    'தமிழ்நாவலர் சரிதை' என்ற நூல், முன்பே அச்சானது; இதன்கண் இறையனார்' முதல் அந்தகக் கவி வீரராகவ முதலியார்' வரை 51 புலவர்களின் வரலாறும், அவர்கள் பாடிய பாடல்கள், அவை பாடப்பட்ட சந்தர்ப்பத்தோடு யாரோ ஒருவரால் தொகுக்கப் பட்டிருந்தன. இது, சென்னைப் பல்கலைக்கழக வித்துவான்' தேர்வுக்குப் பாடமாக இருந்தது; அத்தேர்வுக்குச் செல்லும் மாணவர்க்கு இந்நூலைக் கற்பிக்கும் பணியை மேற்கொண்டிருந்த உரைவேந்தர், கல்வெட்டுக்களையும், பிற வரலாற்று நூல்களையும் ஒப்ப நோக்கிக் கற்பித்து வந்தார். அப்போது இதன்கண் காணப்படும் பாடல்களுக்கு இயன்ற அளவு குறிப்புக்கள் தேடித் தொகுத்து வைத்திருந்தார்.

    இதற்கிடையில் தி.த.கனகசுந்தரம்பிள்ளை வெளியிட்ட பிரதியும், உரைவேந்தரின் தமிழாசிரியர் சீகாழி கோவிந்தசாமி ரெட்டியாரிடமிருந்த கையெழுத்துப் பிரதியும், கோவை சி.கு. நாராயணசாமி முதலியார் வெளியிட்ட பிரதியும் வைத்திருந்தாராதலின், இம்மூன்றையும் கொண்டு ஒப்பு நோக்கியதில் பல திருத்தங்கள் செய்ய வேண்டியதாயிற்று. அத்தகு திருத்தங்களுடன் கழக வெளியீடாக இந்நூல் 1972இல் வெளிவந்தது.

    இதன்கண், செய்யுள் தோறும் ஆராய்ச்சிக்குறிப்புக்கள் தரப் பட்டுள்ளன. இடையிடையே கல்வெட்டுச் சான்றும் உள்ளன. மேற்கோளாக ஆங்கிலம் உட்பட 64 நூல்கள் இடம்பெற்றுள்ளன. இறுதியில் உள்ள அரும்பொருள் அகரவரிசை, படிப்பவர்க்குப் பெரிதும் பயன்படும்.

    உரைவேந்தர், ஒரு ’வரலாற்றுப் பேராசிரியர்' என்று சொல்வதற்கு ஏற்ப, இவர் எழுதிய மற்றொரு நூல், வரலாற்றுக் காட்சிகள்' என்பது. இதனை மதுரையிலுள்ள ஒரு புத்தக நிறுவனம் வெளியிட்டுள்ளது.

      "நாட்டு வரலாற்று அறிவு, சென்ற காலங்களில் மக்கள் முன்னேற்றத்துக்கு இடையூறு செய்த தடைகளை உணர்ந்து, எதிர்காலத்தில் அவை மீளவும் தலைகாட்டாதவாறு தற்காத்துக் கொள்ளு தற்குத் துணைபுரிகிறது. இந்த உண்மையை அறிந்த மேனாட்டு வரலாற்று அறிஞர்கள், வரலாற்றுப் புகழ் படைத்தவர் சிலருடைய வாழ்வில் சிறப்பாகக் குறிக்கத் தக்க நிகழ்ச்சிகளைத் தேர்ந்து, சிறு சிறு கதை வடிவில் தந்து, கல்வி பயிலும் மாணவர்களின் இளமையுள்ளங்களைப் பண் படுத்தியுள்ளனர். அவர்களுடைய இந்த நன்முயற்சி பெரும்பயனை விளைத்திருக்கிறது. அதனைத் தொடர்ந்து நமது நாட்டு வரலாற்றில் சிறந்து விளங்கிய வேந்தர் சிலருடைய வாழ்க்கை நிகழ்ச்சி களில் சிலவற்றைத் தேர்ந்து சிறுகதை வடிவில் கூறுவது கருத்தாகக் கொண்டு, 'வரலாற்றுக் காட்சிகள்' என்ற தலைப்பில் இந்த நூல் தோன்றுகிறது.....!"

    என்று உரைவேந்தர், நூல் முன்னுரையில் குறிப்பிடுகின்றார். அவ்வாறே, தமிழகச் செய்திகள், சங்ககாலச் சோழர், சங்க காலப் பாண்டியர், பல்லவ வேந்தர், இடைக்காலப் பாண்டியர், இடைக் காலச் சோழர் என்னும் தலைப்புகளில் சுவையான வரலாற்றைத் தந்துள்ளார் உரைவேந்தர் ஆங்காங்கே கல்வெட்டுச் சான்றுகளும் உள்ளன.

    இவை தவிர, மதுரைக் குமரனார் (கழகம்) ஞானசம்பந்தர் வழங்கிய ஞானவுரை (தருமையாதீனம் 1945), 'சிவபுராணம் (ஆம்பூர் சைவசித்தாந்த விழா - 1940); தெய்வப்புலவர் திருவள்ளுவர்' (கழகம்) மருள் நீக்கியார் நாடகம்', 'மத்தவிலாசப் பிரகசனம் (மொழிபெயர்ப்பு ) என்னும் நூல்கள் தவிர ஆங்கிலத்திலும் Introduction to the Study of Thiruvalluvar' என்ற நூலும் எழுதியுள்ளார் உரைவேந்தர்.

    இனி இவர், அவ்வப்போது, 'தமிழ்ப்பொழில்', 'செந்தமிழ்ச் செல்வி', 'செந்தமிழ்' முதலான இதழ்களிலும், விழாமலர்களிலும், எழுதிய கட்டுரைகள் எண்ணில் பலவாம். மாநாட்டுத் தலைமை யுரையாகவும், விரிவுரையாகவும், வரவேற்புரையாகவும் இவர் ஆற்றிய செந்தமிழ் உரைகளும் உண்டு. இவற்றில் ஒரு சில தனித்தனி நூல்வடிவம் பெற்றுள்ளன. வெளிவராத கட்டுரைகளனைத்தையும் தொகுத்தால், பல நூல்களாக அமையும் !

    1940 ஆம் ஆண்டில் ஆம்பூரில் நடந்த சைவசித்தாந்த விழாவில் இவர் ஆற்றிய பேருரை, சிவபுராணம்' என்ற தலைப்பாகவும்; தூத்துக் குடி சைவசிந்தாந்த சபை 65 ஆம் ஆண்டு நிறைவு விழாத் தலைமைப் பேருரை, சிறுதுண்டு வெளியீடாகவும், மயிலம் சிவஞானபாலய சுவாமிகள் மணிவிழா மலரில் (1954) வெளிவந்த கட்டுரை 'ஊழ்வினை' என்ற தலைப்பாகவும்; தமிழ்ப் பொழிலில் வெளிவந்த கட்டுரை ஒன்று (1930) 'ஆர்க்காடு' என்ற தலைப்பிலும் சிறுசிறு வெளியீடுகளாக ஔவை நடராசனால், உரைவேந்தரின் நினைவு நாட்களின் போது வெளிக் கொணரப்பட்டன.

    உரைவேந்தரின் பன்னூற் புலமையும் ஆங்கில அறிவும்; ஏடுகள் கல்வெட்டுக்களிலுண்டான மிகுந்த ஈடுபாடும், அனைத்திற்குமேலாக ஆழ்ந்த தமிழ்ப்பற்றும் சைவப்பற்றும் ஆகியன பற்றி இவற்றால் அறியலாம். ஒவ்வொரு நூலைப் பற்றியுமே தனித்தனியாக ஆராய இடனுண்டு. விரிவஞ்சி இவ் இயலில் சுருக்கமாகவே தரப்பட்டது!
    -----------------

    4. உரைநயம் கண்ட உரவோர்

      "பழைய உரைகள் பொழிப்புரைகளாக உள்ளன. நீண்ட தொடர்களாக அமைந்துள்ளன. அவற்றை எளிதில் மனங்கொள்வது அரிய முயற்சியாகும். எனவே பாட்டைத் தொடர் தொடராகப் பிரித்து, அத் தொடருக்குரிய பழைய உரையைப் பொருத்திப் பாட்டுப் பொருளை எளிதாக மனம் பற்றுமாறு செய்கிறார்...... பாட்டின் சொற்புணர்ச்சிகளில் அமைந்த வினை முடிபுகளைச் சுட்டி, பொருளின் திட்பத்தையும் நுட்பத்தையும் உணர்த்துதல், அருஞ் சொற்களுக்குப் பொருள் கூறுதல், பிற நூல்களிலிருந்து ஒப்புமை காட்டுதல், இலக்கண அமைதியைப் புலப்படுத்துதல், வரலாற்றுச் செய்திகளைத் தொடர்புபடுத்தல் முதலான அரிய செய்திகள் பலவும் ஒளவை நூல்களில் காணப்படுவன!"

    என்று பேராசிரியர் கு. சிவமணி குறிப்பிடுவார்.

    இக்கூற்றுக்கு ஏற்ப, எந்த ஒரு நூலாயினும் அதற்குச் சிறந்த முறையில் உரைகாணும் திறம், உரைவேந்தருக்குக் கருவிலே வாய்த்த திரு எனலாம். இலக்கிய நூலாயினும், இலக்கண நூலாயினும் அதன் பண்டை உரைகளை ஆழ்ந்து பயின்று, தோய்ந்து, நுகர்ந்து, ஆய்ந்து தெளிந்தார். பிறர் கருத்தோடோ தம் கருத்தோடோ மாறுபட அமைந்திருக்கும் உரையை, உடனே பிழையுரை' என்று முடிவு செய்து விடாமல், அவர் அவ்வாறு உரை வகுத்திருப்பதற்கான காரணத்தைக் கண்டறிந்தார்; பொருந்தா தாயின் புத்துரைகாண முயன்றார்.

    உரைவேந்தர் நூல்களில் காணப்படும் 'உரைத் திறன்கள்' பலவாகும். இங்கே சில மட்டும் எடுத்துக் காட்டப்படுகின்றன.

    கண்ணழித்துப் பொருள் கூறுதல்

    'இம்மைச் செய்தது மறுமைக் காமெனும்' (புறம் 134) என்று தொடங்கும் புறநானூற்றுப் பாடலுக்குப் பழைய உரை:

    'இப்பிறப்பின்கட் செய்ததொன்று, மறுபிறப்பிற்கு உதவு மென்று கருதிப் பொருளை விலையாகக் கொடுத்து, அதற்கு அறம் கொள்ளும் வணிகன் ஆய் அலன்; அமைந்தோர் பிறரும் போய் வழியென்று உலகத்தார் கருத, அந்த நற்செய்கையிலே பட்டது. அவனது
    கைவண்மை !"

    இப்பழைய உரையை உரைவேந்தர், பின்வருமாறு கண்ணழித்துப் பொருள் கூறுகின்றார்:

      "இம்மைச் செய்தது- இப்பிறப்பின்கட் செய்ததொன்று; மறுமைக்காம் - மறுபிறப்பிற்குதவும்; எனும் அறவிலை வணிகன் ஆய் அலன் - என்று கருதிப் பொருளை விலையாகக் கொடுத்து அதற்கு அறம் கொள்ளும் வணிகன் ஆய் அல்லன்; சான்றோர் பிறரும் சென்ற நெறி என - அமைந்தோர் பிறரும் போய் வழியென்று உலகத்தார் கருத ; ஆங்குப் பட்டன்று அவன் கை வண்மை - அந்த நற்செய்கையிலே பட்டது அவனது கைவண்மை."

    புறநானூற்றைப் படிப்போர்க்கு இஃது எத்துணையளவு பயன் படுகிறது என்பது சொல்லாமலே விளங்கும். இவ்வாறே உரை வேந்தர் எழுதிய பாடலுரைகள் அமைந்துள்ளன.

      உள்ளத்து உணர்ச்சிகளைச் சொல்லில் வடித்தல் "செய்யுட் பொருளையுணர்ந்து இன்புறுதற்கு அவ்வச் செய்யுள் பாடப்பெற்ற செவ்வியினை அறிந்து கொள்ளுதல் இன்றியமையாதது. அதனால் ஒவ் வொரு பாடலின் முன்னுரையிலும் புலவருள்ளத்தி லிருந்து அப்பாடல் தோன்று - தற்குரிய சூழ் நிலையினையும், உள்ளத்துணர்ச்சி களையும் சொல் லோவியமாக இவ்விளக்கவுரையாசிரியர் (உரை வேந்தர் ) புனைந்துரைத் துள்ளது குறிப்பிடத்தக்கது. இம்முறை , படிப் போருள்ளத்திற் பாடற்பொருளை நன்கு பதியும்படி செய்யும்!"

    எனப் புறநானூற்று உரைநூல் அணிந்துரையில் அ. சிதம்பரநாதச் செட்டியார், உரைவேந்தரின் உரைத்திறம் பற்றிக் குறிப்பிடுவர். இதற்கு ஒரு சான்று:

    புறநானூற்றில் வரும், நுங்கோ யாரென வினவின் (212) எனும் பாடல், கோப்பெருஞ்சோழனைப் பிசிராந்தையார் பாடியது. இதன் முன்னுரையில், இப்பாடல் தோன்றிய சூழலைச் சுருக்கமாக இனிதெடுத்து மொழிகின்றார் உரைவேந்தர்:

      "பிசிராந்தையார், பாண்டி நாட்டுப் பிசிர்' என்னும் ஊரில், இருந்து வருகையில், கோப்பெருஞ் சோழனுடைய அறிவு நலமும் ஆட்சி நலமும் கேள்வியுற்று, அவன்பாற் பெருங் காதல் கொண் டொழுகினார். பாண்டிநாட்டிலிருந்தது அவருடல் எனினும், அவரது உயிர், உறையூரிலிருந்த கோப் பெருஞ்சோழனையே சூழ்ந்து கொண்டிருந்தது. பிசிர்' இப்போது பிசிர்குடி' என வழங்குகிறது. அவரது நினைவு முற்றும் சோழன்பால் ஒன்றி யிருந்தமையின், யாவரேனும் நும்முடைய வேந்தன் யாவன்?' என்று கேட்பின், எம் வேந்தன் கோப் பெருஞ்சோழன். அவன் உறையூரில், பொத்தியார்' என்னும் புலவர் பெருந்தகையுடன் இனிதிருக் கின்றான்' என்று கூறுவர். இவ்வாறு பன்முறையும் கூறிப் பயின்ற அக்கூற்று, இப் பாட்டாய் உருக்கொண்டு நிற்கின்றது!"

    - இதனைப் படித்த மாத்திரத்திலேயே இப்பாடலை அறிய வேண்டும் எனும் அவா தோன்றுமன்றே!

    பாடற்கருத்தை வரன்முறைப்படுத்தித் தெளிவுறுத்தல்

      "தொலி (தோல்) நீக்கியபின், பழத்தைச் சுளை சுளையாகப் பிரித்துண்டு மகிழ்வது போலப் பாட்டினுள் ஒவ்வொரு கருத்தாக எடுத்து, வரன் முறையில் தெளிவுப்படுத்துவதும், அத்தெளி வுரையைத் தென்னுண் தேக்கிய செஞ்சொற் 'களில் தொடுத்து உரைப்பதும் (உரைவேந்தரின்) உரை நடையின் மாண்பாகும்!"

    என்பர் கலையன்னை இராதா தியாகராசனார். இதற்குக் கீழ்க்கண்ட நற்றிணைப் பாடலைச் சான்றாகவும் காட்டுவர்:

    பொருள் வயிற் பிரிந்த தலைவன், பருவமுணர்ந்த நெஞ்சிற்கு உரைத்தது' என்னும் துறையமைந்த பாடல், 'இருங்கண் ஞாலத்து (நற்றிணை 157) என்று தொடங்குவது. இளவேட்டனார் பாடியது. 'இளவேனிற் பருவத்து வருவேன்' என்று கூறிப் பொருள் வயிற் பிரிந்துபோன தலைமகன், சென்று வினை முடிக்கு முன்பே, கூறிய பருவம் வந்துவிட்டது; அதனை அறிந்து தன் நெஞ்சை நோக்கி, 'நெஞ்சமே! இளவேனில் நாளிலே குயில் கூவும் பொழுதெல்லாம் அவ் ஓசையை, நம் காதலி கேட்டுக் கேட்டு மாறாது வருந்துவாளே' என்று வருந்திக் கூறியதாக அமைந்த பாடல். இதன்கண்

      ".... நாட்பத வேனில்
      இணர்துதை மாஅத்த புணர்குயில் விளித்தொறும்
      நம்வயின் நினையும் நெஞ்சம்"

    எனும் பகுதி வந்துள்ளது. இதனை, உரைவேந்தர் விளக்கும் திறம் வருமாறு :

      "காவும் சோலையும் கவின்பெறு பொழிலும் புதுத்தளிரும் புதுப்பூவும் தாங்கி, மாவும்புள்ளும் மகிழ்ந்து விளையாட, மன்றல் கலந்து தென்றல் உலவும் வேனிற்காலம், காதலில் பிணிப்புண்ட இளமை உள்ளங்கட்கு இன்பக் காட்சியும் கூட்டமும் வளம்பட நல்கும் மாண்புடைமையால், அக்காலத்து மாங்குயிலின் தேங்கோள் இன்னிசைக் கண், தலைமகனது கருத்துச் சென்றமையின் இணர்துதை மாஅத்த புணர்குயில்' என்றும்; குயிலின் இன்னிசை கேட்போர் உள்ளத்தில் வேட்கையை எழுப்பிக் காதலரை நினைப்பித்தல் இயல்பாதல் பற்றிப் புணர்குயில் விளித்தொறும் நம்வயின் நினையும் நெஞ்சம்' என்றும் கூறினான்!"

    இவை போல்வன, உரைவேந்தர்தம் உரைகளில் பரக்கக் காணலாம்.

    புத்துரை காண்டல்

      "உழுதசால்வழியே உழுவான்பொருட்டு, இழுதை நெஞ்சம் இதென்படுகிறதே' எனத் திருநாவுக்கரசர் வருந்திக் கூறியவாறு உழுதசால் வழியே உழுது செல்லாமல்... செவ்விய இனிய பழுதற்ற முறையிற் பொன்னினும், மணியினும் போற்ற வேண்டுவதாய் எழுதியுள்ள உரை விளக்கம் சாலவும் பாராட்டற் பாலதாகும்!"

    என்று ந.ரா. முருகவேள், புத்துரை, காணும் உரைவேந்தரின் திறத்தை வியந்து பாராட்டுவர்.

      "கவிர்ததை சிலம்பில் துஞ்சும் கவரி
      பரந்திலங் கருவியொடு நரந்தம் கனவும்
      ஆரியர் துவன்ற பேரிசை இமயம்" (பதி. 11:21-23)

    என வரும் பதிற்றுப்பத்து அடிகளுக்குப் பழைய உரைகாரர் 'ஆரியத்து ஆணையினாலே பிற விலங்கானும் மக்களானும் வருத்தமின்றிக் கவரிமான் பகற்காலத்துத் தான் நுகர்ந்த அருவியையும், நரந்தம் புல்லையும் கனவிலும் கண்டு மகிழும்" என்று பொருள் கொண்டார்.

    இப்பாடலைப் பாடிய குமட்டூர்க் கண்ணனாரின் கருத்துக்குப் பொருந்தாத உரை இது என்று உணர்ந்த உரைவேந்தர், பின்வருமாறு புத்துரை காண்கின்றார்:

      "முருக்க மரங்கள் செறிந்த மலையிடத்தே இரவில் உறங்கும் கவரிமான்கள், பகற்பொழுதில் தாம் மேய்ந்த நரந்தம் புற்களையும் அவை வளர்தற்குக் காரணமாகப் பரந்து விளங்கும் அருவிகளையும் கனவிற்கண்டு மகிழ்தற்கு இடனாய் விளங்கும் ஆரியர் நிறைந்து வாழும் இமயம்!.... கவரிமானும் நரந்தம் புல்லும் இமயமலைச் சாரலில் மிகுதியாக வுண்மையின் இவற்றை விதந்தோதினார்!"

    என்று புத்துரை காணும் உரைவேந்தர், இதற்குச் சான்றாக, நரந்தம் நறும்புல் மேய்ந்த கவரி, குவளைப் பைஞ்சுனை பருகியயல, தகரத் தண்ணிழல் பிணையொடு வதியும், வடதிசை யதுவே வான்றோய் இமயம்' என்று ஏணிச்சேரி முடமோசியார் பாடிய புறப்பாடலை (132) மேற்கோள் காட்டிப் பழைய உரையை மறுக்கின்றார்.

    சிக்கலை அவிழ்த்தல்

    திருவள்ளுவர்,
      ”ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
      சூழினும் தான் முந்துறும்" (குறள் : 380)

    என்று கூறியவர்,

      "ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்
      தாழா (து) உஞற்று பவர்" (குறள்:620)

    என்று கூறியுள்ளார். இஃது ஒரு சிக்கலான இடம். பலரும் பலவிதமாக அமைதி கூறுவர். உரைவேந்தர், மிக அருமையான விளக்கம் தந்து, சிக்கலை அவிழ்த்து விடுகின்றார்.

      " 'பழுத்த பழம் மரத்தில் நில்லாது' என்பது உலகுரை. நன்கு முதிர்ந்த கனி, தன்பால் முதிரும் விதையாகிய பயனை எவ்வண்ணமேனும் அதன் முதலிலிருந்து நீக்கி அப்புறப் படுத்தி விடுமே யன்றித் தன்னிடமே கொண்டொழியாது என்பது கருத்தாம். மரம் ஒன்று பழம் ஊழ்த்தல், விதை பயந்து தன் இனம் பெருக்கும் குறிப்பிற்றாதல் போல், வினை ஊழ்த்தல் தன் பயனைத் தன்னைச் செய்தோர்க்கு நல்கி, மேலும் வினைகளாகிய தன் இனத்தைப் பெருக்கும் இயல்பிற்றாம். பழுத்த பழம் விதைப் பயனை வெளிப்படுத்தாது ஒழியாமை போல, ஊழ்வினையும் தன் பயனை ஊட்டாது கழியாது என்பது விளங்குகிறது. ஊழ்கனிக்கு அஃது இயற்கையறமாதல் போல, ஊழ் வினைக்குப் பயன் நல்குதல் இயற்கையறமாம். இயற்கை யறம் எல்லா ஆற்றலினும் வலிமிக்கதாதலால் ஊழ்வினையின் வலி மிகப்பெரிது என்பது பற்றி, ஆசிரியர், ஊழிற் பெருவலி யாவுள' என்று அதன் வலிமிகுதியை விளக்குகின்றார்!"

    - இவ்வாறு ஊழின் வலிமை பற்றிக் கூறும் உரைவேந்தர், உப்பக்கம் காண்பர்' என்பதற்கும் சரியான விளக்கம் தருகின்றார்.

      "பழுத்துவரும்பழம் இடையே மாறுபட்ட பொருள்களால் வெம்பிப் பயன் ஊழ்க்காது போதலும் உண்டு. அதுவும் இயற்கை நிகழ்ச்சி. அதனால் ஊழ்த்துவரும் வினையும் பயன் நல்காது கெடுதற்கு வாய்ப்புண்டு என்பது பெறப்படும். கனி வகைகள் பலவும் பெரும்பாலும் ஊழ்த்துப் பயன்படுத்தலும் மிகச் சிலவே; இடையிற் கெடுதலும் இயல்பு. அதுபோல ஊழ்வினையுள் ஒரு சில மாறுபட்ட வினைகளால் பயன் ஊழ்க்காது கெடுதற்கு இடமுண்டு என்று சான்றோர் கண்டனர். அதனை ஆராய்ந்தவர், உலையா முயற்சியில் ஊழ்வினையும் பயன் ஊழ்க்காது கெடும் என்று தெளிந்து, 'ஊழையும் உப்பக்கம் காண்பர்' என்றனர். 'ஊழையும் ஊழ்க்காது கெடும்' என அதன் வினையால் கூறாமல், 'ஊழையும் ஊழ்க்காதவாறு இடையூறு செய்வர்' என்பது தோன்ற, 'உப்பக்கம் காண்பர்' என்று ஆசிரியர் கூறுவது, நினைவு கூரத்தக்கது. பள்ளம் நோக்கி ஓடுவதை இயற்கை யறமாகக் கொண்ட தண்ணீரும், இடை நிகழ்த்தும் தடையால், நின்று வற்றுதல் போல் ஊழ்வினையும் இடை நிகழ்த்தும் முயற்சிகளால் நின்று வற்றுவது இயல்பாதலின், ஊழை உப்பக்கம் காண்பது உயிர் கட்கு இயல்வ தொன்றாயிற்று. ஆகவே ஊழ்வினை தனக்குரிய பயனை ஊழ்த்து நல்குவதில் பெருவலி இயற்கை அறமாக உடைய தென்பதும், எனினும், மாறுபட்ட வினையால் அவ்வலி தடையுற்று நின்று வற்றும் என்பதும் முடிவாயின!" (1954 இல் எழுதிய கட்டுரை)

    வரலாறு உரைத்தல்

      "பல்வேறு காலத் தமிழிலக்கியங்கள், உரைகள், வரலாறு, கல்வெட்டு, சமயங்கள் என்றின்ன துறை பலவற்றில் நிறை புலமை பெற்றவர் ஒளவை துரைசாமி அவர்கள்!"

    என்று மூதறிஞர் வ.சுப. மாணிக்கனார் கூறுவதற்கேற்பப் பல்துறை வல்லுநராக விளங்கிய உரைவேந்தர், தம் பேருரை பலவற்றில் ஆங்காங்கு வரலாற்றுச் செய்திகளைக் கூறாமலிரார். இங்கே ஒரு சான்று:

    சைவ சித்தாந்த சாத்திர நூல்களில் மணிமுடியாகத் திகழும் 'சிவஞான போத நூலின் ஆசிரியர், அருளாளர் மெய்கண்டாரின் தந்தை பெயர் அச்சுதக் களப்பாளர்' என்பது. இச் சொல்லை வைத்துக் கொண்டு, மெய்கண்டார், களப்பிரர் வழியில் வந்தவர்' என்று சிலர் கூறியதும் உண்டு. இதனை உரைவேந்தர், வரலாற்றுச் சான்று காட்டி மறுக்கின்றார்.

      ".... இடைக்காலத்தே நம் தமிழகத்தை ஆண்ட வேந்தர்பால் அரசியற் பணிபுரிவோர், களப்பாள ராயர், பல்லவராயர், வாணாதிராயர், மழவராயர், சேதிராயர்' என்பன முதலிய சிறப்புப் பெயர்களை வேந்தரால் தரப்பெற்றனர். இடைக் காலத்தே இந்த நாட்டில் களப்பிரர், பல்லவர், வாணர், மழவர்' முதலியோர் ஆட்சி செய்தனர். பல்லவராட்சி வீழ்ந்ததும் பாண்டியரும் சோழரும் நாட்டாட்சி பெற்றனர். அக்காலையில் அவர்கள், அரசியல் வகையிலும், பிற வகையிலும் சிறந்த பணி செய்த சான்றோர்க்கு , மேலே சொன்ன சிறப்புப் பெயர் - களைத் தந்து சிறப்பித்தனர். களப்பிரரை வென்று உயர்ந் தோர்க்குத் 'களப்பாளராயர்' என்றும்; வாணர்களை வென்று சிறந்தோர்க்கு வாணாதி ராயர்' என்றும், மழவர்பால் வெற்றி பெற்றோர் 'மழவராயர்' என்றும் இவ்வாறே பிறரும் சிறப்புப் பெற்றனர். இப்பெயர் கொண்டவர் பலரும் தமிழ் வேளாண் மக்களேயாவர்!"

    என்று கூறும் உரைவேந்தர், சிவஞான போத மூலமும் சிவஞான முனிவர் அருளிச் செய்த சிற்றுரையும்' என்ற நூலில், களப்பிரர்' பற்றி விரிவாகவும் ஆய்வு செய்துள்ளார்.

    கல்வெட்டுச் சான்று தருதல்

    உரைவேந்தர், கல்வெட்டுக்களிலும் ஆழ்ந்த பயிற்சி உடையவ ராதலின், உரைகூறும் இடங்கள் பெரும்பாலானவற்றில் கல்வெட்டுச் சான்றுகள் தருவதிலும் வல்லமை பெற்றவராக விளங்குகின்றார்.

    சங்கப் புலவருள் ஒருவர், 'தாமற்பல் கண்ண னார்'. இவரைக் குறித்து உரைவேந்தர் எழுதும் விளக்கம் வருமாறு :

      "இவர், பார்ப்பனர்; கூர்த்த புலமை நலம் சிறந்தவர்; தாம் செய்த தவற்றை விரைந்துணரும் நல்லறிஞர் தாமப் பல்கண்ணனார்' என்றும் பாடம் உண்டு. 'தாமல்' என்ற ஊரினர். இது, காஞ்சிபுரத்துக்கு மேற்கில் உள்ளது. இடைக்காலச் சோழவேந்தர் காலத்தில் இவ்வூர் மிகச் சிறப்புற்று விளங்கிய தென்பதை இவ்வூர்க் கோயிற் கல்வெட்டுக்கள் தெரிவிக்கின்றன. இக் கல்வெட்டுக்கள் தாமர்' என்று கூறுதலின் (S.I.Vol. V. 1004 A.R. 139of 1896) இவர் பெயர் 'தாமர்ப்பல்கண்ண னார்' என இருக்க வேண்டும். ஏடெழுதினோர் தாமற்பல் கண்ணனார்' என எழுதிவிட்டனர். பல்கண்ணன்' என்பது இந்திரனையும் குறிக்கும் பெயர்!"

    உரைவேந்தர் காட்டும் கல்வெட்டுச் சான்றுகள், எண்ணில் பலவாக உள்ளன. ஈண்டு மற்றொன்றும் காட்டுதல் பொருந்தும்.

    நெல்லையில் 12-2-1956இல், நடந்த பதினெண் கீழ்க் கணக்குச் சொற்பொழிவு'த் தலைமையுரையில் உரைவேந்தர், புத்திரமுக தரிசனம்' என்பது குறித்துப் பின்வருமாறு விளக்கம் தருகின்றார்:

      "சங்க காலத்தில், இல்லிருந்து நல்லறம் புரியும் மக்கள் வாழ்வில், மனைக்கிழத்திக்கு மகன் பிறந்தானாயின் குறித்த நாள் ஒன்றில் தலைமகன், தன் மகனைக் காண்டல் ஒரு சிறப்பாக நிலவிற்று. அதியமான் நெடுமான் அஞ்சி , தனக்கு மகன் பிறந்தானைக் காணப்போந்த காட்சியை ஒளவையார் வியந்து பாடியது புறநானூற்றில் சேர்க்கப்பட்டிருக்கிறது. மகனைத் தோளிடைக் கொண்டு நிற்கும் தந்தையின் தோற்றத்திற்கு இந்திரனை உவமமாக்கி, தடுத்த மாநிதிக் கிழவனும் போன்மென மகனொடு புகுதந் தோனே' (அகம்: 66) என்று அகநானூறு கூறுகின்றது.
      "இவ்வழக்காறு, 'புதல்வற் பயந்த புனிறுதீர் பொழுதின்.... ஐயர் பாங்கினும் , அமரர்ச் சுட்டியும் செய் பெருஞ்சிறப்பொடு சேர்தல்' (தொல். பொருள். 146) எனத் தொல்காப்பியனார்க்கு முன்பிருந்தே தொன்றுதொட்டு வருவதாயினும், இக்கீழ்க் கணக்குப் பாடிய சான்றோர் காலத்தும் இருந்த தனை, 'பாட்டரவம் பண்ணரவம்' (திணை மாலை நூற் 145) என்று குறிக்கின்றனர்.
      "பிற்காலத்தே இவ்வழக்காறு, புத்திரமுக தரிசனம்' என வழங்கியது. இதனைத் திருமயம் பகுதியைச் சேர்ந்த நெக்கோணத்திலுள்ள பெருமாள் கோயில் கல்வெட்டு, (கி.பி. 1483) வீரப்பிரதாப சுந்தரத் தோளுடையார் மகாபலி வாணாதிராயர், தன் மகன் திருமாலிருஞ்சோலை நின்றான்' பிறந்த காலத்தே புத்திரமுக தரிசனம்' என்னும் இம்முறையைச் செய்தான் என்று (P.S.No.672) குறிக்கின்றது!"

    இவைபோல் அரிய செய்திகளைத் தருவதில் உரைவேந்தருக்கு ஆரா இன்பம்!

    சொற்பொருள் ஆய்வு

    உரை கூறுங்கால், சொற்களுக்கு அருமையான பொருள் தந்து விளக்குவது உரைவேந்தரின் இயல்பு. இங்கே ஒரு சில சொற்பட்டியல் தரப்படுகின்றது:

    மூவன்

    இஃது இயற்பெயர். 'மூப்பன் என்னும் சொல் போல்வது. அம்மூவனார்' என்பதும் இப்பெயரடியாக வருவதே.

    பாடவேறுபாடு காட்டல்

    உரைவேந்தர், தாம் ஆராய்ந்த ஏடுகள், கல்வெட்டுக்கள் முதலியன கொண்டு, பாடவேறுபாடுகள்' பலவற்றைத் தெளிந்து கூறுகின்றார். அவற்றுட் சில :

      தவறானவை - சரியானவை
      கருங்குழலாதனார் - கருங்குளவாதனார்
      ஆடுதுறை மாசாத்தனார் - ஆவடுதுறை மாசாத்தனார்
      தும்பி சொகினனார் - தும்பைச் சொகினனார்
      மாற்பித்தியார் - மாரிப்பித்தியார்
      வெறிபாடி காமக்கண்ணியார் - வெறியாடிய காமக் காணியார்
      நெடுங்கழுத்துப் பரணர்- நெடுங்களத்துப் பரணர்
      ஐயூர் முடவனார்- ஐயூர் மூவனார்
      அரிமணம் - அரிமளம்

    வானநூற்கருத்து

    உரைவேந்தர், தம் உரை நூல்களில், வானநூற் கருத்துக் களையும், சோதிடக் கருத்துக்களையும் சுட்டிச் செல்கின்றார். சங்க காலத்தே , வானநூற் புலமை சான்ற தமிழ்ப்புலவர்கள் இருந்துள்ளனர் என்பதையும் குறிப்பிடுகின்றார் இவர்:

    சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேர லிரும்பொறையைக் கூடலூர்கிழார் பாடிய ஆடியல் அழற்குட்டத்து' (புறம், 229) என்ற பாடலுக்கு இவர் தரும் விளக்கம் வருமாறு :

      "சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரலிரும் பொறையின் இறுதிநாளில் அவன் இறத்தற்கு ஏழு நாட்களுக்கு முன், நாட்டில் புதுமையான நிகழ்ச்சி ஒன்று உண்டாயிற்று. தி நிமித்தங்கள் பல உண்டாயின. அவற்றைக் கண்ட சான்றோருள் கூடலூர் கிழார்' என்பார் ஒருவர். அவர், வானநூல் வல்லவர் விண்ணிடத்தே ஒரு விண்மீன் தீப்பரக்கக் காற்றால் பிதிர்ந்து, கிளர்ந்து வீழ்ந்தது கண்டார். கார்த்திகை, அனுடம், உத்திரம், மிருக சீரிடம் முதலிய விண்மீன்களின் நிலையினைக் கண்டார். இந்நிகழ்ச்சிக்கு ஏழாம் நாளில், உலகாளும் வேந்தன் உயிர்நீப்பன் என்று உணர்ந்தார். வேந்தன் யானைக்கட் சேய் மாந்தரஞ் சேரலிரும்பொறை யாகலின், அவற்கு என்ன தீங்கு நேருமோ எனக் கலக்க முற்றார். அவர் கலங்கியவாறே ஏழாம் நாளில் சேரமான் உயிர் துறந்தான்! (புறம் 229)

      "இப்பாடலில், அழல்சேர் குட்டம்' என்பது கார்த்திகை நாள். அக்கினியை அதிதேவதையாக உடைமையின், கார்த்திகைக்கு அழல்' என்பது பெயராயிற்று என்ப. ஆட்டினை, வடநூலார் 'மேடராசி' என்பர். ஆடு ' முதல் மீன்' ஈறாகவுள்ள இராசி பன்னிரண்டுக்கும் அசுவனி' முதல், இரேவதி ' ஈறாகவுள்ள நாள் இருபத்தேழினையும் வகுத்தளிக்கின், முதல் இரண்டேகால் நாள் ஆடாகிய மேடத்துக்குரியவாதலின், கார்த்திகை யின் முதற்காலை ஆடியல் அழற்குட்டம்' என்றார். அனுடம்' என்பது ஆறுமீன்களின் தொகுதி. அது வளைந்த பனைமரம் போல் அமைதலின் முடப் பனையம்' எனப்பட்டது.
      "வேர் முதலா - அடியின் வெள்ளி. அஃதாவது முதல் நாள்மீன்; உயரழுவம் - முதற் பதினைந்து நாள் தலை நாண்மீன் - உத்தரநாள். நிலைநாண்மீன் - எட்டாம்மீன். 'உச்சிமீனுக்கு முன் எட்டாவது மீன்' அத்தமித்தலும், பின் எட்டாவது மீன் உதித்தலும் இயல்பு. 'உச்சிமீனுக்கு எட்டாம் மீன் உதயமீன்' என்ப. தொன்னாண்மீன் - எட்டாம் மீனாகிய மிருக சீரிடம். பாசி - கிழக்குத் திசை ; ஊசி - வடக்குத்திசை பங்குனித் திங்களில் நட்சத்திரம் வீழின் இராச பீடை' என்பர். 'ஆடுகயல் தேள் தனுச்சிங்கத் தெழுமீன் விழுமேல் அரசழிவாம்' என்பர். கயமாகிய குளம்' என்றது. கயக்குளம்' என்றார். அஃதாவது புனர்பூசம். இது, குளம் போலும் வடிவுடையது.
      இது பற்றியே 'பிங்கலந்தை'யும், அதிதிநாள் கழையா வணமேரி புணர்தங் கரும்பிவை புனர்பூசம் ஆகும்' என்று கூறுவதாயிற்று!" (புறம் 229)

    இதனால் உரைவேந்தர், சோதிட நூல் பற்றியும் அறிந்துள்ளார் என்று உணர முடிகின்றது.

    அரிய செய்தி கூறுதல்

    உரைவேந்தர், பல்வேறு அரிய பல செய்திகளை உரைநூலினிடையிடையே கூறிச் செல்வார். அவற்றில் ஒன்று:

    புறநானூறு 358ஆம் பாடலைப் பாடியவர் 'வான்மீகியார்'. இவரைக் குறித்து உரைவேந்தர் கூறுவது:

      "வடமொழியில் இராமாயணம் எழுதிய வான்மீகியார் வேறு; இவர் வேறு! தமிழ் நல்லிசைச் சான்றோராகிய இவர், வடமொழிப் புலவரான வான்மீகியாரது நூலில் பேரீடுபாடு கொண்டிருந்த - தனாலோ, இவர் தந்தையார்க்கு வான்மீகிபால் உண்டாகிய அன்பினாலோ இவர்க்கு இப்பெயர் உண்டாயிற்று எனக் கொள்ளலாம்.... வடமொழியில் வல்ல முனிவர் பெயர்களைப் பண்டைத் தமிழாசிரியர் புனைந்து விளங்கினர் என்பது செந்தமிழ் நாட்டு நல்லிசைப் புலவர் பெயர்கள் பலகொண்டு தெரியலாம்.
      "இனி வடமொழியிலுள்ள வான்மீகி முனிவர் வழியினர் இவராவரென்று கருதுவாருமுண்டு. (தமிழ் வரலாறு, பக்.246) என்று திரு. ரா. இராகவையங்கார் அவர்கள் கூறுவர். இதனால் இப்புறப்பாட்டாசிரியர் காலத்தில் வடவர் கூட்டுறவு, தமிழகத்தில் நன்கு பரவியிருந்த தென்பது தெளிய விளங்குகிறது!
      "இந்தப் பாட்டைப் பாடிய ஆசிரியர் பெயர் வான் மீகையார்' எனவும் காணப்படுகிறது. வாள்மீகையார் என்பது உண்மைப் பாடமாயின் இது, செந்தமிழ்ச் சான்றோர் ஒருவரது தமிழியற் பெயராம்!"

    தமிழர் நிலை குறித்து இரங்குதல்

    உரைவேந்தர் நூல்களை நுணுகி ஆராய்ந்தால், பண்டைத் தமிழரின் வீறு கொண்ட வாழ்வும், பிற்காலத்தே வீழ்ச்சியுற்ற நிலையும் சுட்டிச் செல்வது புலனாகும். இதற்கு ஒரு சான்று :

    புறநானூறு இறுதிப்பாடல் 'மாக விசும்பின் வெண்டிங்கள்' என்பது. சோழன் நலங்கிள்ளியைக் கோவூர் கிழார் பாடியது. இதில், இடையிடையே சில அடிகள் இல்லை ! கிடைத்த பிரதியிலும் இரண்டொரு திருத்தம் தவிர, இப்பாட்டின் முழுவடிவமும் கிடைக்க வில்லை! இது குறித்து மனம் நொந்து எழுதுகின்றார் உரைவேந்தர்:

      "இடைக்காலத் தமிழகம், தன் பண்டைய இலக்கியச் செல்வத்தைப் பேணும் துறையில் கருத்தைச் செலுத்தி யிருக்குமாயின், ஆ! இத்தமிழகம், இகழ்வார் தலைமடங்க, புகழ்வார் புரட்சி முற்றப் பேரிலக்கியப் பெருமையால் நிலவுலகு பரவும் இசை மிக்கு நிலவுவதாம். இடைக்காலத்தே புன்னெறியில் வீழ்ந்து, அறிவு ஆண்மை பொருள் முதலிய வகையில், அடிமையுற்ற தமிழகம், தனது வீழ்ச்சியால் விளைந்த கேட்டினை நினைக்கின்றது. பிறநாட்டார் தலைவணங்க இருந்த தனது பண்டைச் சிறப்பை எண்ணு கிறது. இடை யூறுகளையும் இடையீடுகளையும் போக்கற்கு முயலுகிறது ! சுருங்கச் சொல்லின் தமிழகம் பண்டைய தமிழ் கூறும் நல்லுலகமாகும் பணியில் பெரும்பாடு படுகிறது; வாழ்க தமிழ்! வீழ்க பகை! வெல்க தமிழகம் ! வெல்க தமிழர்!" (புறம்: 400)

    இதனால், தமிழகம் முன்னைப் பழம் பெருமைதனை மீண்டும் நிலைநாட்டத் துடிக்கும் உரைவேந்தரின் உளப்பாங்கினை அறியலாம்!

    சொற்பொருள் நயங்காண்டல் : அம்சொல் நுண்தேர்ச்சிப் புலவர்

    சொல்லழகும் பொருளழகும் என்ற அழகு அமையச் சொல்லுதலும், பிறர் சொல்வனவற்றின் கண்ணும் நூலின்கண்ணும் ஆழ்ந்து கிடக்கும் நுண் பொருளைத் தேர்தலுமுடைய புலவர்.

    விதுப்பு
    வேட்கை மிகுதியால் உள்ளத்து எழும் விரைவுத் துடிப்பு; அது, கட்பார்வையிலும் சொற்செயல்களிலும் மெய்ப்பட்டுத் தோன்றும்.

    காலன்
    உயிர்கள் அவைநின்ற உடம்பினின்று நீங்குதற்குரிய காலம் பார்த்து நீக்கும் இயல்பு பற்றிக் கூற்றுவனைக் காலன்' என்ப.

    அவினாபாவம்
    விட்டு நீங்காத் தன்மை ; மட்குடத்துக்கும் மண்ணுக்கு முள்ள இயைபு போல .

    ஆரியன்
    அரியவன். இது, தமிழ்ச்சொல். 'வடசொல்' என வாய் வதறுவாருமுளர்.

    வாயாத்துரிசு
    வாய்மை அல்லாத பொய்ம்மைக் குற்றம்.

    சம்பு
    சிவபெருமானைச் சிறப்பிக்கும் பெயர் ஆயிரத்துள் சம்பு என்பதும் ஒன்று. சம்பு ' என்பது நாவல் மரத்துக்கும் பெயர். நாவல் மரங்களைச் சிறப்பாகவுடைமை பற்றி நமது பாரத நாட்டை நாவலந் தீவு என்றும், சம்புத்தீவு' என்றும் புராணிகர் உரைப்பர்.

    ஞானாமிர்தம்
    ஞானமாகிய அமுதம்' என விரியும். ஞானமாவது சிவநெறி பற்றிய அறிவு. சிவம், உயிர், உலகு என்ற முப்பொருளின் உண்மையும் ஒவ்வொன்றிற்கும் உள்ள இயல்பும் தொடர்பும் அறிந்து கொள்ளும் அறிவு. அமுதம், தன்னை உண்டாரை உலகில் நெடிது செய்யும் இயல்புடையது; அதுபோலவே சிவநெறி பற்றிய அறிவாகிய ஞானம், வையத்து வாழ்வாங்கு வாழ்ந்து, சிவ பரம்பொருளின் திருவருள் இன்ப வாழ்வில் என்றும் பொன்றாது நின்று நிலவச் செய்யும் செயல் நலம் உடையது.

    அருஞ்சிறை
    உடம்பு, நீங்குதற்கு அரிய சிறை. எத்துணைத் துன்பம் உறினும், உயிர் அதற்கு ஏதுவாய தன்னையே காதலித்துத் தன்னகத்து வாழ்வதையே காதலிக்கச் செய்யும் அருமையுடைமை பற்றி 'உடம்பு', அருஞ்சிறை' எனப்பட்டது.

    இவை போன்ற சொற்பொருள் நயங்களை, உரைவேந்தரின் நூல்களில் பரக்கக் காணலாம்.

    ஊரின் உண்மைப் பெயர் இயம்பல்

    வரலாற்றாசிரியர் ஒருவர்க்கு உண்டான ஆய்வு நோக்கு , உரைவேந்தர்பாலும் இருந்தமையாலும்; கல்வெட்டு செப்பேட்டுப் பயிற்சி பெற்றவராகத் திகழ்ந்தமை-யாலும், தமிழகத்து ஊர்ப் பெயர்களின் உண்மைதனை ஆங்காங்கு எடுத்து மொழிகின்றார். இங்கே ஒரு சில மட்டும் தரப்படுகின்றன:

    ஒல்லையூர்
    புதுக்கோட்டைத் தனியரசின் கீழ் இருந்த ஊர்களுள் ஒன்று. இப்போது 'ஒலியமங்கலம்' என்று பெயர்.

    கோட்டம்பலம்
    சேரநாட்டு ஊர்களுள் ஒன்று. இக் கோட்டம்பலம்' இப்போது, அம்பலப்புழை' என்னும் இடமாகும். கடற்கோட்டில் உள்ள அம்பலம் ஆதலின் இது, 'கோட்டம்பலம்' எனப் பண்டை நாளில் பெயர் பெற்றுப் பிற்காலத்தே அம்பலப் புழை' என மாறிற்றாதல் வேண்டும். இது, சில ஏடுகளில் கூத்தம்பலம்' எனப் பாடம் வேறுபடுகிறது. சேரநாட்டில் பல கூத்தம்பலங்கள் உள்ளன. திருவாங்கூர் நாட்டு அரிப்பாடு முதலிய இடங்களில் கூத்தம்பலங்கள் இருந்திருக்கின்றன என அந்நாட்டுக் கல்வெட்டறிக்கைகள் (TAS. Vol.VI of 1927p.35) கூறுகின்றன.

    மாறோக்கம்
    இது, 'மாறோகம்' என்றும் வழங்கும். பாண்டி நாட்டில் கொற்கையைச் சூழ்ந்த பகுதி.

    தருமபுரி
    முன்பு தகடூர்'.

    பிரான்மலை
    முன்பு பறம்புமலை'.

    பூங்குன்றம்
    இராமநாதபுர மாவட்டத்திலுள்ள ‘மகிபாலன்பட்டி'.

    கருங்குழல்
    திருநெல்வெலி மாவட்டத்தில் கோட்டைக் கருங்குளம் என்ற ஊரில் ஆதனார்' என்ற நல்லிசைச் சான்றோர் வாழ்ந்தார். 'கருங்குள வாதனார் பெயரை, ஏடெழுதினோர் , ளகரத்' தை, ழகர' மாக்கி, வகரத்தை லகரமாக மாற்றிக் கருங்குழலாதனார்' என மாற்றி விட்டனர்.

    பூந்தமல்லி
    இவ்வூர்க்குச் சிலர் பூவிருந்தவல்லி எனப் பெயர் குறிப்பர். அதன் பழம் பெயர், 'பூந்தண் மலி' என்பது. (கல்வெட்டு: AR.No. 302 of 1938-39) இவ்வாறே, இன்னும் பல ஊர்களின் உண்மைப் பெயர்களைத் தக்க சான்றுகளால் மெய்ப்பிக்கின்றார் உரைவேந்தர்.

    இலக்கணச் சான்று தருதல்
    உரைவேந்தர், பண்டைத் தமிழ் இலக்கண நூலான தொல்காப்பியத்தை ஓதி உணர்ந்த பெரும் புலவராதலின், அப்புலமை நலத்தைத் தாம் எழுதிய உரைநூல்களில் காட்டியுள்ளார். இவண், சில மட்டும் எடுத்துக் காட்டப்படுகின்றன:

    நும்மனோர் (புறம் 210)
    'அன்னோர்' என்பது இடைச்சொல் முதனிலையாகப் பிறந்த குறிப்புப் பெயர் என்று சேனாவரையர் முதலியோர் கூறுவர்.

    செவிசெஞ்சேவல் (புறம் 238)
    எதுகை நோக்கி மொழி மாறி நின்றது. அது, செஞ்செவிச் சேவல் என நிற்றற்பாலது என்று தெய்வச் சிலையார் (கிளவியாக்கம்: 25) கூறுவர். இவ்வுரைகாரர், கிடந்த படியே கொள்வர்.

    ஒடுங்கி
    பெயர். சுமைதாங்கி, முள்வாங்கி என்பவற்றைப் போலும் இகர' வீற்றுப் பெயர். ஒடுங்கு - இ . இகரம்' ஒடுக்கத்தைச் செய்யும் வினைமுதற்பொருண்மை உணர்த்தும் விகுதி. இது போலவே அமர்தாங்கி', புகழ் வேண்டி' என்று மக்கட்குப் பெயருண்மை கல்வெட்டுக்களால் (S.I. Vol.V.585,641) தெரிகிறது.

    'சிவஞான போதச் சிற்றுரை' யில் மாதவச் சிவஞான முனிவர் கூறும் பல்வேறு இலக்கணக் குறிப்புக்களுக்கும் உரைவேந்தர் அடிக்குறிப்பில் தொல்காப்பியம் முதலான இலக்கண நூல்களிலிருந்து விளக்கம் தருவது, இலக்கணம் கற்றார்க்குக் கழிபேருவகை நல்குவதாம். இங்கே சில சான்றுகள் :

    'சிவஞான போத மூலமும் சிற்றுரையும்' என்ற பதிப்பு நூலில், உரைவேந்தர், சிவஞான போதச் செம்பொருள்' என்று, தொடக்கத்தில், நூலில் நுவலப்படும் கருத்துக்களைச் செம்பாகத் தமிழில் உரைக்கின்றார்.

    சிவஞான போதத்தில், முதல் சூத்திரத்தில், ஒடுங்கி மலத்து உளதாம்' எனும் தொடர் வருகின்றது. அதற்கு விரிவான விளக்கம் தருகின்றார் உரைவேந்தர். அதில் வரும் ஒரு சிறு பகுதி :

      "உலகில் நாம் கூட்டக்கூடும் அவை (சபை) முடிந்த வழி, அவ் அவையிற் கூடியிருந்தோர் தத்தம் மனைக்குச் சென்று ஒடுங்குவர்; மீள நாம் கூட்டும் போது அவர்கள் தாம் ஒடுங்கியிருந்த மனையிலிருந்து வந்து கூடுவர். இவ் வண்ணமே இவ்வுலகமாகிய அவை'யும் ஒடுங்கும் போது இறைவனிடத்திலே சென்றொடுங்கி, மீளத் தோற்று விக்கும் போது, அவனிடத்திருந்தே வந்து உலகமாகிய அவை 'யாய்க் காட்சியளிக்கிறது. உலகத்தை ஒடுக்கும் போது, அஃது ஒடுங்கி யிருப்பதற்குத் தானே இடமாதலால், இறைவனை ஒடுங்கி' என்று ஆசிரியர் கூறுகின்றார். ஒடுங்கிய உலகம், தான் ஒடுங்கியிருப்பதற்கு இடமான ஒடுங்கியிலிருந்தே தோன்றுவது கொண்டு ஒடுங்கி உளதாம்' என்றார். எனவே, அவன், அவள், அது என்பவற்றின் தொகுதியாகிய அவை, தோற்றிய திதி யாய்க் காட்சியளித்து, ஒடுங்கும் என்றும், தான் ஒடுங்கியிருந்த ஒடுங்கியினின்றே மீள உளதாம் என்றும் தெரிவித்தவாறாயிற்று.
      "ஒரு நாள் கூடிய பேரவை மறுநாளும் மீளக் கூடுமாயின் நாம் என்ன நினைப்போம்! முன்னாள் கூடியதன் நோக்கம் கைகூடாமையால் மறுநாளும் கூடியிருக்கிறதென்றும்; கைகூடாமைக்குக் காரண மாயிருந்த தடை முன்னாளே நீங்காது மறுநாள் கூடுவதற்குக் காரணமாயிற்றென்றும் தானே நினைப்போம். அதுபோலவே, ஒருகால் தோற்று - விக்கப் பட்ட உலகம், தோன்றியது கொண்டு பெற்றுக் கொள்ள வேண்டிய பயனைப் பெற்றுக் கொள்ளாமையால் ஒடுங்கி மீளத் தோற்றுவிக்கப் படுவதாயிற் றென்றும், பெற்றுக் கொள்ளாவாறு தடுத்திருந்த தடையினால் மீளத் தோற்று விக்கப்படுகிற தென்றும் எண்ண வேண்டும். அத்தடை யாது?' என ஆராய்ந்து, அஃதாவது மலம்' என்று கண்டதனால், உலகமாகிய அவை ஒடுங்கி, மலத்தால் மீள அவ் ஒடுங்கி யினின்றே உளதாம் என்று ஆசிரியர் அறிவுறுத்துகின்றார்!" (பக். 58,59)

    இவ்வாறு எளிய உதாரணங்களால் அரிய கருத்தை விளக்குவது உரைவேந்தரின் இயல்பு.

    இது, சிவஞான முனிவரின் சிவஞான போதச் சிற்றுரை', கற்று வல்லார்க்கே யன்றி ஏனையோர்க்கு அத்துணை எளிதில் புரியாது. இதனை உளங்கொண்ட உரைவேந்தர், பலர்க்கும் புரியும் வண்ணம் அடிக்குறிப்பில் விளக்கம் தருகின்றார். அவற்றில் சில:

    நூலின் தொடக்கத்தில் உரைப்பாயிரம்' ஒன்று உள்ளது. அதற்கு உரை கூறும் போது சிவஞான முனிவர்,

      "சைவாகமங்களின் உளவாகிய நாற்பாதங்களுள் வைத்து,
      ஞானபாதத்தோதியபொருள்களை ஆராயும் ஆராய்ச்சி,
      இந்நூலின்கண் எடுத்துக் கொள்ளப்பட்டது...."

    என்று குறிப்பிடுவர்.

    இதில் கூறப்படும் சைவ ஆகமங்கள் எத்தனை என்பதும், நாற்பாதங்கள்' எவை என்பதும் பலர்க்கும் தெரியாவாதலின் உரைவேந்தர், பின்வருமாறு விளக்கம் தருகின்றார்:

      "சைவாகமங்கள், காமிகம் முதலாக இருபத்தெட்டு வகைப்படும். அவை: காமிகம், யோகசம், சிந்தியம், காரணம், அசிந்தம், தீபிதம், சூக்குமம், சகச்சிரம், அஞ்சுமான், சுப்பிரபேதம், விசயம், நிச்சுவாசம், சுயம்பு , ஆக்கிநேயம், வீரம், இரௌரவம், மகுடம், விமலம், சந்திரஞானம், முகபிம்பம், புரோற்கீதம், இலளிதம், சித்தம், சந்தானம், சருவோத்தமம், பாரமேச்சுவரம், கிரணம், வாதுளம் என்ற இருபத் தெட்டாம். "நாற்பாதங்கள் : சரியை, கிரியை, யோகம், ஞானம் என்பது. 'திருமிகு ஞானம், இலங்கொளி யோகம், நலங்கிளர் கிரியை, சரியை என்ற விரிதரு பாதம்" (ஞானா. 7.) என்று வாகீச முனிவரும் கூறுவர்!"

    ஆங்காங்கே பல்வேறு நூற்சான்றுகளை மேற்கோளாகக் காட்டிச் செல்வதும் உரைவேந்தரின் தனித்திறமை.

    இந்நூலில் வரும் சிறப்புப் பாயிரச் செய்யுளில், பொய்கண்டகன்ற மெய்கண்ட தேவன்' எனும் ஓர் அடி வருகின்றது. இதற்கு உரைவேந்தர்,

    "பொய்காட்டிப் பொய்யகற்றிப் போதா நந்தப் பொருளாம்
    மெய்காட்டும் மெய்கண்டாய்!"

    என்ற 'உண்மை விளக்கம்' என்ற நூலினைச் சான்று காட்டுவர்.

    சிவஞான முனிவர், தென்மொழிக் கடலையும் வடமொழிக் கடலையும் நிலை கண்டுணர்ந்த சான்றோர். எனவே இவருடைய நூல்களில் வடமொழி பற்றிய கருத்துக்கள் நிறைய வருதல் இயல்பு.

    அவர், இந்நூலில்,

      "வடநூலார் யாப்பை ஆனந்தரிய மென்றும், நுதலிய பொருளை விடய மென்றும்; கேட்போரை அதிகாரி களென்றும்; பயனைப் பிரயோசனமென்றும் கூறுப; யாப்புச் சம்பந்த மென்பாருமுளர்!"

    என்று குறிப்பிடுகின்றார்.

    இதனை உரைவேந்தர், பின்வருமாறு விளக்குவர்:

      "ஆனந்தரிய மாவது, இன்னது கேட்ட பின்பு, இன்னது கேட்கவேண்டுமென்னும் முறைமை உணர்த்துவது. 'பின்' என்னும் பொருளதாகிய 'ஆநந்தரம்' என்பது 'ஆனந்தரியம்' என வந்தது" (L.VII)

    இவ்வாறே சிவஞான முனிவர், பல்வேறிடங்களிலும் வட சொற்களை ஆள்வர். அவற்றிற்கெல்லாம், உரைவேந்தர் விளக்கம் தந்து செல்வர்.

    அவினா பாவம்', அருத்தாபத்தி', புனருற்பவம்' பிரவாகா நாதி' முதலான பல்வேறு வடசொற்கள் வருகின்றன.

    அவினா பாவம் - விட்டு நீங்காத் தன்மை; மட்குடத்துக்கும் மண்ணுக்குமுள்ள இயைபு போல. (ப.19)

    அருத்தாபத்தி - பகலுண்ணான் சாத்தன், பருத்திருப்பான் என்ற - வழிப் பருத்திருத்தற்கேதுவாய உணவுண்டல், இரவில் நிகழ்கிற தெனத் துணிதல். அதுபோல, உடற்கு இட்ட பெயரால் அழைக்க, உயிர் விடை யிறுத்தற்கேதுவாய அபேதக் கலப்புண்மை துணியப் படுகிறது. (ப.44)

    புனருற்பவம் - மீளவும் படைத்தல்.(ப.52)

    பிரவாகாநாதி - பிரவாகம் போல அநாதி. ஓடுகிற தண்ணீ ரில் ஒட்டம் இருப்பினும், தண்ணீர் நிலையாய்க் காணப்படுவது போல, வினை செயப்பட்டும் நுகரப்பட்டும் வரினும் இடையறாது உளதாதல்.(ப.67)

    இவ்வாறு உரைவேந்தர் கூறும் விளக்கங்கள் மிகப் பல எனலாம்.

    'தொல்காப்பியம்' போன்ற இலக்கண நூல்களில் மிக்க புலமையுடையவர் உரைவேந்தர் என்பதற்கு, இச் சிவஞான போத மூலமும் சிற்றுரையும்' என்ற பதிப்பு சான்று பகரும். இங்கே சில மட்டும் சுட்டப்படுகின்றன:

    'சொற்பொருட்பின்வருநிலை' எனச் சிவஞான முனிவர் கூறிய போது.

      "முன்வரும் சொல்லும் பொருளும் பலவயின்
      பின்வரும் என்னில் பின்வரு நிலையே" (தண்டி. சொல். 63)

    என்றும் (ப.35);

    பண்ணை என்னும் ஐகாரம், பகுதிப்பொருள் விகுதி' என முனிவர் கூறிய இடத்தில்,

      "ஐகாரம், பண் என்னும் சொல் இறுதிக்கண் நின்று அச்சொற் பொருளையே உணர்த்திற்றாதலால், பகுதிப் பொருள் விகுதி எனப்பட்டது. முன்னர், பின்னர் என்ற சொற்களின் ஈற்றில் நிற்கும் 'அர்' என்பது போல, 'ஐ' என்னும் இறுதிநிலையை நோக்கப் 'பண்' என்பது முதனிலையாதலின், அதனைப்பகுதி என்றும், அப்பொருளே ஐகாரத் தாலும் வற்புறுத்தப்படுதல் பற்றி, பகுதிப் பொருள் விகுதி என்றும் கூறினார். 'பழமதுவும்' என்ற இடத்து, 'அது' என்பதும் பகுதிப் பொருள் விகுதி!" (ப.48)

    என்றும்;

      "உண்டிவினை-உம்மைத் தொகை" என முனிவர் கூறியதற்கு,

      "உண்டியும் வினையும் வருதற்குரியது, 'உம்'மை யின்றி, உண்டிவினை' எனவந்தமையின் உம்மைத் தொகை' யாயிற்று" (ப.99)

    என்றும்;

    முனிவர், 'தனது சாத்தி சங்கற்ப மாத்திரையான் அனைத்தும் செய்தல் கூடுமென்பது குறிப்பெச்சம்..... இன்றி' என்னும் வினையெச்சக் குறிப்பின் 'இகரம்' செய்யுளாகலின் உகரமாய்த் திரிந்தது. அன்றே- அசை, இவ்வியல்பு சித்தாந்த நெறி யுணர்ந்தார்க்கு அன்றி விளங்காது என்பார் அருட்கண்ணார் கண்ணுக்கு' என்றார்!" என ஓரிடத்து எழுதுவர்.

    இதற்கு ,

      "திருவருளாகி சத்தி, சங்கற்ப மாத்திரையான் அனைத்தும் செய்தலை, காரைக்காலம்மையார், அருளே உலகெல்லாம் ஆள்விப்ப தீசன், அருளே பிறப்பறுப்பதானால் - அருளாலே, மெய்ப்பொருளை நோக்கும் விதியுடையேன் எஞ்ஞான்றும், எப்பொருளு மாவதெனக்கு!'(அற்பு.9) என்று அருளுவது காண்க!
      "குறிப்பெச்சம், 'சொல்லொடும் குறிப்பொடும் முடிவு கொள் இயற்கை. புல்லிய கிளவி எச்சமாகும்' (தொல். சொல்.24)

      "இன்றி என்னும் வினையெஞ்சு இறுதி, நின்ற
      இகரம் உகரமாதல், தொன்றியல் மருங்கின் செய்யுளுளுரித்தே'
      (தொல். எழுத்து. உயிர் மயங்கு. 35)

      "சித்தாந்த நெறியுணராதார், அருளாகிய மெய்ப் பொருளை நோக்கும் விதியுடையாரல்லாதலின், அவர்க்கன்றி ஏனை யோர்க்கு விளங்காது என்றார். அவனருளாலே கண்ணாகக் காணினல்லால்' என நாவரசரும்; அவனருளாலே அவன்தாள் வணங்கி என மணிவாசகரும் அருட் கண்ணுடையராய் உரைத்தருளுவன காண்க!" (ப.162)

    என்றும், உரைவேந்தர் கூறும் நயவுரைகளும், இலக்கண மேற்கோள் களும் எண்ணில் பலவாம். இந்நூல் குறித்து மிக விரிவாக ஆராய்வதற்கும் இடனுண்டு!

    உரைவேந்தரின் நூல்களனைத்தையும் ஆராய்ந்தால், மேலே கூறியன தவிர மேலும் பலவற்றை நோக்கலாம். அவையெல்லாம் தனித்தனியாக ஆய்வு செய்தற்குரியன.
    -------------------

    5. நற்றமிழ் நாவலர்

      "சொல்வன்மை அஞ்சாமை சோர்வின்மை யொடுவாதில் வெல்வன்மை யும்முடைய வித்துவச் சிகாமணிநீ! கம்பர்கவிக் கவினையுமுட் கரந்தமைந்த பொருட்சுவையும் இம்பர் உனைப்போலெவர்மற்றினிதறிந்தார்? எடுத்துரைத்தார்? பன்மொழிக்குந் தாயாகிப் பரந்துலவுந் தமிழ்க்கன்னி நன்மொழிக்கு நாயகனாய் நவிறலுநிற் குயர்வேயோ? குன்றழிக்குங் குமரனருள் கொழுந்தமிழை யன்றேபோல் இன்றளிக்கும் தலைவன்நீ எனலுநினக் கிசையேயோ?"

    என்பது, உரைவேந்தரின் மாணவர், 'கோமான்' ம.வி. இராகவன் என்பாரின் புகழுரை!

    'நற்றமிழ் நாவலர்' என்பது, 'நற்றமிழில் பேசுவதில் நாவன்மை யுடையவர்' என்ற பொருள் தருவதோடு, நற்றமிழ்ப் பற்றும், நற்றமிழ் வழங்கும் தமிழ்நாட்டுப் பற்றும், நற்றமிழைப் பேசும் நந்தமிழினப் பற்றும் கொண்டு, மேடைதோறும் தமிழ் முழக்கம் முழங்கியவர் உரைவேந்தர் என்ற பொருளும் தருவதாம்.

    ஆழ்ந்த தமிழ்ப்பற்று

    இடைக்கலை வகுப்பை முழுதும் முடிக்க முடியாத சூழ்நிலையில், அப்படிப்பை நிறுத்திவிட்டுப் பொருள் வருவாயின் பொருட்டு நகராட்சியில் 'உடல் நலத் தூய்மைக் கண்காணிப்பாளர்' பணியில் அமர்ந்தார் உரைவேந்தர். ஆனால், 'தம் வாழ்வனைத்தும் தமிழ் வாழ்வே' என்ற குறிக்கோள், அப்பணியில் நீடிக்க விடவில்லை. அதை உதறித் தள்ளிவிட்டுத் தனித்தமிழ் பயின்று வித்துவான்' ஆகவேண்டும் என்ற வேட்கையால், கரந்தைத் தமிழ்ச் சங்கத்தை நாடிவந்த உரைவேந்தரைத் தமிழவேள் உமா மகேசுவரனார், தம் பிள்ளை போல் கருதி, உடனே ஆசிரியப் பணியளித்து உதவினார்! உரைவேந்தரும் முறையாகத் தமிழ் பயின்று வித்துவான்' தேர்விலும் தேர்ச்சி பெற்றுத் தமிழாசிரியராக ஆனார் என்ற செய்திகள் முன்பே சுட்டப்பட்டன.

    வடஆர்க்காடு திருவத்திபுரத்தில் இவர், தமிழாசிரியராகப் பணிபுரிந்த போது, ஒளவைத் தமிழகம்' என்றதோர் அமைப்பு நிறுவப்பெற்றது. தமிழ் பயிலும் மாணவர்க்கு முறையாக இலக்கிய இலக்கணப் பயிற்சிகள் அளிக்கப் பெற்றன. அவர்களை உரைவேந்தர் வித்துவான்களாக ஆக்கினார்.

    தமிழைக் கற்பிப்பதோடு மட்டுமன்றி, அயல்மொழித் தாக்குதல் - களிலிருந்து தமிழைக் காக்கும் அரும்பணியிலும் உரைவேந்தர் முனைந்து நின்றார். 1938இல், கட்டாய இந்தியைத் தமிழகத்தில் திணிக்க அன்றைய ஆட்சியாளர் முயன்ற போது, அதனை எதிர்த்துத் தமிழவேள் உமாமகேசுவரனாரும், நாவலர் ச. சோ. பாரதியாரும், முத்தமிழ்க் காவலர்' கி. ஆ. பெ. விசுவநாதமும் தமிழகமெங்கும் சுற்றுப்பயணம் செய்து அணி திரட்டினர். அக்குழுவினர் வட ஆர்க்காடு மாவட்டத்திற்கு வந்தபோது, அவர்களை உரைவேந்தர் வரவேற்று, நிகழ்ச்சிகளிலும் பங்கு பெற்றார். அதன் விளைவாகவே, 12 ஆண்டுத் தமிழாசிரியப் பணியின்போது, பற்பல ஊர்களுக்கு அரசினரால் மாற்றம்
    செய்யப்பட்டுப் பல்வேறு இடையூறுகளுக்கும் ஆளானார்!

    தம்மிடம் வித்துவான்' தேர்வுக்காகப் பாடம் பயில வரும் மாணவர்கட்குத் தமிழை முறையாகக் கற்பித்தார். பாடம் தொடங்குவதற்கு முன், உரைவேந்தர், தாம் பாடிவைத்த பாடல்களை முதற்கண் படிக்க வேண்டும் என்பார். அப்பாடல்கள், அகத்தியர், தொல்காப்பியர், திருவள்ளுவர், சேனாவரையர், நச்சினார்க்கினியர், பரிமேலழகர் ஆகிய புலவர் பெருமக்களுக்கு வணக்கம் கூறுவனவாக அமைந்திருக்கும்.

    உரைவேந்தர் எண்ணியிருந்தால், வித்துவான்' பட்டத்தோடு அமையாமல், தமிழ் முதுகலை, முனைவர்' முதலான பட்டங்களையும் பெற்று, ஒரு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகக்கூட ஆகியிருக்க முடியும். ஆனால் அவ்வாறு ஆக விரும்பவில்லை!

      "பாழான இந்தப் பழந்தமிழ் ஏடுகளைத் தேடித் திரிந்து, ஆராய்ந்து கழித்த உங்கள் காலத்தை, பி.ஓ.எல்., எம்.ஓ.எல்., என்ற பட்டங்களைப் பெறுதற்குக் கழித்திருந்தால் உங்களது வாழ்க்கை பொருள் நிலையில் மிக்க சிறப்புற்றிருக்கும்' என்று என் நண்பரொருவர், என் சங்க நூல் வெளியீடுகளை நோக்கி, என்பால் கொண்ட உண்மையான்பினால் கழறிக் கூறினார். பொருள் நிலை நோக்கி, அவர் கூறிய பொருளுரை உண்மையுரையே; அதனை எண்ணி ஒருகால் உள்ளம் அலையினும், பிற எக்காலத்தும் இந்த இனிய தமிழ்ப் பணியிலே அதனை உறைப்புற்று நிற்பித்து இதனை இவ்வளவில் முற்றுவித்த தமிழ்த்தாயின் தண்ணிய திருவருளையே வியந்து பரவுகின்றேன்!"

    என்று உரைவேந்தர் கூறுகின்றார் (புறநா. முன்னுரை) எனின், இவர்தம் தூய தமிழ்ப்பற்றின் திண்மையை என்னென்பது?

    உரைவேந்தர், தம் வாழ்வின் குறிக்கோளாகக் கொண்டது அன்னைத் தமிழுக்குச் செய்யும் அருந்தொண்டு என்பதேயாம்.

      "சுமார் நாற்பது ஆண்டுகட்கு முன் யான் தமிழறிவு ஓரளவு பெற்றுப் பழந்தமிழ் இலக்கியங்களைப் பயின்று இன்புற்ற காலை, சில நூல்கள் குறைவுற்றி
      ருந்தமை கண்டு, எங்ஙன மேனும் முயன்று நிறைவு செய்வது, தமிழன்னைக்குச் செய்யத் தக்க பணி யென்ற கருத்தை உட்கொண்ட- தோடு, அதனையே என் வாழ்வின் குறிக்கோளாகக் கொண்டேன்!"

    என்று இவர் கூறுவது (நற்றிணை: முன்னுரை) மனம் கொளத்தகும்.

    தமிழ்நாட்டைப் பற்றியும், தமிழினத்தைப் பற்றியும், தமிழைப் பற்றியும், ஒல்லும் வாயெல்லாம் ஓயாதுரைப்பது இவர்தம் இயல்பு! இங்கே சில காட்டலாம்:

      "சங்ககாலச் சோழபாண்டியர்க்குப் பின், தமிழ்நாடு 'களப்பிரர்' என்ற இனத்தவரின் கைப்பட்டுத் தன் சீரும் திருவும் இழந்து சமழ்ப்புற்றது. வேற்றுமை மாசின்றி ஒருமைச் சமுதாயமாய்க் கடற்கு அப்பாலுள்ள மேலைநாடுகளும், கீழைநாடுகளும் போற்றிப் பரவ வீற்றிருந்த அதன்புகழ் மறைந்தது! அறவர் அறவராய், மறவர் மறவராய் மாண்பு பெற்ற தமிழர், மாற்றவர்க்குப் பணிந்து, அவருடைய அடிவருடும் அடியராகும் அடிமைநிலை எய்தினர். தமிழ் இயலும் இசையும் கூத்தும் தமக்குரிய இடமிழந்து இறந்தொழிந்தன. அரசியல் - வாணிகம் - தொழில் முதலிய வாழ்க்கைக் கூறுகள் மறைந்து போயின!"

    என்று தமிழரின் வீழ்ச்சி குறித்து, உரைவேந்தர் மனம் நொந்து எழுதுகின்றார். (வரலாற்றுக் காட்சிகள்)

    தமிழின் தாழ்நிலை குறித்து உரைவேந்தர், 1956இல், ஆற்றிய பேருரையிலிருந்து ஒரு சிறு பகுதி அறியத்தகும்

      "தமிழ் மக்களின் தமிழகம் இடம் சுருங்கி, பண்பாடு மெலிந்து, அடிமையுணர்வு மிகுந்து, வறுமையில் நெளிந்து கொண்டிருக்கும் நிலையில் நிறுத்தப் பெற்றுளது. காணும் இடமெல்லாம் தமிழர் அறியாத மொழிகள் காட்சி தருகின்றன. காணப்படும் ஒருசில தமிழ்ச் சொற்களும் பெயர்களும் பிழையும் வழுவும் பெருகியுள்ளன. அரசியல் நிலையங்களிலும், தொழில் வாணிக அலுவலகங்களிலும் புகைவண்டி முதலிய போக்கு வரவுகளிலும், சமய நிலையங் களான கோயில் வழிபாடுகளிலும் பிற துறைகளிலும் தமிழர்களின் தமிழ் இல்லை ! தமிழர் உள்ளம் வளர்க்கும் தமிழ்க் கருத்தும் ஒழுக்க நெறியும் தக்கவாறில்லை ! தமிழர் அனைவரும் பிறர் யாருக்கோ அடிமைப்பட்டு, உரிமையிழந்து, மான மில்லாத வற்றல் மரங்கள் போல, வாடிய உள்ளமும் கோடிய நினைவும் கொண்டு, குனிந்து தோன்று கின்றனர். தமிழரது தமிழ் வாழ்வு, தமிழகத்தில் தான் இது நிலை என்றால், அவருடைய கிளைஞர் வாழும் பிறநாடுகளிலும் இந்த அவலநிலையே நிலவுகின்றது"

    தமிழ் மொழியின் அவலநிலை குறித்து உரைவேந்தர் மனம் வெதும்பி உரைப்பன இன்னும் பலவுள!

    கடவுள் வழிபாட்டிலும், தமிழ்மொழிக்கு இடமில்லாது போனது பற்றியும் உரைவேந்தர் சிவஞானபோதச் சிற்றுரைப் பதிப்பில் இப்படிக் கூறுகின்றார்:

      "வைதிக நூல்களும் சைவ நூல்களும் செய்து கொண்ட பூசலால் சிவவழிபாடு சீரழிந்தது. புறச் சமயங்கள் தோன்றி, தொண்டை நாட்டிலும் தென்பாண்டி நாட்டிலும் அரசியலைக் கைப்பற்றிக் கொண்டன. சமயவாதிகள் மேற்கொண்டிருந்த வடமொழியே , அவரது சமயம் போல அரசியலைக் கைப் பற்றியது. ஆரியம் எனப்படும் வடமொழி, சமய நிலையங்களிலும் அரசர் உள்ளத்திலும் இடம் பெற்றது. தொண்டை நாட்டில் பல்லவர்களின் அரசியல் மேலோங்கியிருந்தமை யின், காஞ்சி, மதுரை முதலிய பல இடங்களில் வடமொழி பயிற்றும் பல கடிகைள் (கல்லூரிகள்) உளவாயின. இதனால், மக்கள் பேசும் தமிழ்மொழி, கடவுள் வழிபாட்டிலும், அரசர் செல்வாக்கிலும் போதிய இடம் பெறாதொழிந்தது. இதன் விளைவாகத் தமிழ்நாட்டுத் தமிழ்மக்களிடையே சமய வுணர்வும், சமய ஒழுக்கமும் குன்றின! வடமொழியையும் அதன் சிதைவு மொழியையும் மேற்கொண்டு, மக்கள் வழங்கும் தமிழ்மொழியைப் பேணாதொழிந் தமையால், வைதிக நெறியும் பௌத்த சமண நெறியும் வேருன்றாது வறிதே நின்றன!"

    சொல்வன்மை

    தமிழகத்தில், கற்பிக்கும் திறன் பெற்று 'நல்லாசிரியர்களாக விளங்கியோர் பலர்; ஆனால் இவர்களில் பலருக்கு எழுத் தாற்றலும், மேடையேறிப் பேசும் பேச்சாற்றலும் வாய்ப்பதில்லை. அவ்வாறே, சிறந்த எழத்தாற்றல் உடையோருள் பலர், மேடையேறிப் பேசும் திறன் பெற்றாரிலர். பாடம் சொல்லும் திறமை, எழுத்தாற்றல், நாவன்மை எனும் இம்மூன்று திறனும் ஒருவரிடம் ஒருங்கே அமைதல் அரிது அரிது! ஆனால் இம்முத்திறனும் ஒரு சேர முழுமையாக வாய்க்கப் பெற்றவர் உரைவேந்தர்.

    "கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும்
    வேட்ப மொழிவதாம் சொல்" (குறள்:643)

    என்பார் திருவள்ளுவர். "நட்பாய் ஏற்றுக் கொண்டவரைப் பிணிக்கத் தக்க குற்றமின்மை, சுருங்குதல் முதலான குணங்களுடன் பகையாய் ஏற்றுக் கொள்ளாதாரும், பின் அப்பகைமை நீங்கி நட்பை விரும்புமாறு சொல்லப்படுவதே சொல்லாம்" என்பது இதன் பொருள். பேசுவது என்பது ஓர் அருங்கலை; பெறுதற்கரிய கலை. இஃது உரைவேந்தருக்குப் பிறவிப் பேறாக வாய்ந்தது. இவர், விவேகானந்தரை முன் மாதிரியாகக் கொண்டு, தமது பேச்சுத் திறனை வளர்த்துக் கொண்டவர். நேரம் கிடைக்கும் போதெல்லாம் விவேகானந்தரின் ஆங்கிலச் சொற்பொழிவுகளை ஆழ்ந்து படிப்பார். சிறந்த பேச்சாளராக விரும்புவோர், விவேகானந்தரின் சொற்பொழிவுகளைப் பன்முறை படிக்க வேண்டும்' எனத் தம் மாணவர்கட்கு அறிவுறுத்துவார் உரைவேந்தர்.

    கவர்ச்சியான தோற்றம், பேரவைகளுக்கு அஞ்சாத துணிவு, எடுப்பான இனிய குரல், சீரிய செந்தமிழ் நடை, திருத்தமான - தெளிவான உச்சரிப்பு, சிந்தனைத் தெளிவு, நினைவாற்றல், சொல்லழுத்தம், தட்டுத் தடையின்றித் தொட்டுத் தொடரும் பேச்சோட்டம் எனப் பேச்சாளர்க் குரிய தன்மைகள் அனைத்துமே உரைவேந்தரிடம் இயல்பாகவே அமைந்துவிட்டன. பேச்சுக்குரிய பொருள், இலக்கியம், இலக்கணம், சமயம் ஆகியவற்றுள் எதுவாயினும் அதுபற்றிய செய்திகளையும், கருத்துக்களையும் வரையறுத்து, வகைப்படுத்தி, முன்பின் முரணாமல், காரண காரியத் தொடர்பு அமைய நிரல்படத் தொடுத்துப் பொருத்தமான மேற்கோள்களோடு வருத்தமின்றி விளக்கி, கேட்போர் அருமை, அருமை' எனப் பெருமையாகப் போற்றுமாறு உரையாற்றும் திறன் கொண்டவர் உரைவேந்தர். இவரின் 'நாவன்மை' குறித்து, இவரின் மாணவர் ம.வி. இராகவன் கூறுவது இவண் குறிக்கத்தகும்:

      "சமயச் சொற்பொழிவுகளில் அவருடைய (உரைவேந்தர்) சிந்தனைத் தெளிவையும், சாத்திரத் தேர்ச்சியையும் காணலாம். இலக்கணச் சொற் பொழிவுகளில் நுண்மாண் நுழை புலத்தையும் ஆய்வுத் திறனையும் அறியலாம். இலக்கியச் சொற் பொழிவுகளில் ஆழ்ந்தகன்ற நூலறிவையும், நயம் கண்டு சுவைக்கும் பண்புநலத்தையும் உணர்ந்து இன்புறலாம். இலக்கியங்களும், சிறப்பாகக் கம்ப ராமாயணப் பகுதிகள் பற்றிக் கற்றோர் இதயம் களிக்குமாறு உரையாற்றுவதால் பிள்ளையவர் களுக்கு (உரைவேந்தர்) இணை, பிள்ளையவர்களே! பேச எடுத்துக் கொண்ட பகுதியை நாடகக் காட்சி யாக அமைத்து, அதற்குரிய பாத்திரங்களை அவை யோர் மன அரங்கிலே மாறி மாறி வந்து நடிக்கச் செய்து அவர்களை இன்ப வெள்ளத்தில் ஆழ்த்தும் அற்புத ஆற்றலைப் பிள்ளை யவர்கள் பாலன்றிப் பிறரிடம் காண்பதரிது!"

    உரைவேந்தர், தாம் பேசுதற்கு முன், வீட்டிலேயே சில குறிப்புக்களைத் தயாரித்துக் கொள்வார். அக்குறிப்புக்களை அப்படியே மனத்தில் பதிய வைத்துக்கொண்டு பேசுவாரேயன்றி, அவற்றைப் பேசும் இடத்திற்குக் கொண்டு வரமாட்டார் ! அத்துணை நினைவாற்றல் கொண்டவர் !

      "நமது புலவர் பெருமான் (உரைவேந்தர்) நாவீறு கெழும அஞ்சொல் உரையாற்றும் பேருரை யாளருமாவர்! சிறந்த பேச்சாளர்கள் (தொடர்பன் எழுதியது) என்னும் நூலில், இவர் உரைத்திறன் பாராட்டப்பெறுவதைக் கருத வேண்டும். இவர், சொற்றொடர் எவ் வினைமுற்றால் முடிகிறதோ, அதனையே எச்சமாக்கி, அடுத்த சொற்றொடரைத் தொடங்கும் அந்தாதித் தொடை மரபினை அழகொழுக ஆள்வர்; எனவே' என்ற சொல்லைப் பெய்து, தம் கருத்துக்களைத் தீர்ப்பாக உரைப்பார். இன்னிசை விருந்தென்ன இடிப்பண்ணும் இழைய உரைவேந்தர் பேசும் அழகே அழகு!"

    எனப் புலவர் தி.நா. அறிவொளி கூறுவார்!

    பேசுவது ஒன்று ; எழுதுவது ஒன்று' என்றில்லாமல் பேசுவது போன்றே எழுதுவார்; எழுதுவது போன்றே பேசுவார். கொச்சைத் தமிழை இச்சையோடு பேசுவதென்பது, இவர்பால் என்றும் காணமுடியாத ஒன்று. தூய, இனிய, செந்தமிழ் நடையில் பேசுவதும் எழுதுவதும் இவருக்குக் கைவந்த கலை! பேச்சின் முடிவில், அனைத்தையும் தொகுத்துக் கூறி முடிப்பார். இதனால் சொற்பொழிவின் இறுதியில் வந்தவர்கூட இவர் என்ன பேசினார்' என்பதை ஓரளவு புரிந்து கொள்ள முடியும். இது, திரு.வி.க. பாணி! |

    உரைவேந்தர், தமிழகத்தில் பேசாத இலக்கிய மேடையோ, சமய மேடையோ இல்லை எனுமளவுக்குப் பல்வேறு கூட்டங்களில் தலைமை தாங்கியும், விரிவுரையாற்றியும் மக்களை மகிழ்வித்தவர். இவருடைய உரைவீச்சுகள் பல, குறிப்பெடுப்பாரின்றிக் காற்றோடு காற்றாய்ப் போய்விட்டன. ஒன்றிரண்டு மட்டும் அச்சு வடிவம் பெற்றுள்ளன.

    1940ஆம் ஆண்டில், ஆம்பூர் சைவ சித்தாந்த விழாவில், சிவபுராணம்' என்ற பொருள் பற்றி உரைவேந்தர் ஆற்றிய பேருரை, சிறுநூல் வடிவம் பெற்றுள்ளது.

    மாணிக்கவாசகர் அருளிய சிவபுராணம் 95 அடிகள் கொண்டது. இதனை 9 உட்பரிவுகளாகப் பகுத்துக் கொண்டு உரை நிகழ்த்தியுள்ளார் உரைவேந்தர்.

    ’புராணம்' என்ற சொல்லைக் கேட்டதுமே, அது ஒரு குப்பை என்று தான் பலரும் ஒதுக்குவர்; வெறுப்பர். ஆனால் மணிவாசகர் அருளிய இச் சிவபுராணம்' அப்படிப்பட்டதன்று. இதனை உரைவேந்தர் கூறும் விளக்கமே தனி :

      "இக்காலத்தே நிலவும் புராணங்களுட் பல, இக்கால மக்களின் கருத்துக்கு ஒவ்வாத நிலையில் இருப்பது கொண்டு, இக்காலத்தவர்க்குப் புராணம் என்ற சொல்லே அருவருப்பைப் பயந்து நிற்கின்றது. அதனால் சிலர், சிவபுராணம்' என்பதும் அப் புராணங்களுள் ஒன்றே எனக் கருதித் தவறு கூறுகின்றனர். அவர்கள் இதனை ஒருமுறை கருத்தூன்றிப் படிப்பரேல் தம் தவற்றுக்கு வருந்துவர். எதிர்காலத்தே இவ்வாறு கூறுவோரும் உளராவர் என்று கருதியோ, என்னவோ, அடிகளார், இச்சிவபுராணத்தின் முடிப்புரையில், 'சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார் உளராதல் வேண்டும்' என வற்புறுத்தியுள்ளார் என நினைக்க வேண்டி இருக்கிறது!"

    என்பது இவரது சொற்பொழிவின் முன்னுரை.

    இச் சிவபுராணச்' சொற்பொழிவின்போது, மக்கள் ஆர்வமாய்க் கேட்கவேண்டும் என்னும் கருத்தால், தொடக்கத்தில், திருக்குறள் காமத்துப்பாலில் வரும் ஒரு பாடலைக் குறிப்பிடுகின்றார்:

    "ஊடி இருந்தேமாத் தும்மினார் யாம் தம்மை
    நீடுவாழ் கென்பாக் கறிந்து" (குறள் 1312)

    என்பது உரைவேந்தர் எடுத்துக் கூறிய திருக்குறள். 'இதற்கும் சிவபுராணத்திற்கும் என்ன தொடர்பு?' என்றுதான் கேட்கத் தோன்றும்.

    திருவாசகச் சிவபுராணப் பகுதியை, 'பாயிரம், வாழ்த்து, வெற்றி, வணக்கம், நூற்பொருள், அவையடக்கம்' என்னும் கூறுகளாகப் பகுத்துக்கொண்டவர், ’வாழ்த்து' என்ற பகுதியை விளக்க வருங்கால் மேற்காட்டிய திருக்குறளைக் கையாள்கின்றார்.

      "வாழ்த்தினை முதற்கண் கூறியது அவர்க்கு (மணி வாசகர்)ச் சிவபரம்பொருள்பாலுள்ள பேரன்பினை எடுத்துக் காட்டுகின்றது;

      "உண்மையன்புடையார், தம்மால் அன்பு, தாம் புகழ்தற்கும் வணங்குதற்கும் உரியராகியவழி , அவற்றைச் செய்யாது வாழ்த்துதற்கே முதற்கண் விரும்புவர். உழுவலன்பால் பிணிக்கப்பட்ட ஒருவனும் ஒருத்தியும் கூடியிருந்தவழி, அவன் அவளால் வணங்கவும் புகழவும் படுதற்குரிய னாகவும், வாழ்த்தப்படுவதையே அன்பின் முதிர் நிலையாகவும், இன்ப ஊற்றாகவும் சான்றோர் கருதுவர். அ.து உயிர்கட்கு இயல்புமாகும். இதனை, இன்பநுகரும் சிறப்பால் ஊடியிருந்த காதலர்மாட்டு நிகழ்ந்த நிகழ்ச்சி ஒன்றைக் குறிக்கப் போந்த வள்ளுவப் பெருந்தகையார், காதலியாகிய அவள், தன் காதலனாகிய கொழுநனை வாழ்த்தும் செயலையே விதந்து, அவள் கூற்றில் வைத்து,

      "ஊடி இருந்தேமாத் தும்மினார் யாம் தம்மை
      நீடுவாழ் கென்பாக் கறிந்து"

    எனக் கூறுதல் காண்க!"

    அவையோர் இதனைக் கேட்டு மகிழாதிருப்பரோ? உரை வேந்தரின் நாவன்மைக்கு வேறென்ன சான்று வேண்டும்?

    உரைவேந்தர், ஆங்கிலத்திலும் புலமை பெற்றவர்; அப்புலமை, தமிழ் உயர்வுக்கும், சைவ மாண்புக்கும் கை கொடுத்து உதவியது.

    தூத்துக்குடி சைவசிந்தாந்த சபை ஆண்டு விழாவில் தலைமை தாங்கிப் பேசிய பேச்சில், இத்தகைய தன்மையைக் காணமுடிகின்றது.

    உரைவேந்தர், தமது தலைமையுரையில், மேலைநாட்டு அறிஞர்களின் கருத்துக்கள் பலவற்றைச் சைவசித்தாந்தக் கருத்தோடு ஒப்பிட்டுப் பேசுகின்றார்:

      "வந்தவாறு எங்ஙனே போமாறேதோ , மாயமாம் பெருவாழ்வு' என்றார் நாவரசர். இதன் முதற்பகுதிக்கு உரைகூறுவோர் போல, மக்களுயிர் உலகிற்கு வந்தவாற்றைக் கூறலுற்று, விண்மீன் வீழ்ச்சியும், ஞாயிற்றுத் தெறிப்பும், நிலவுலகின் தோற்றமும் பிறவும் விரியக் கூறி, இந்நிலவுலகிற்கு மக்களுயிர் வந்தது தற்செயலாக அமைந்தது என விஞ்ஞானம் கூறுகிறது' என்று சர் சேம்சுசீன்சு உரைத்தார். தற்செயல் விளக்கமில்லாத சொல்லாதலின், வந்தவாறு ' காண்டதற்கு விஞ்ஞானம் வலியிழந்து நிற்கிறதென்பது தெளிவாகும்!

      "பின்பு அவர், ஜன்சுடைன், கீசன்பர்க் திராஅக் இலமேத்தர் லூயி - தெ - புரெக்ஸி முதலாயினார் கண்ட பெளதிகவுலகை விளக்கிக் கூறி, முடிவில் தத்துவஞானம் என்ற ஆழ்கடலுள் மூழ்குகின்றார். அதன்கண், பிரபஞ்சம் 'கடசக்கரர் எந்திரம் எனச் சுழல்வது' (காஞ்சிபுராணம் - காப்பு) எனக் காண்கின்றார். முடிவில் இது, 'படைக்கப் பட்டதே' என்று தேறி, 'இதுவும் சங்கற்பத்தால் படைக்கப்பட வேண்டும்' எனவும்; இதனைப் படைத்தோன், ஓவியம் வல்லான் ஒருவன், தான் தீட்டும் ஓவியக் கிழிக்குப் புறம்பே நின்று ஓவியத்தை எழுதுவது போல, காலம் இடம் முதலியன கடந்து நின்றே படைத்திருத்தல் வேண்டும் என இன்றை விஞ்ஞானக் கொள்கை நம்மை நினைக்குமாறு வற்புறுத்துகிறது' என்ற கருத்துப்படவும் கூறி முடிக்கின்றார். முடிவில் அற்புதப் பிரபஞ்சம்' (The Mysterious Universe) என்ற நூலை எழுதி முடித்தார் சர்சேம்சுசீன்சு!"

    இவ்வாறு, தாம் பெற்ற ஆங்கிலப் புலமையைச் சமயமறிந்து சைவசமயத்தோடு ஒப்பிட்டுப் பேசும் பேராற்றல் பெற்றவராகவும் விளங்கினார் உரைவேந்தர்!

    சைவ சித்தாந்தக் கருத்துக்களின் பிழிவு இச் சொற்பொழிவு' எனக் கூறலாம்.

    உரைவேந்தர், ஞானாமிர்த மூலமும் பழைய உரையும்' என்ற நூலினை எழுதுவதற்கு முன், சைவசித்தாந்த சமாச அமைச்சராக இருந்த மா. பாலசுப்பிரமணிய முதலியாரின் விருப்பப்படி, குன்றக்குடியில், சிவக்கவிமணி சி. கே. சுப்பிரமணிய முதலியார் தலைமையில் நடந்த ஆண்டு விழாவில் ஞானாமிர்தம்' என்ற தலைப்பில் உரையாற்றினார். உரைவேந்தரின் பேச்சினைக் கேட்டு மகிழ்ந்த சித்தாந்த சரபம்' பழனி ஈசான சிவாசாரியார், இரும்புக் கடலைப் பக்குவமாக வேகவைத்து விட்டீர்கள்!' என்று உரைவேந்தரைப் பாராட்டினார். பண்டிதமணி மு. கதிரேசச் செட்டியாரும் சிவக்கவி மணியும் ஞானாமிர்த நூலை நன்கு ஆராய்ந்து வெளியிடுமாறு கூறினர் என்ற செய்திகள் முன்னரும் சுட்டப்பட்டன.

    தருமையாதீனத் திருமடத்தில், 1941 ஆம் ஆண்டு, ஆகஸ்டுத் திங்கள் 28 முதல் 31 வரை, மெய்கண்டார் சித்தாந்த மாநாடு' ஒன்று நடந்தது. அப்போது, 30.8.41 இல், கோ.ம. இராமச்சந்திரன் செட்டியார் தலைமையில், சிவஞானபோதம்' குறித்து விரிவுரை யாற்றினார் உரைவேந்தர்.

    சென்னையில், 22.4.1944இல், சொல்லின் செல்வர்' ரா.பி. சேதுப்பிள்ளை தலைமையில் நடந்த, 'புறநானூற்று மாநாட்டில், 'புறநானூறு காட்டும் தமிழ் நாகரிகம்', என்ற பொருள் பற்றியும்; 9.2.1952இல், நெல்லை மாநகரில் மு. வரதராசனார் தலைமையில் நடந்த 'பத்துப்பாட்டு மாநாட்டில், 'திருமுருகாற்றுப்படை' என்ற பொருள் பற்றியும்; அவ்வாறே அதே நகரில் 12.2.1956இல், நடந்த 'பதினெண்கீழ்க்கணக்கு மாநாட்டிற்குத் தலைமை தாங்கியும் ஆற்றிய சொற்பொழிவுகளனைத்தும், நற்றமிழ் நாவலர்' எனும் பட்டியலில் இடம் பெறத்தக்கன.

    நெல்லை தருமபுர மடத்தில் 1952 மே திங்களில் 21 நாள் தொடர்ந்து சிவஞான போத பாட வகுப்பு நடைபெற்றது. பாடம் நடத்தியவர் சாத்தூர் வழக்கறிஞரும் தமிழ்ப் புலவருமான தூ.சு. கந்தசாமி முதலியார் ! வகுப்பில் நாற்பது பேர் பாடம் கேட்டனர். அப்போது சிறப்புச் சொற்பொழிவு ஆற்றியவர் உரைவேந்தர்.

    சென்னை மாநகரில், 25.12.1964இல், உரைவேந்தர் தலைமையில் காப்பிய நிறைவு விழா' மிகச் சிறப்பாக நடந்தது. அதில் பெருமழைப் புலவர் பொ. வே. சோமசுந்தரனார் எழுதிய நீலகேசி உரை நூல் வெளியிடப்பட்டது. அவ்விழாவில் உரைவேந்தரின் தலை மாணவியாகக் கருதப்படும் கலையன்னை திருமதி இராதா தியாகராசன், ’சிலப்பதிகாரம்' பற்றிய ஆய்வுச் சொற்பொழிவை நிகழ்த்தினார்.

    இவ்விழாவை நடத்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழக ஆட்சியாளர் வ.சுப்பையா பிள்ளை கூறுவது இவண் குறிக்கத் தகும்:

      "தலைவரவர்களின் (உரைவேந்தர்) மதிப்புமிக்க மாணவி தமிழ்த் திருவாட்டி இராதா தியாகராசன் அம்மையார், சிலப்பதிகாரம்' பற்றி ஆற்றிய சொற்பொழிவினைக் கேட்டவர்கள், விழித்தகண் விழித்தபடியும், மடுத்த செவி மடுத்த படியும் தம்மை மறந்து சுவைத்தனர் என்றால், அது மிகையாகாது! ஆசிரியர் (உரைவேந்தர்) தலைமையில் அவர்தம் அருமை மாணவியார் இனிய பேச்சைக் கேட்க வேண்டுமென்று நீண்ட நாள்களாக எண்ணிய எனது எண்ணம் அன்று நிறைவெய்தி, எனக்கு எல்லையில்லா இன்பம் நல்கியது. இங்கே தமிழறியாத திருவாட்டியார், தம் ஆசிரியரிடம் தமிழ் பயின்ற முறையினை எடுத்து விளக்குவது இனிமை தருவதாகும். முதற்கண் தமிழ் எழுத்துக்களைக் கற்றுக் கொள்ளச் செய்து, பின் திருக்குறள் பரிமேலழகர் உரைநூலைக் கையிலே கொடுத்துப் படித்துப் பொருளுணரு மாறும் அதன் வழியே பிற இலக்கியங்களைக் கற்குமாறும் தம் ஆசிரியர் செய்ததைக் கலைமகளும் திருமகளும் ஓருருக் கொண்டாற் போல் விளங்கும் அம்மையாரவர்கள் இயம்பக் கேட்டு வியந்தேன்!"

    இஃது, ஆசிரியர் தலைமையில் மாணவர் ஆற்றிய உரைச் சிறப்புப் பற்றியது.

    இதேபோல், உரைவேந்தர்பால் தமிழ் பயின்று பின்னர்ச் சென்னைச் சட்டமன்றப் பேரவைத் தலைவராக விளங்கிய புலவர் கா. கோவிந்தன் தலைமையில் (அஃதாவது மாணவர் தலைமையில்) ஆசிரியப் பெருந்தகையாம் உரைவேந்தர் சொற்பொழிவாற்றி யுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

    சைவ சித்தாந்தக் கழகப் பொன்விழாவின் மொழி மாநாட்டிற்குக் கோவிந்தன் தலைமைதாங்க, உரைவேந்தர், மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளையின் திருவுருவப் படத்தைத் திறந்து வைத்து உரையாற்றினார்.

    1971 பிப்ரவரியில், மதுரைத் திருவள்ளுவர் கழகத்தில் நடந்த சைவசித்தாந்தக் கழகப் பொன் விழாவின்போது, மாவட்ட ஆட்சித் தலைவர் கி. இலட்சுமிகாந்தன் பாரதி தலைமையில், பேராசிரியர் கா.சு. பிள்ளையின் திருவுருவப் படத்தைத் திறந்து வைத்து உரையாற்றினார் உரைவேந்தர்.

    தூத்துக்குடி சைவசித்தாந்த சபை, மிகப் பழமையானது; பெருமை பெற்றது. அதன் 65ஆம் ஆண்டு நிறைவு விழாவுக்குத் தலைமை தாங்கி, நீண்டதோர் உரையாற்றினார் உரைவேந்தர். "சித்தாந்த சைவச் செந்நெறி நிறைக்கும் பெருமக்களே! அந்நெறி வளர்க்கும் தாயர்களே! அன்பர்களே!" என்று விளித்து இவராற்றிய சமயச் சொற்பொழிவைக் கேட்டு மிகழ்ந்தவர் பலராவர். இது, சிறு வெளியீடாகவும் அச்சிடப்பட்டுள்ளது.

    தமிழகத் தமிழாசிரியர் கழகத்தின் 12ஆவது மாநில மாநாடு, மதுரை மாநகரில் 9.8.1970இல் நடந்தது. இதன் வரவேற்புக் குழுத்தலைவராக இருந்த, உரைவேந்தர், தமது வரவேற்புரையில், தமிழ்ப் புலவர் குறித்தும், அவர்தம் கடமை குறித்தும், தம்பாற் பயின்று உயர்நிலையிலிருக்கும் மாணவர் குறித்தும் விளக்கமாகப் பேசினார்:

      "வெறிதே தமிழ் அறிவிக்கும் தொழிலாளியல்லர் தமிழ்ப் புலவர்; தமிழ் உள்ளத்தை நேரிய உருவுடையதாக்கும் சிந்தனைச் சிற்பிகளாவர்; அவர் கையாளும் பொருள் - சிந்தனை; ஏனையோர் கையாளும் மண்ணும் மரமும் இரும்பும் போல அழிந்துபடும் அழிபொருள் அன்று! நின்று பயன்படும் அறிவுப் பொருள்!"

    என்று தமிழ்ப்புலவர் பெருமை கூறிவிட்டு,

      "தமிழ்ப் புலமை பெற்றார் அரசியல், வாணிகம், தொழில், சமுதாயம், சமயம் ஆகிய துறைகளில் கருத்தைச் செலுத்தும் நேர்மையுடைய தமிழா - சிரியர்கள் ஆதல் வேண்டும் என்பது என் தனிக்கருத்து! தமிழ் மனமும், தமிழறிவும் உடை யோர், அரசையும், வாணிகத்தையும் தொழிலையும், பிறவற்றையும் மேற்கொண்டாலன்றிச் சூழ்நிலை மாறுதற்கு வாய்ப்பில்லை! தமிழர்களின் அறிவுக்கும் அறியப்படும் பொருளுக்கும் இடையே தமிழல்லாத வேறு மொழிகள் குறுக்கிட்டு நிற்கும் சூழ்நிலை இன்று, தமிழாசிரியர்களின் தமிழ்ப் பணிக்குப் பெரியதோர் இடையூறு; அதனைத் தகர்த் தெறிவது தமிழறிஞர் கடனாகும் !"

    என்று தமிழாசிரியர் ஆற்றவேண்டிய கடமை குறித்தும் சுட்டிக் காட்டுகின்றார் உரைவேந்தர்.

    தம்பால் தனியாகத் தமிழ் பயின்ற மாணவர் ஒருவரைக் குறித்து, இம் மாநாட்டு வரவேற்புரையில் உரைவேந்தர் குறிப்பிட்டார்:

      "ஏறக்குறைய 40 ஆண்டுகட்கு முன்பு, கறுத்த மேனியும் சிரித்த முகமும், ஆர்வ நெஞ்சமும் அடையப் பெற்ற ஒரு சிறுவன், தனித்த முறையில் என்பால் தமிழ் பயின்றான். அவனுக்குத் தொல் - காப்பியச் சொல்லதிகாரத்து உரைகாரரான சேனா வரையரும் நச்சினார்க்கினியரும் மாறுபடுகின்ற இடங்களைக் காட்டிய போது, முடிவு காண்பதில் அவனுடைய அறிவு நுணுகிச் சென்று, உண்மை கண்டு ஒளிவிட்டுத் திகழ்ந்தது. பயலே! நீ படித்து நீதித் துறையில் செல்வாயானால் மிக்க சிறப் புறுவாய்!' என்றேன். அந்தச் சிறுவன் யார் என்று நினைக்கின்றீர்கள்? இன்று தமிழ்நாடு சட்ட மன்றச் சபாநாயகராக இருந்து, நிகழும் வாதங்களுக்குத் தீர்ப்புக் கூறும் வகையில் நாடுபுகழும் நலம் பெற்ற மாண்புமிகு புலவர் கோவிந்தனாராவர்!"

    இதனைக் கேட்ட தமிழ்ப் புலவர் குழாம், கையொலி எழுப்பி ஆரவார மகிழ்ச்சியில் திளைத்தது!

    கையாளும் 'நடை' (Style)

    உரைவேந்தரின் எழுத்திலும் பேச்சிலும் நல்ல தமிழ் நடை' யைக் காணலாம். சின்னஞ்சிறு தொடர்களும் உண்டு; நீண்ட தொடர்களும் உண்டு. எதுவாயினும் கொஞ்சு தமிழ் நடை தான்!

      "அவர் வரிசையுடையோர்; அவர்க்கு உலகம்
      பெரிது; அவரைப் பேணுவோரும் பலர்!" (புறம்: 207 உரை)

      "வேந்தன் சினத்தினன்; தந்தை செய்யான்; களிறு
      சேரா மறவர் வாய் மூழ்த்தனர்; ஊர்பேதுற் றன்று; தாய் அறனிலள்" (புறம் 336)

      "அவர்கட்குப் (புலவர்) போர்க்களமும் ஒன்றே; ஏர்க்
      களமும் ஒன்றே; செல்வக் காலமும் அல்லாக்
      காலமும் எல்லாக் காலமும் ஒன்றுதான்!" (வரலாற்றுக் காட்சிகள்)

      "இறந்தது நினைந்து, இனி இரங்குவதை
      விடுத்து, இந்நூற்கண் செல்வாம்!" (ஞானாமிர்தம் உரை )

      "கொடையினும் ஒருவனே கொடுப்பன்;
      படையிலும் ஒருவனே கெடுப்பன்! (சீவக சிந். சுருக்கம்)

    இவ்வாறு எழுதுபவர், சில இடங்களில் நீண்ட தொடர்களையும் கையாள்கின்றார்.

      "தெளிந்தாரைச் சேராமையும், ஒருகால் சேரின், தெளிந்தாரது தெளிவைக் கெடுத்துத் தெளியாமை இருளில் அழுத்துவதும், இவ்வகையால் வீழ்ந்தாரை மேன்மேலும் வீழ்த்துவதும், உயர்ந்தாரையே உயர்த்துவதும் செல்வத்துக்குப் பொது இயல்பு!
      (தூத்துக்குடி சைவசித். சபை விழாத் தலைமை )

      "சிவபரம்பொருளின் செம்மை நலம் முற்றும் செம்மையாம் ஓதும் செம்பொருட் செந்தமிழ்ப்பாட்டு இச்சிவபுராணம் என்பது சாலும்"
      (ஆம்பூர் சைவசித்தாந்த விழா உரை )

      "கடலளவுக்கு 2800 அடி உயரத்தில், மலை முகட்டில் தோன்றி, 60 கல் அளவு மலையிடையே நெளிந்து, வளைந்து, தவழ்ந்து, தாவித்துள்ளிப் பரந்து வரும் பேரியாறு, அடர்ந்து படர்ந்து செறிந்து தழைத்து நிற்கும் பசுங்கானத்தால் திருமால் போல் இனிய காட்சி நல்கும்!"
      (பண்டைநாளைச் சேரமன்னர் வரலாறு )

      "இயற்கையன்னை கோயில் கொள்ளும் இடம் - மலை நாடான குறிஞ்சி; அவள் தனது அருளழகை விளக்குமிடம் - முல்லை ; கொலு வீற்றிருக்கும் திருவோலக்கம் - மருதம்; அவள் மகிழ்ந்து விளை யாடி மாண்புறும் இடம் - நெய்தல்!"
      (நந்தாவிளக்கு )

      "இதன்கண் மூவாதாரும் மங்கையரும் முறையே முன்னும் பின்னும் செல்ல, தொண்டர்கள் புடை சூழ, இடையே ஆரூர் இறைவன் செல்கின்றா னென்பது எத்துணை இன்பமாகவுளது காண்மின்! இக்கூட்டத்தில் உயர்ந்தோர் உயர்வும், தாழ்ந்தோர் தாழ்வும் மதிக்கப்பட வில்லை !" (ஞானவுரை )

      " உணவால் உயிர்களின் பசிப்பிணியும், மருத்துவத்தால் உடற்பிணியும், சிவஞானத்தால் பிறவிப் பிணியும் நீக்கும் இனிய தொண்டினைச் செய்தமையால், இக் கோளகி சந்தானம்' நாட்டில் நல்ல செல்வாக்கினைப் பெற்றது!"

    இவ்வாறு, எடுத்துக்கொண்ட பொருளுக்கு ஏற்பத் தமக்கெனத் தனி நடை யினைக் கையாள்வதில் வல்லவராக விளங்குகின்றார் உரைவேந்தர்.

    இவைதவிர, உவமைகளை எடுத்தாளுதல், அரிய செய்தி களைக் கூறுதல், ஆங்காங்கே வானநூற் புலமை, சோதிடப் புலமை, வடநூற்புலமை முதலாயின வெளிக் காட்டுதல் என்று அடுக்கிக் கொண்டே போகலாம்; அத்துணை அளவுக்கு நுண்மாண் நுழைபுல மிக்கவராக மாண்பார் உரைவேந்தர் திகழ்கின்றார். இவற்றை யெல்லாம் நோக்க, உரைவேந்தரை நற்றமிழ் நாவலர் எனல் சாலுமன்றே!
    --------------

    6. சைவ சித்தாந்தச் செம்மல்

      "தத்துவ ஞானத்துறையில் பெரும்புலமை கொண்டு விளங்கிய பேராசிரியர் ஈட்டன் கில்சன்' என்பார், சிவமாகிய செம் பொருள், தனது உண்மையினை உலகியல் வாழ்வில் சில காலங்களில் நமக்கு உணர்த்துகின்றது' என்று கூறுகின்றார். ஒருவன்
      அடுக்கிவரும் இடுக்கண்களால் நெருக்குண்டு, நெஞ்சு சோருங் காலத்துக் கடவுளுண்மை அவன் உணர்வில் காட்சி யளிக்கின்றது. அவன், தன்னந் தனியனாய் இருக்குங்காலும், ஆழ்கடலின் ஆழமும்; மால்வரையின் மாண்பும், வேனிற் காலத்து நள்ளிரவில் விசும்பிடை வயங்கும் விண் மீன் கூட்டத்தைக் காணுங்காலும், தன் வாழ்நாள் தனக்குரிய எல்லையை நெருங்குங்காலும் செம் பொருளாகிய கடவுள் உண்மை அவன் உணர்வில் தோன்றுகின்றது என்று கூறுகின்றார்!"

    இவ்வாறு தூத்துக்குடி சைவ சித்தாந்த சபை 65ஆம் ஆண்டு விழாவின் போது உரைவேந்தர், தமது தலைமைப் பேருரையைத் தொடங்கி, நீண்டதோர் சொற்பொழிவாற்றியதை அனைவரும் பாராட்டினர்.

    உரைவேந்தர், சைவக் குடும்பத்தில் தோன்றியவராதலின், இயல் பாகவே சைவசமயப் பற்றுடையவராய்த் திகழந்ததில் வியப்பில்லை. தமிழையும் சைவத்தையும் தமதிருகண்களாகக் கொண்டொழுகிய சான்றோர் இவர். 'தமிழ்க்கடல்' எனப் போற்றப்படும் மறைமலை யடிகளிடத்தில் பெரிதும் ஈடுபாடு கொண்ட உரைவேந்தரும், அவரைப் போலத் தாமும் தமிழிலும் சைவத்திலும் நிறை புலமை பெற்றுத் திகழவேண்டும் என்று கருதினாராதால் வேண்டும்!

    சைவ சமயத்தைப் பற்றித் தாமாகவே படித்து அதன்கண் போதிய புலமையுடையவராக இருந்தபோதும், முறையாகத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தால், உரைவேந்தர், கந்தசாமி தேசிகர்பாலும், தவத்திரு . வாலையானந்த அடிகள் பாலும் சைவ சமயக் கல்வியைக் கற்றுத் தெளிந்தார்.

    அன்னைத் தமிழின் ஆக்கத்திற்கு எவ்வாறெல்லாம் பாடுபட்டு உழைத்தாரோ, அவ்வாறெல்லாம் சைவ சமயத்திற்கும் உழைத்த பெருமை உரைவேந்தருக்கு உண்டு. சைவ சித்தாந்தம்' என்பது பெருங்கடல்; அதில் மூழ்கி, நன்முத்துக்களைப் பலர்க்கும் வாரி வழங்கிய அருள் வள்ளல் என்றும் இவரைக் கூறலாம்.

    ’சைவசித்தாந்தம்' என்றதுமே அஃது ஒரு குறிப்பிட்டவர்க்கே உரியது என்று சிலர் தவறாக எண்ணுகின்றனர். உண்மையில் அஃதன்று. இறை, உயிர், தளை (பதி, பசு, பாசம்) எனும் முப்பொருள் உண்மைகளை முறைப்படி உணர்த்துவது. ஆழ்ந்து நோக்கின் தொல்காப்பியம், திருக்குறள் சங்க இலக்கியங்கள் முதலானவற்றி லெல்லாம் இச் சித்தாந்தக் கருத்துக்கள் இயம்பப் பட்டுள்ளன. இது, மனிதர் அனைவர்க்குமே பொதுவானது.

      "பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
      இறைவன் அடிசேரா தார்" (குறள் 10)

    என்று வள்ளுவர் கூறியதற்கு ஏற்ப, இப் பிறவியாகிய பெரிய கடலிலிருந்து விடுபட்டு, இறைவனது திருவடியை எய்த விரும்பும் ஒவ்வொருவருக்கும் உரியதுதான் சைவ சித்தாந்தம்!

    ’சைவ சித்தாந்தம்' என்பதற்கு உரைவேந்தர் தரும் விளக்கமே தனித்தன்மை வாய்ந்தது:

      "இத் தொடரைப் பிரித்து நோக்கின், 'சைவ சித்தாந்தம்' என்ற இரு சொற்கள் தோன்றக் காண லாம். 'சைவம்' என்பது சிவசம்பந்தம்' என்று பொருள் தரும். சைவம் சிவத்தோடு சம்பந்தமாவது என்பது திருமந்திரம். 'சிவம்' என்பது கடவுளைக் குறிக்கும் சொல்லாகும். 'கடவுள்' என்பது இறைவன்' என்ற 'அன்' ஈற்று உயர்திணைப் பெயராகவும் வழங்கும். அவ்வாறே சிவம்' என்பது 'சிவன்' எனவும் வழங்கும். இறைவன் எனக் கடவுளைக் குறிக்கும் சொற்பொருள், இந்த உலகிலுள்ள எல்லா உயிர்கட்கும் உரியது. எந் நாட்டு எத்திறத்து உயிர்கட்கும் உரியவனாகிய இறைவனைத் தென்னாட்டவரான செந்தமிழர் 'சிவன்' என வழங்குவர்... சிவம் என்பதன் பொதுப் பொருள் உண்மையை உணர்ந்தே சயினச் சான்றோரும், கிறித்தவச் சான்றோரும் பேரின்ப நிலையைச் சிவகதி' எனத் தம் நூல்களில் வழங்கி யிருக் கின்றனர். வேற்றுச் சமயத்தவரும் விரும்பிக் காதலித்து மேற்கொண்டொழுகும் வீறு சிறந்தது 'சிவம்' எனும் இந்தச் செந்தமிழ்ச் சொல்!"

    இவ்வாறு கூறும் உரைவேந்தர், சிவம் - உயிர் - உலகு இவற்றிற்கிடையே உளதாகும் தொடர்பை இனிது விளக்குகின்றார்:

      "சிவ சம்பந்தம், சைவம், ஆதலால் சிவத்துக்கும் உயிர்கட்கும் உள்ள சம்பந்தம் - சைவம்; சிவத் துக்கும் உயிரில்லாத உலகிற்கும் உள்ள தொடர்பு - சைவம் ; ஆகவே உயிர்கட்கும் அவ் வுலகிற்கும் உள்ள தொடர்பு சைவமாம். உயிரின் வேறாய் அதற்கு நிலைக்களமாய் விளங்கும் உடம்பு உலகியற் பொருளாய் விடுதலால் உயிர்க்கும் உடம்புக்கும் உளதாகிய தொடர்பும் சைவமாம். உயிர்க்கும் உடம்புக்கும் தொடர்பாவது அன்பு என்றார் திருவள்ளுவர் 'சிவம்' எனக் கண்டார் திருமூலர் ! இச் சம்பந்தத்தை அறிந்தொழுகும் திரு நெறி சைவம்' ஆயிற்று. இதனை அளவைகளாலும், பொருந்தும் நெறியாலும், ஆராய்ந்து தெளிந்து முடிவுகண்டு, அன்பர் பணி செய் தொழுகுவது சைவ சித்தாந்தம்' எனப் படுவதாயிற்று!"

    என்பது உரைவேந்தர் தரும் அரியதோர் விளக்கம்!

    சைவசித்தாந்தச் செம்மலாக விளங்கிய உரைவேந்தர். சமயமேடைகள் தோறும் சைவ முழக்கமிட்டார் என்பதோடு, சமய - சாத்திர நூல்களையும் எழுதியுள்ளார் என்பது முன்னரும் குறிப் பிடப்பட்டுள்ளது.

    ’சிவஞானபோதமும் சிவஞானமுனிவர் அருளிச் செய்த சிற்றுரையும்' என்னும் அரியதொரு நூல், 1953 ஆம் ஆண்டில் வெளி வந்தது. முனிவரது நடை, கடினமானது; இலக்கணச் செறிவுடையது; வடமொழிக் கருத்தும் கொண்டது. இந்த நூலினைப் படிப்பதற்கே சைவப் பெருமக்கள் அஞ்சுவர். அத்தகைய நூலுக்குச் செம்பாகமான குறிப்புரை தந்த பெருமை உரைவேந்தருக்கு உரியது.

    இந்நூல் முன்னுரையில் ‘சைவநெறி' பற்றி அரிய விளக்கம் தருகின்றார் உரைவேந்தர்:

      "சிவாகம நெறி பற்றித் தெளிவுபெற்றோர் மேற் கொண்ட ஆகமநெறி சைவ நெறி' என்றும்; வேத வேதாந்தங்களுக்குத் தம் கலைப்புலமையே துணையாகக் கொண்டு காட்டினோர் காட்டிய வற்றை மேற்கொண்டோரது நெறி வைதிக நெறி' என்றும் இருவகை நெறிகள் இயலுவவாயின. இவற்றுள் வைதிக நெறி' வேதமோதும் உரிமை யுடையோர் பாலும், 'சைவ நெறி' ஆகம நெறி நின்றோர் பாலும் இருந்து வந்தன! சில காலத்துக்குப் பின்னர், சிற்றறிவினர் சிலர், தமது கலைப் புலமையைப் பெருங்-கருவியாகக் கொண்டு, வைதிக நெறியே உயர்ந்தது என்றும்; ஆகம நெறி தாழ்ந்தது என்றும், உண்மை உணர்வுக்குச் சிவாகமங்கள் ஆகா என்றும் குழறுபடை செய்தனர். சமயத் துறையில் இவ்வுயர்வு, தாழ்வு கற்பித்து ஒழுகுவது, புறச் சமயங்கட்கு ஆக்கமாவதையும் அவர்கள் உணராது போயினர். புறச்சமயத்தால் 'கடவுள் ஒருவர் உண்டு' என்ற கொள்கையும் ஐயப்படுவதாயிற்று! வைதிக ஒழுக்கம் இறந்து படுவதற்கேற்ற இடம் உண்டாயிற்று!..... சிவஞானப் பாலுண்டு சைவநெறியை நிலைபெறச் செய்த திரு ஞான சம்பந்தர் முதலிய சான்றோர்கள் தோன்றி, வைதிக நூல்களும் சிவாகமங்களும் இறைவன் அருளிய மெய்ந்நூல்களே என்றும், இரண்டும் வேறல்ல என்றும் அறிவுறுத்தினர்.... வேதாந்தத் தெளிவே சைவ சித்தாந்தம்' என்று விளம்பினர்!"

    மெய்கண்டாரால் அருளப்பெற்ற சிவஞான போதம் நூலுக்குச் சிவஞான முனிவர், குறிப்புரை' தவிரப் பாடியமும் (அதாவது பேருரை ) எழுதியுள்ளார். கற்றுவல்லார்க்கே புரியும்படி அமைந்த உரைகள் அவை. ஆனால் உரைவேந்தரோ, ஆங்காங்கே புரியும் படியான விளக்கம் தருகின்றார்.

    முனிவர், "கடவுளை அந்தம்' என்றது 'உபசாரம்' என்பார். உரைவேந்தரோ, "உபசாரமாவது, காரண காரியங்கள், குண குணிகள், பொருள் வினைகள், பொருளிடங்கள், சினைவினை முதல் வினைகள், பண்பு புலன்கள் ஒன்றினொன்று மாறிவரும் இலக்கண விசேடம்!" என்று விளக்குவார். இப்படி, நூல் முழுவதும் காணலாம்.

    உரைவேந்தர், மதுரையில் நடந்த சைவசித்தாந்த சமாச ஆண்டு விழாவில் நிகழ்த்திய சொற்பொழிவை, ஞானசம்பந்தர் வழங்கிய ஞானவுரை' என்னும் நூலாகத் தருமை ஆதீனம் வெளியிட்டுள்ளது. (1945)

    திருஞான சம்பந்தப் பெருமானின் தோற்றம் குறித்துக் குறிப்பிடும்போது,

      "பகவதியார் (சம்பந்தரின் அன்னை ) இவரைக் கருக் கொண்டிருந்த போதே, தம் நினைவு செயல் முழுவதும் சிவபரம்பொருளின் திருவருளிலே ஈடுபடுவதாயிருந்தனர்.... ஞானசம்பந்தப் பிள்ளை - யாரை மனங்குளிரப் பெற்றுப் பாலூட்டியபோதும், அப் பகவதியார், சிவபெருமான் திருவடிக்கண் பதித்த அன்போடு பாலூட்டினார்!"

    என்று கூறியதனோடமையாது. உரைவேந்தர், வரலாற்றுச் சான்றொன்றையும் தருகின்றார்:

      "ஒரு தாய், கருவுற்றிருக்குங் காலத்தே, எத்தகைய நினைவு, செயல்களை மேற்கொள்ளுகின்றாளோ, அவற்றிற்கேற்பவே அவள் வயிற்றிற் பிறக்கும் குழந்தையின் பால் அத்தகைய நினைவு செயல் கட்குரிய குணஞ்செயல்கள் உண்டாகும் என்று இக்காலத்தறிஞர் கூறுவர். மேனாட்டில், முற் காலத்தில் நிகரற்ற வீரனாய்த் திகழ்ந்த நெப் போலியன் என்பானை, அவன் தாய் கருவுற்றிருந்த போது, உயரிய வீரர் வரலாறுகளைப் படித்துக் கொண்டிருந்தாள்; அதனால் அந்த நெப்போலியன், உலகு முற்றும் உட்கத்தக்க உயர்வீரனாய் விளக்கமுற்றானென்று சான்றும் காட்டுவர்...!"

    இதனைப் படிக்கும் தாய்மார்கள், மகப்பேறு காலத்தில் தாமும் நன்னெஞ்ச-முடையோராய் , நல்ல சைவ நூல்களில் மனத்தைச் செலுத்துவோராய் விளங்குவரன்றோ?

    'சிவஞான போதம்' அருளிய மெய்கண்டாரைப் பற்றியும், 'சைவ சித்தாந்தம்' பற்றியும் சுருக்கமாகக் கூற வேண்டுமானால், இதோ உரைவேந்தர் கூறுகின்றார்:

      "தத்துவஞானமும் சமயஞானமும் ஒன்றுக்கொன்று படிமுறையில் இருப்பது கண்டே, மெய்கண்ட தேவர்' தாம் அருளிய சிவஞான போதத்தில் முன் ஆறு சூத்திரங்களால் தத்துவ ஞானமும்; பின் ஆறு சூத்திரங்களால் சமய ஞானமும் வழங்கியுள்ளார்......

      "நம் தமிழ்நாட்டில் திருமூலர் கால முதலே இரண்டும் ஒன்றாய்ப் பிரிப்பறப் பிணைந்து வந்திருக்கின்றன. இடைக்காலத்தே முதலில் சமய ஞானமும், பின்னர்த் தத்துவ ஞானமும் சிறப்பு நிலை பெற்றன. ஞான சம்பந்தர் முதலிய சமய குரவர் காலத்தில், சமய ஞானமும், மெய்கண்டார் முதலிய சந்தான குரவர் காலத்தில், தத்துவ ஞானமும் சிறப்புற்று நின்றன என்பது வரலாறு அறிந்தோர்க்குத் தெரிந்த செய்தி யாகும்!"

    என்று இவ்விரு 'ஞானம்' பற்றிக் கூறும் இவர்,

      "இறைவன், உயிர், உலகிற்கு முதற்காரணமாகிய மாயை என்ற மூன்றும் , அனாதி நித்தியப் பொருள் - கள் எனவும்; இறைவனாகிய சிவம், தன் சத்தி சங்கற்பத்தால் மாயையைக் கலக்கி, உடல், கருவி, உலகுகளாகச் செய்வது படைப்பு ' எனவும் ; உயிர் கள் அனாதியே மலத்தொடக்கு உடையவை எனவும்; மலத்தின் மறைப்பு நீங்குதற் பொருட்டு உடல் கருவிகள் படைக்கப்படுகின்றன எனவும்; 'உயிர்கள் பல' எனவும்; பல எனவே உயிர்கள் ஒன்றினொன்று வேறு பாடுடையவெனவும்; வேறு பாட்டுக்கேற்பப் பிறப்பு வேறுபடுகின்றனவெனவும்; உயிர்கட்கு அறிவு, விருப்பு, தொழில் என்ற மூன்று ஆற்றல் உண்டெனவும்; அவற்றைத் தொழிற் படுத்தி உண்மை ஞானம் எய்துதற் பொருட்டே உலகத் தொடர்பு உயிர்கட்கு உண்டாகிறதெனவும்; இங்ஙனம் உயிர்கட்கு உதவும் வகையில் சிவபரம் பொருள் உயிரோடு உடனாய் இருக்கின்றது எனவும் நம் சைவசித்தாந்தம் கூறுகிறது!"

    என்று சிவஞான போதத்தின் திரண்ட கருத்தை - சைவ சித்தாந்தத்தின் அடிப்படைக் கொள்கையை இனிதெடுத்துரைக்கும் இவரின் திறமே திறம்!

    உரைவேந்தர், சைவசித்தாந்தத்தை மிகமிக எளிய முறையில், சாதாரண அறிவு படைத்தோரும் தெரிந்து கொள்ளுமாறு இனிய சான்றுகளால் விளக்குவதில் வல்லவர். பல்வேறு ஊர்களில், சிவஞான போதத் தைப் பல நாட்கள் தொடர்ந்து பாடமாகவும் நடத்தியுள்ளார்.

      "சித்தாந்த சைவத்தை உரையாலும் கட்டுரையாலும் கட்டமைந்த பொழிவுகளாலும் பரப்பிய அருமை நோக்கிச் 'சித்தாந்த கலாநிதி' என்ற சமயப் பட்டத்தை அறிஞர் வழங்கிச் சிறப்பித்தனர்!"

    என்று வ.சுப. மாணிக்கனார் போற்றுவர். 'சைவசித்தாந்தச் செம்மலாக விளங்கிய உரைவேந்தருக்குக் கலாநிதி முதலான எத்துணைப் பட்டங்கள் கொடுத்தாலும் தகும், தகும்!
    ------------------

    7. நிறைபுகழ் எய்திய உரைவேந்தர்

      "இரவுபகல் தானறியான் இன்தமிழை வைத்து
      வரவு செலவறியான் வாழ்வில் -உரமுடையான்
      தன்கடன் தாய்நாட்டு மக்கட் குழைப்பதிலே
      முன்கடன் என்றுரைக்கும் ஏறு!

    என, உரைவேந்தரின் தெள்ளுதமிழ்த் தொண்டு குறித்துப் பாராட்டுகின்றார் பாவேந்தர்' பாரதிதாசனார்.

    பொதுவாக, ஒருவர் வாழ்ந்து மறைந்த பின்பே, அன்னாரைப் போற்றுவதும், சிலையெடுப்பதும், தமிழர்களின் நீண்ட நாட் பழக்கமாக இருந்து வந்தது. ஆனால் இப்போது அந்நிலை மாறி, வாழும் காலத்திலேயே சீரும் சிறப்பும் செய்து போற்றும் நிலை வந்துள்ளது! உரைவேந்தர், தாம் வாழ்ந்த காலத்திலேயே பெரும்புகழ் எய்தியவர்!
    அதற்குப் பல காரணங்கள் உண்டு.

    எளிய குடும்பத்தில் பிறந்தவர்தாம் உரைவேந்தர்; இடைக்கலை' வகுப்பைத் தொடர்ந்து முடிக்க முடியாத வீட்டுச் சூழலிலும், மனம் தளராமல், கரந்தை சென்று, தமிழ் பயின்று, உயர்நிலைப் பள்ளி, கல்லூரி, பல்கலைக் கழகம் என்றெல்லாம் படிப்படியாகப் பணிபுரிந்தவர் என்பது முன்பே சுட்டப்பட்டது! பொருள் வருவாய் மட்டுமே குறிக்கோளாகக் கொண்டிருந்தால், அவரது வாழ்வு, வேறுதிசையில் திரும்பியிருக்கும். குடும்பமோ மிகப்பெரியது; வருவாயோ போதிய நிலையில் இல்லை. நாள் ஒன்றுக்குப் பல நேரம் இரவு கண்விழித்து எழுதி எழுதிக் கையும் தேய்ந்து போனது ; பேருரைகள் பல எழுதிய அறிஞர்களின் வாழ்க்கையைக் கவனித்தால், அவர்களில் பலர், பணி ஏதும் பார்க்காமல், இரவு பகல் முழுவதுமே வீட்டிலிருந்து எழுதியவர்கள். ஆனால், உரைவேந்தரோ, தாம் ஓய்வு பெறுங்காலம் வரை, பணியிலிருந்து கொண்டே, தமது கடமை தவறாமலேயே, ஆயிரக்கணக்கான பக்கங்கள் எழுதிக் குவித்த மாண்பாளர். இதற்கெல்லாம் இவருக்கு உறுதுணையாக இருந்த பெருமை துணைவியார் உலோகாம்பாளுக்கு உரியது. வாழ்க்கைத் துணைநலம்' என்று வள்ளுவர் மொழிந்த சொல்லுக்கு இலக்கியமாகத் திகழ்ந்தமையால் தான், வீட்டுக் கவலையை அத்துணையளவு பொருட்படுத்தாமல், தொண்டு செய்ய இவரால் முடிந்தது. மதுரைத் தியாகராசர் கல்லூரிப் பணிக்கு வந்த பிறகே இவரது பொருளாதார நிலை, சிறிது உயர்ந்தது எனலாம். ஆலை அதிபர் கருமுத்துச் செட்டியாரின் கருணை உள்ளமும் , அருட்செல்வர் நா. மகாலிங்கனாரின் பேருதவியும், பிற்காலத்தில் உரைவேந்தருக்குக் கிடைத்தன எனலாம். பெற்ற பிள்ளைகள் அனைவருமே உயர்கல்வி கற்பதற்கும் வழிவகுத்தவர். இறுதிக் காலம் வரை கடுமையாக உழைத்தார் உரைவேந்தர்.

      "பிள்ளையவர்கள், உழைப்பின் உயர்வுக்கு எடுத்துக்காட்டு. அவர் வாழ்வு ஓயா உழைப்பினால் உருவானது ... ஒளவையார் குப்பம் என்னும் சிற்றூரில் எளிய குடும்பம் ஒன்றில் தோன்றினார். இளமையில் பல்வேறு இன்னல் இடையூறு - கட்கிடையில் உழைத்துப் படித்து, இண்டர் மீடியட் முதலாண்டு மட்டும் பயிலத் தொடங்கித் தொடர்ந்து படிக்கக் குடும்ப நிலை இடந்தரவில்லை ... இயற்கையில் அறிவும் ஆற்றலும் சிறக்கப் பெற்ற இளைஞராகிய பிள்ளையின் வளமை கண்ட தமிழன்னை அவர்மீது தன் அருள் நோக்கைச் செலுத்தி அவரை ஆட்கொண்டாள். அவர் உள்ளத்தில் தமிழார்வம் ஊறிச் சுரக்கலுற்றது!"

    என்று, மாணவர் ம.வி. இராகவன், உரைவேந்தரின் தொடக்க கால வாழ்வைச் சித்திரிக்கின்றார்.

    'இடைக்கலை வகுப்பில் ஓராண்டே படித்தார். என்றாலும், அப்போது படித்த ஆங்கில அறிவைத் தம் உழைப்பினால், மென்மேலும் வளர்த்துக் கொண்டார். பெரும்பாலான தமிழாசிரி யர்க்கு வாய்க்காத ஒன்று இது. அவ்வாறு அவர் ஆங்கிலப் புலமையை வளர்த்துக் கொண்டதால்தான், தாம் எழுதிய நூல்களி லெல்லாம் ஆங்கில நூற்கருத்தை மேற்கோளாகக் காட்ட முடிந்தது!

    கடுமையான உழைப்பு ஒருபுறமிருக்க, உயர்ந்த பண்புகளைக் கொண்டொழுகிய சான்றோர் என்றும் கூறலாம். அவரது வாழ்வு, எளிமையிலும், வளமை கண்ட வாழ்வு! குறைந்த வருவாயைக் கொண்டு நிறைந்த உள்ளத்தோடு, நேர்மை தவறாமல், சங்ககாலப் புலவரைப் போல், நிமிர்ந்து வாழும் நெறியாளராகத் திகழ்ந்தவர். உடுத்தும் உடையோ மிக மிக எளியது; எட்டு முழ வேட்டி, 'ஜிப்பா' எனும் நீண்ட கைச் சட்டை பையில் ஒரு பொடிடப்பா; முகத்தில் கண்ணாடி; சிறிதே வளர்ந்து காணப்படும் தலைமுடி. எளிய உடை என்றாலும் எடுப்பான தோற்றம் ! கவலை சிறிதுமின்றி எப்போதும் கலகலப்பாகச் சிரித்து உரையாடும் சிறந்த பண்பு! வாழ்வு எளிமையே எனினும், புலமைத்திறமோ மிகமிக வலியது! அதனால், எந்நிலையிலும் தம் கொள்கைகளை விட்டுக் கொடுக்கவோ, கருத்துக்களை மாற்றிக் கொள்ளவோ ஒரு போதும் இசையமாட்டார்!

    இவ்வாறு, உரைவேந்தர், கடல் போன்ற கல்வியாளரானாலும் தருக்கோ, தற்பெருமையோ, தலைகாட்டக் கண்டாரிலர். தன்னடக்கத் திலும், நன்னடக்கையிலும், ஆன்றவிந்தடங்கிய சான்றோர்' வரிசையில் வைத்து மதிக்கத் தக்க மாண்பினர். அச்சம்' என்பது இவர் அறியாத ஒன்று. அவையஞ்சாமை இவருக்குக் கருவிலே வாய்த்த திரு!

    உரைவேந்தரின் உயர்வுக்கும் புகழுக்கும் அவர்பால் அமைந் திருந்த நற்பண்புகளும் காரணம் எனலாம்.

      "எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
      செய்ந்நன்றி கொன்ற மகற்கு" (குறள் -110)

    எனச் செய்ந்நன்றியின் சிறப்பை ஆணித்தரமாக எடுத்துரைப்பார் வள்ளுவர். இத்தகைய 'செய்ந்நன்றியறிதல்' உரைவேந்தரிடம் காணப்பட்டமைக்குப் பல நிகழ்ச்சிகள் கூறலாம்.

    தொடக்க காலத்தில் கரந்தைத் தமிழ்ச்சங்கமும் அதன் தலைவர் தமிழவேள் உமாமகேசுவரனாரும் உரைவேந்தர் நெஞ்சில் நீங்கா இடம் பெற்றமை குறிப்பிடத் தக்கது.

      "கரந்தைத் தமிழ்ச்சங்கம் என் வாழ்வில் ஒரு திருப்பு முனையை ஏற்படுத்தி, வளமான புலமைக்கும் நலமான வாழ்வுக்கும் வழிகோலியது. கரந்தையில் மூவர் எனக்கு உறுதுணை யாயினர். ஒருவர், என்னைப் போற்றிப் புரந்த - தமிழவேள்; மற் றொருவர் என் பேராசான் கரந்தைக் கவியரசு மூன்றாமவர், என் வாழ்விலும் தாழ்விலும் பங்கேற்று நானும் எனது நிழலும் போல - நாங்கள் உடலால் பிரிந்திருந்தாலும் உள்ளத்தால் இணைந்திருந்த சிவ. குப்புசாமிப் பிள்ளை (இவர் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் ஆசிரியர்)

    என்பது உரைவேந்தர் கூற்று.

    தன்னை ஈன்ற அன்னையார் இறந்தபோது கூடக் கண்ணீர் சிந்தாத உரைவேந்தர், தமிழவேள் உமாமகேசுவரனார் வடபுலப்பயணம் மேற்கொண்டபோது, பைசாபாத்' என்னுமிடத்தில் திடீரென இயற்கை எய்தினார் என்று கேட்டதுமே கண்ணீர் சிந்தித் தன் உள்ளத்திலிருந்த துயரை வெளிக்காட்டினார். அப்போது உரைவேந்தர் பாடிய இரங்கற்பாக்களில் ஒன்று :

      "தாயாகி உண்பித்தான்; தந்தையாய்
            அறிவளித்தான்; சான்றோ னாகி
      ஆயாத நூல்பலவும் ஆய்வித்தான்;
            அவ்வப்போதயர்ந்த காலை,
      ஓயாமல் நலமுரைத்து ஊக்குவித்தான்;
            இனியாரை யுறுவேம்; அந்தோ !
      தேயாத புகழான் தன் செயல் நினைந்து
            உளம் தேய்ந்து சிதைகின் றேமால்!"

    அன்றியும், உமாமகேசுவரனாரின் நினைவை என்றும் போற்றும் வகையில் உமாமகேசுவர விரதமும் கடைப்பிடித்து வந்தார் உரைவேந்தர்.

    தமது ஆராய்ச்சிக்குப் பெருந்துணை புரிந்த கல்வெட்டுப் பேரறிஞர் தி. வை சதாசிவப் பண்டாரத்தார்க்கும், வித்துவான் க.வெள்ளை வாரணனாருக்கும் நன்றி கூறுவார். மேலும்,

      "அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திலிருந்து பணிபுரிந் தொழுகிய எனக்குப் பல நல்ல வசதி யினைச் செய்து என் தமிழ்ப் பணிக்கு வேண்டும் ஆதரவும் அன்பும் நல்கும் மதுரை மீனாட்சி மில் உரிமையாளர் பெருந்தமிழ்ச் செல்வ வள்ளல் உயர் திரு . கருமுத்து. தியாகராசச் செட்டியார் அவர்களது பெருநலம், புலவர் பாடும் புகழுடையதாகும்" (புறநா. உரை)

    என்று கருமுத்துச் செட்டியாரின் உதவியையும் நன்றியுடன் போற்றுகின்றார். தக்க அறிஞர்களைப் பாராட்டும் பண்பும் உரைவேந்தர்பால் உண்டு!

      "சங்க இலக்கியம் எட்டுத்தொகை, பத்துப்பாட்டு என்ற நூற்றொகுதி என்பது இன்று யாவரும் அறிந்தது. நெடுங் காலம் வரை ஏட்டிலிருந்த இவற்றை அச்சேற்றி வெளியிட்ட அறிஞருள் டாக்டர் உ.வே.சாமிநாதையர் அவர்கள் தலையாயவர்"
      (கட்டுரை: சங்க இலக்கியத் தனிச்சிறப்பு )

    என்று உ.வே.சா.வைப் போற்றுவார்!

    உரைவேந்தரின் 'ஞானவுரை' நூலுக்கு ஆங்கிலத்தில் ஓர் அணிந்துரை வழங்கியர் சி.எம். இராமச்சந்திரஞ் செட்டியாராவர்! அவரைப் பற்றி இந்நூல் முன்னுரையில்,

      "சென்னை இந்து அறநிலைய ஆணையாளராய் இருந்து சமயப் பணியும் தமிழ்ப் பணியும் மேன்மையுற்றுச் சிறக்கவும், திருக்கோயில்கள் செம்மையும் தூய்மையும் எய்தி, வழிபாடியற்றவரும் நன்மக்கட்கு வழிபாட்டிலும், திருவருட் பேற்றிலும் உள்ளம் நன்கு சென்று திளைக்குமாறு, பெருநலங் கொண்டு விளங்கவும், ஏற்புடைய பல நன்முறை - களை வகுத்தவரும், தமிழாராய்ச்சியும் சமயப் பணியும் தம் வாழ்வின் உயரிய நோக்கமாகக் கொண்டு ஆராய்ச்சிகள் பல புரிந்து வருபவர் - களுமான சைவத் திரு. ராவ்பகதூர் சி.எம். இராமச்சந்திரஞ் செட்டியார்......!

    என்று பாராட்டுகின்றார்.

    அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில், உரைவேந்தர், பணி புரிதற்காக முயற்சி செய்தவர் பண்டிதமணி மு.கதிரேசச் செட்டியார்! இதனை அறிந்த உரைவேந்தர், கழக ஆட்சியாளர் வ. சுப்பையா பிள்ளைக்கு எழுதிய மடல் ஒன்றில், அருளண்ணல் நம் அருமைப் பண்டிதமணியர்வர்களே...!' என்று போற்றுதலைக் காணலாம்.

    தம்மைவிட அனுபவத்திலும், புலமைத் திறத்திலும் சிறியவரா யிருந்தாலுங்கூடத் தமிழ்த்தொண்டு புரிபவராயின், அவரைப் பெரிதும் பாராட்டி ஊக்குவிக்கும் உயர் பண்பும் உரைவேந்தர்பால் உண்டு:

    ச.சாம்பசிவனார், பள்ளியில் தமிழாசிரியராகப் பணி புரிந்து போது. தமிழிலக்கியத்தில் நெய்தல் திணை' என்றதோர் ஆராய்ச்சி நூலினை எழுதினார். அது 1964ஆம் ஆண்டில் வெளிவந்தது. அந்நூலுக்கு அணிந்துரை வழங்கிய உரைவேந்தர், பாராட்டும் பண்பை இயற்கையாகவே கொண்டிருந்த காரணத்தால் நூலின் சிறப்பை ஆறு பக்க அளவில் விளக்கி, இறுதியாக,

      "நெய்தலிற் காணப்படும் உயிரினங்களையும், பிறவற்றையும் தனித்தனியாகக் காட்டியிருப்பது மிகவும் பொருத்தமான செயலாகும். சிறந்த தமிழாசிரியராதலால், மாணவர்களும் பிறரும் பொருளியல்பை நன்கு உணரத்தக்க வகையில் எடுத்துரைக் கின்றார்.... இயற்கை உயிர்களின் இயல்பு கூறற்கண்ணும், உரிப் பொருளின் உயர்ந்த கருத்துக்களை விளக்குதற்கண்ணும் நண்பர் திரு. சாம்பசிவம், எளிய முறையில் யாவரும் நயந்து மகிழுமாறு இனிமை கமழ எழுதுவது அவரது புலமை நயத்தை நன்கு வெளிப்படுத்து கிறது. இதனைக் காணும் என் உள்ளம் இவர் ஏனைத் திணைகட்கும் இவ்வாறு எழுதவேண்டுமென விரும்புகிறது !"

    என்று கூறுவது, இவரின் உயரிய பண்பைக் காட்டுவதாம்!

    தமிழ்ப் பேராசிரியர்கட்கும், தமிழ்த் தொண்டு செய்பவர்கட்கும் பேருதவி புரிவதிலும் தலைசிறந்தவராக விளங்கியவர் உரைவேந்தர்.

    உரைவேந்தர், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இருந்த போது, பேராசிரியர் கா.சுப்பிரமணிய பிள்ளை , தமிழ்த்துறைத் தலைவராக இருந்தார். திடீரென்று அவருக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டது; எனவே 1-7-1944 இல், அவர் பணியினின்று விலக வேண்டியதாயிற்று. அவரது உடல்நிலைக்குப் பெரிதும் இரங்கிய உரைவேந்தர், கழக ஆட்சியாளர் வ.சுப்பையாபிள்ளைக்கு ஒரு மடல் வரைந்தார். அதில்,

      "அவர்கட்கு (கா.சு. பிள்ளை )ச் சிறிதுநேரம் பேசவோ , எழுதவோ, நடக்கவோ முடியாது. கைநடுக்கம் மிகுதியாய் விட்டது. அவரைக் காணுந்தோறும் கவலை பெரிதாகிறது. அவர்கள் தாம் இப்போதிருக்கும் நிலையில் எங்கே போவது? எவ்வாறு வாழ்வது? என்ற கவலையில் செய்வ தறியாது திகைத்த வண்ணம் இருக்கின்றார். சிதம்பரத்தை விட்டுப் போவதற்கே உடல் இடந் தருமோ என்ற கவலையும் அச்சமும் அடைகின்றார்!"

    என்று இன்னும் பல செய்திகளை மிக்க வருத்தத்துடன் எழுதியிருந்தார். கழக ஏற்பாட்டின்படி, கா.சு.பிள்ளையை அழைத்துக் கொண்டு, உரைவேந்தர் நெல்லையிற் சேர்ப்பித்தா ரெனில் உரை வேந்தரின் காலத்தினாற் செய்த உதவிக்கு ஈடு சொல்ல இயலாது!

    தமிழவேள் பி.டி. இராசனார், அறநெறியண்ண ல்' கி. பழநியப்பனார் ஆகியோரின் நட்புக்குரியவராக விளங்கியவர் உரைவேந்தர். அவர்கள் இருவரும், கோலாலம்பூரில் நடந்த, முதல் உலகத் தமிழ் மாநாட்டில் மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் சார்பில், பேராளராகக் கலந்து கொண்டனர். மாநாட்டில், தமிழவேள், கட்டுரை ஒன்று வழங்க முடிவு செய்திருந்தார். 'தமிழ்நாட்டில் பெண்கள் நிலை' (Status of Women in Tamilnadu) என்பது. ஆய்வுத் தலைப்பு. இதைச்சிறந்த முறையில் தயாரிக்க எண்ணிய தமிழவேள், பி.டி. இராசனார், உரைவேந்தரையும், சாம்பசிவனாரையும் தமது மாளிகைக்கு வரவழைத்துத் தமது கருதுக்களைக் கூறி, இதற்கு முழு வடிவம் தரவேண்டுமென்றார். அவ்வாறே பல நாட்கள் முயன்றதன் பயனாகக் கட்டுரை உருப்பெற்றது. மாநாட்டின்போது பலராலும் பாராட்டப்பெற்றது!

    சிவஞான முனிவர், மறைமலையடிகளார் போன்ற சான்றோர்கள் - பால் அளவிறந்த மதிப்பும், மரியாதையும் உடையவர் உரைவேந்தர். எனினும் அவர்களுடைய உரையில் தவறு என்று தமக்குத் தெரிந்தால் நயம்பட மறுப்பது உயர் பண்பாகும்.

    சிவஞானபோதச் சிற்றுரையில், ஓரிடத்தில், சிவஞான முனிவர், 'மான் என்பது வடசொல் திரிபு' என்பார். இதனை உரைவேந்தர் மறுக்கும் திறம் வருமாறு:

    "மஹான்' என்னும் வடசொல், மான்' எனத் திரிந்தது என்பார், வடசொற் றிரிபு' என்றார். பெருமையுணர்த்தும் 'மா' என்னும் தமிழ்ச்சொல்' னகர' வீறு பெற்றுப் பெரியோன் என வந்த வகையினை இவ்வுரைகாரர் (முனிவர்) மறந்து போய் இவ்வாறு கூறுகின்றார்!"

    ’சிவஞான போதம்' அருளிய மெய்கண்டாரின் தந்தையார் அச்சுதக்களப்பாளர் என்பது முன்னரும் குறிப்பிடப்பட்டுள்ளது. இவரைக் குறித்துக் கூறவந்த மறைமலையடிகளார்,

      "திருவெண்ணெய் நல்லூரில் அந்நாளில் சடையப்ப வள்ளல் என்பார் வாழ்ந்தாராதலின் சிறப்புடைய அவருடைய மகளையே நம் அச்சுதக் களப்பாளர் மணந்து கொண்டார்!"

    என்பார். இதனை உரைவேந்தர்,

      "திருவெண்ணெய் நல்லூரில் சடையப்பர் வாழ்ந்த காலம், மெய்கண்டார் காலத்துக்குப் பெரிதும் முற்பட்டதாகலின், அடிகள் கூற்றுப் பொருந்து வதாக இல்லை !"
      (சிவஞான போதச் சிற்றுரை-குறிப்புரை)

    என்று நயமாக மறுக்கின்றார்!

    'பணியுமாம் என்றும் பெருமை ; அடக்கம் அமரருள் உய்க்கும் என்பன வள்ளுவர் வாய்மொழிகள். உரைவேந்தரிடம், பணிவும் உண்டு; அடக்கமுடைமையும் உண்டு.

    தூத்துக்குடி சைவசித்தாந்த சபை, மிகமிகப் பழைமை வாய்ந்தது. தென் தமிழ்நாட்டில் தமிழையும் சைவத்தையும் பரப்புவதில் பெருமை பெற்றது. அதன் 65ஆம் ஆண்டு நிறைவு விழாவுக்குத் தலைமை யேற்றபோது, தமது முன்னுரையில்,

      "யான் தமிழறிவும் சைவவுணர்வும் பெற்ற நாள் முதல் இச் சைவ சித்தாந்த சபையின் நிகழ்ச்சி களையும், இதன் ஆண்டு விழாக்களில் தலைமை தாங்கிச் சிறப்பித்த சான்றோர்களின் சால்புகளையும், இதன் உறுப்பினர்களின் தமிழன்பு சைவ மெய்த் திருவுடைமைகளையும் நினையும் போதெல்லாம் நேரிற் பன்முறை கண்டறிந்துள்ள என் நெஞ்சம் இத்தலைமைப் பணிவந்த போது ஏற்றற்கு அஞ்சுதலே செய்தது. பெரும்பணி எய்தவரும் போழ்து அதன் பெருமை, முன்னே தோன்றும். அது, காண்பவர் உள்ளத்தில் அச்சம் தோன்றும். அஃது இயல்பு. அஞ்சுவது அஞ்சாமை பேதைமை. சுருங்கச் சொல்லுமிடத்து அச்சத்தோடு இப்பணியை மேற்கொள்ளுகின்றேன்!"

    என்று அடக்கத்துடனும் பணிவுடனும் கூறியவரே எனினும், ஏறத்தாழ முக்கால் மணிநேரத்திற்கும் குறையாமல் பேருரை யாற்றியுள்ளார் !

    அனைத்திற்கு மேலாக, ஆழ்ந்த சமயப் பற்றுடையவர் உரைவேந்தர் என்பதை அவருடைய நூல்கள் பறைசாற்றும். பெரும்பாலான நூல் முன்னுரை மூலம் இவரின் இறைப்பற்றை உணரலாம்.

      "... அறிவு, செயல் வகைகளில் ஒருபொருளாகாத எளியனாகிய என்னை , இப்பெரும் பணியில் ஈடுபடுத்தி, இயலும் தொண்டினைப் புரிதற்கு வாய்ப்பளித்து, எனது எண்ணத்தில் என்றும் அகலாது நிலவும் அங்கயற்கண்ணி தன்னோடும் அமர்ந்த ஆலவாய் அண்ணலின் திருவடிகளை மனமொழி மெய்களால் பரவுகின்றேன்!" (சிவ. சிற்றுரை-குறிப்புரை)

    என்று கூறுவது எண்ணத்தகும்.

    உரைவேந்தர், கண் மூடித்தனமான பழக்கவழக்கங்கட்கு ஒருபோதும் ஆட்பட்ட-தில்லை. சைவநெறியில் ஆழ்ந்து தோய்ந்தவரே யெனினும் அதனையும் அறிவியல் கண்கொண்டே ஆராய்ந்து, உண்மை வெளிப்படுத்தியவர். இத்தகைய உள்ளம் கொண்டவரா யிலங்கி யமையால், தந்தை பெரியாரிடமும் ஈடுபாடு கொள்ள இவரால் முடிந்தது.

    'இன எழுச்சிக்குப் பாடுபட்டுவரும் தமிழின முனிவர்' என்று பெரியாரைக்குறிப்பிடும் உரைவேந்தர், போளூரில் பணிபுரிந்த போது, பெரியாரின் படம் ஒன்றினை வாங்கிக் கண்ணாடிச் சட்டமிட்டுச் சுவரில் மாட்டியிருந்தார். அவ்வூரினின்றும் மாறுதல் பெற்றுப் போகும் போது, அப்படம் தவறி உடைந்து விடக் கூடாதே என்ற உயர் நோக்கத்தால், அவ்வூரில் சோடாக்கடை வைத்திருந்த மாணிக்கம் என்பவரிடம் ஒப்படைத்துச் சென்றார்.

    அனைத்திற்கு மேலாக ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும்' எனும் குறள் நெறிப்படி வாழ்ந்து காட்டிய நல்லொழுக்க சீலர் இவர் என்பதும் குறிப்பிடத்தகும்.

    உரைவேந்தர்பால் இத்தகைய உயர் பண்புகள் குடிகொண்டிருந் தமையால் தான், தாம் வாழ்ந்த காலத்திலேயே, பட்டங்களையும், பாராட்டுக்களையும் பெற முடிந்தது.

    உரைவேந்தர், பல்வேறு தமிழ் அமைப்புக்கள், ஆதீனங்கள் முதலானவற்றில் உறுப்பினராக அல்லது தலைவராக இருந்து தமிழ்த் தொண்டுக்கும் சைவத் தொண்டுக்கும் ஆக்கமளித்த சிறப்பினர். தருமையாதீனப் புலவர்; தமிழகப் புலவர் குழு உறுப்பினர்; மதுரைத் திருவள்ளுவர் கழகம், தமிழ் எழுத்தாளர் மன்றம், இவற்றில் பொறுப்பான பதவிகள் வகித்தவர். இவரிடம் பயின்ற மாணவர்களில் பலர் உயர் பதவிகளில் உள்ளனர். புகழ்பெற்ற கவிஞர்களும் உண்டு.

    உரைவேந்தருக்கு , இயல்பாகவே ஊர்ப்பெயரால் ஒளவை' எனும் பெயர் அமைந்தது. ஒளவையாராக நடித்துப் புகழ் பெற்ற நடிகர் டி.கே.சண்முகம், ஒளவை சண்முகம்' எனப் பெயர்பெற்றது நாடறிந்த உண்மை . உரைவேந்தர், கவிதை பாடுவதிலும் வல்லவரே! அவ்வப்போது அரிய கவிதை பல யாத்துள்ளார். ஆயினும் இவரது உள்ளம், உரைநடை எழுதுவதிலே - ஆராய்ச்சி செய்வதிலேதான் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தது! 'ஒளவையார்' என்னும் புலவரைப் போல் உரைவேந்தரும் தமிழ்ப்புலமை நலம் சிறக்கப் பெற்றிருந்தமையால், 'ஔவை துரைசாமிபிள்ளை' என்று பலரும் போற்றத் தலைப்பட்டனர். இது குறித்து அவரின் மாணவரும் நல்ல கவிஞருமான மீ. இராசேந்திரன் (மீரா) பாடிய கவிதை அற்புதமானது:

      "அதியன்தான் இன்றில்லை இருந்திருந்தால்
            அடடாவோ ஈதென்ன விந்தை! இங்கே
      புதியதொரு ஆண்ஒளவை' எனவி யப்பான்!
            பூரிப்பான்; மகிழ்ச்சியிலே மிதப்பான்; மற்றோர்
      அதிமதுரக் கருநெல்லிக் கனிகொ ணர்ந்தே
            அளித்துங்கள் மேனியினைக் காதலிக்கும்
      முதுமைக்குத் தடைவிதிப்பான்; நமது கன்னி
            மொழிவளர்க்கப் பல்லாண்டு காத்திருப்பான்!"

    கற்பனை நயம் செறிந்த புகழ்ப் பாட்டு இது!

    புரட்சிக் கவிஞர் பாரதிதாசனிடத்துப் பெருமதிப்புக் கொண்டவர் உரைவேந்தர். அதனால் கவிஞர் எழுதிய சஞ்சீவி பர்வதத்தின் சாரல்' எனும் குறுங்காப்பியத்தின் சிறப்பினை ஆராய்ந்து, பாவேந்தரைப் பாராட்டிப் பாரதிதாசன் மலரில்' கட்டுரை எழுதியுள்ளார். அவ்வாறே புரட்சிக் கவிஞரும், உரைவேந்தர்பால் அளவற்ற மதிப்புக் கொண்டிருந்தார். ஒரு முறை நாகர்கோயிலில், புலவர் குழு' கூடியிருந்தது. பாரதிதாசன், தம் நண்பரோடு உரையாடிக் கொண்டி ருந்தார். அப்பக்கமாக உரைவேந்தர் வரக் கண்ட கவிஞர், தம் நண்பர்களிடத்து, தமிழ் மணம் வீசுகிறதே... ஓ...... ஒளவை துரைசாமி பிள்ளையவர்கள் வருகிறார்களோ?' என நகையும் உவகையும் கலந்து பாராட்டினார் !

      "பள்ளி முதல் பல்கலைச்சாலைவரைபாங்கெண்ணிக் கொள்முதல் செய்யும் கொடை மழை - வெள்ளத்தேன் பாயாத ஊருண்டோ! உண்டா உரைவேந்தை வாயார வாழ்த்தாத வாய்!"

    என்று, வாயார வாழ்த்துகின்றார் புரட்சிக் கவிஞர்!

    மூதறிஞர் முனைவர் வ.சுப. மாணிக்கனார்,

      "கடவுட் பற்றும், சைவத்தெளிவும், பொது நோக்கும் பொலிந்த நம் உரைவேந்தர், முதுமை மறப்பிக்கும் இளைய வீறுபெற்று இராமலிங்க வள்ளலாரின் திருவருட்பா முழுமைக்கும் பேருரை கண்ட பெருஞ்செல்வம் - தமிழ்ப் பேழைக்குத் தாங்கொணாச் செல்வமாகும். நூலுரை - திறனுரை - பொழிவுரை என முவ்வரம்பாலும் தமிழ்க்கரையைத் திண்ணிதாக்கிய உரை வேந்தர் ஒளவை துரைசாமி நெடும் புகழ் என்றும் நிலவுவதாக!"

    என்று போற்றிப் புகழ்கின்றார்!

      "சென்ற நூற்றாண்டில் தமிழ் உரைநடை வளர்ச்சிக்குத் துணைபுரிந்தவர் ஒளவை துரைசாமி அவர்கள். தம் காலத்து மக்களிடம் தமிழ் சிறந்தோங்க உழைத்தவர்"

    என்று முன்னாள் துணைவேந்தர் சை. வே. சிட்டிபாபு பாராட்டுகின்றார்.

      "ஆசிரியப் பணியாலே இளைய ரெல்லாம்
            அறிவோடும் ஆற்றலொடும் வாழ வைத்தார்!
      பேசுகின்ற திறனாலே தமிழர் நெஞ்சில்
            பிறங்குமொரு தனியிடத்தில் அமர்ந்து கொண்டார்!
      நேசமிகும் உளத்தாலே எந்தப் போதும்
            நீலமணி மிடற்றானைத் தொழுதி ருந்தார் !
      வாசமுறு நற்றமிழே உயிராய் எண்ணி
            மாசறியாப் பொன்னே போல் வாழ்ந்தி ருந்தார்!"

    என்பது திருமதி சௌந்தரா கைலாசத்தின் புகழ்க் கவிதை.

      "எழுத்தினொடு பேச்சாலும் இனிய தமிழ்
            சிவநெறியென் றிரண்டும் எங்கும்
      முழக்கிவரும் நாவலனே! முடுக்குமிகு
            தமிழ்வீறு முதிர்ந்த வீர!"

    என ந.ரா. முருகவேளும்,

      "வாயில் தமிழ் முழக்கம் வாழ்வில் தமிழியக்கம்
      பாயில் துயில் போதும் பைந்தமிழே - நோயில்
      படுப்பினும் பண்டமிழின் பண்பார் பணிசெய்து
      எடுத்ததுரை சாமிபுகழ் ஏற்று!"

    எனக் கவிஞர் தி.நா அறிவொளியும்,

      "உரையும் பாட்டும் உடையவராய்
      உள்ளந் தன்னில் ஆட்சிசெயும்
      உரையின் வேந்தர் புகழ்பாடி
      உள்ளத் துவகை கொள்வோமே!"

    என்று மகாவித்துவான் ம. அமிர்தலிங்கனாரும்,

      "சங்கநூற் கடலில் தோய்ந்தெழு கொண்டல்
            சைவசித் தாந்தத்தின் திலகம்;
      மங்கலத் தமிழ்த்தாய் இதயத்தை மலர்த்தும்
            வான்சுடர்; வள்ளலார் நூலின்
      இங்கிதம் தேரும் அஞ்சிறைத் தும்பி
            இமயத்தைப் புலமையால் தாழ்த்தும்
      துங்கமார் ஒளவை நம் துரைசாமித்
            தோன்றல் ...!"

    என்று பேராசிரியர் ந.சுப்புரெட்டியாரும், உரைவேந்தரின் புகழ் பாடுவர்!

    சித்தாந்த சைவத்தை உரையாலும், கட்டுரையாலும் கட்டமைந்த பொழிவுகளாலும் பரப்பிய அருமை நோக்கி உரைவேந்தருக்குத் தூத்துக்குடி சைவ சித்தாந்த சபையார், 'சித்தாந்த கலாநிதி' (சித்தாந்தக் கலைக்கூடம்) என்னும் சமயப் பட்டமளித்துப் பாராட்டினர்.

    மதுரை மாநகரில், 1941 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட மதுரைத் திருவள்ளுவர் கழகம் தமிழுக்குச் சிறப்பாகத் தொண்டு செய்து வருவது. ஆண்டு தோறும் தக்க தமிழ்ப் புலவர்களைப் பாராட்டு முகமாகப் பட்டம் வழங்கிச் சிறப்பித்து வருவது. அவ்வகையில், ச.சாம்பசிவனார். செயலராக இருந்த போது, உரைவேந்தர். சில ஆண்டுகள் தொடர்ந்து, வாரந்தோறும் சைவசித்தாந்தச் சொற் பொழிவு நிகழ்த்தி வந்தார்; எந்த விதக் கைம்மாறும் கருதாமல் இதனை ஆற்றி வந்தார். நூற்றுக் கணக்கானோர் , சைவசித்தாந்தத்தைப் புரிந்து கொள்ள இவரது சொற்பொழிவு பெரும் பயன் விளைவித்தது. அதே வேளையில் இவரது அறுபதாம் ஆண்டு நிறைவெய்தியது. இம் மணிவிழா' வைச் சிறப்பாகக் கொண்டாட விரும்பிய கழகம், 1964ஆம் ஆண்டு சனவரி 14,15,16 ஆகிய நாட்களில் நிகழ்ந்த தமிழ்த் திருவிழா வோடு மணிவிழா' வையும் இணைத்துக் கொண்டது.

    இவ்விழாவை முன்னிட்டு, இவரின் தொண்டுகள் குறித்துத் - 'துண்டறிக்கை ஒன்று செயலரால் தயாரிக்கப்பட்டுப் பலர்க்கும் வழங்கப்பட்டது.

      "செந்தழிழ்த் திறனும், பன்னூற் பயிற்சியும், ஆராய்ச்சி யாற்றலும், உரைகாணும் உரனும், மாணவர்க்கு விளங்கக் கற்பிக்கும் வன்மையும், சிவநெறித் தேர்ச்சியும், நூலியற்றும் நுண்ணறிவும், நிரந்தினிது சொல்லும் நெஞ்சுறுதியும், உலகியல் உணர்வும், ஆங்கில மொழியறிவும் ஆகிய இவை ஒருங்கே அமையப் பெற்ற பேராசிரியர்; தோலா நாவின் மேலோர்; புலத்துறை முற்றிய புலவர்!"

    என்பன போன்ற பாராட்டுரைகள் அவ்வறிக்கையில் இடம் பெற்றிருந்தன.

    மணிவிழா நாளாகிய 16-1-1964 அன்று, மாலை பேராசிரியர், குதிரை பூட்டப்பட்ட சாரட்டு வண்டியில், மதுரை மீனாட்சி திருக்கோயில் அம்மன் சந்நிதியிலிருந்து நான்கு சித்திரை வழியாக, நாதசுர இன்னிசையுடன், ஊர்வலமாகக் கழகமன்றத்திற்கு அழைத்து வரப்பெற்றார்.

    கழகப் புரவலர் கி.பழநியப்பனார் வரவேற்புரை நிகழ்த்த, செயலர், ச.சாம்பசிவனார், 'வாழ்த்துரை' படித்து வழங்கக், கழகப் பெருமைதரு தலைவர் தமிழவேள் பி.டி. இராசனார், பேராசிரியருக்குப் பொன்னாடை' போர்த்திச் சிறப்பித்தனர். கலையன்னை இராதா தியாகராசனார், தம் ஆசிரியப் பெருந்தகையின் உயர் பண்புகளைப் பலப்படப் பாராட்டி உரைவேந்தர்' எனும் பட்டம் பொறிக்கப்பட்ட தங்கப் பதக்கம் ஒன்றினை அளித்தனர். அப்போது, கூடியிருந்த மக்கள் அனைவரும், 'உரைவேந்தர் வாழ்க!' என வாழ்த்தொலி முழங்கினர். உரைவேந்தரின் இன்னுயிர்த் தோழர் பேராசிரியர் க. வெள்ளை வாரணனாரும், பொறியர் சி. மணவாள னாரும், உரைவேந்தரைப் பாராட்டிச் சிறப்புரையாற்றினர். இறுதியில், 'உரைவேந்தர்' தமக்கு அளித்த இச்சிறப்புக்குத் தமக்கே உரிய செந்தமிழ் நடையில் நன்றி தெரிவித்தார்.

    இவ் 'உரைவேந்தர்' எனும் ஒப்புயர்வற்ற பட்டமே, இவருக்கு இறுதிவரை நின்று நிலவுவதாயிற்று!

    மதுரைக் காமராசர் பல்கலைக்கழகத்தில், மூதறிஞர் வ.சுப.மாணிக்கனார் துணைவேந்தராக இருந்தபோது, 29-3-1980 அன்று நடந்த சிறப்பு நிகழ்ச்சியில், தமிழக ஆளுநர் மேதகு . பிரபுதாசு பி.பட்வாரி, உரைவேந்தருக்குத் தமிழ்ப் பேரவைச் செம்மல்' எனும் பட்டத்தைப் பொன்னாடை போர்த்திப் பொற்கிழி அளித்துப் பாராட்டினார். துணைவேந்தர் மாணிக்கனார், உரைவேந்தர் குறித்துத், தகுதியுரை படித்தளித்தார்!

    தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் சார்பில், தமிழ்த்தொண்டு செய்த பெரியார்' என்ற வகையில், உரைவேந்தருக்குக் கேடயம் பரிசாக வழங்கப்பட்டது. அப்போது அதனைப் பெறுதற்காக மேடைக்குத் தளர்ந்த நிலையில் வந்தவர், "தமிழ்த் தொண்டாற்றிய எனக்கு நீங்கள் வாள் அல்லவா தந்திருக்க வேண்டும் ! எவரிடமிருந்து என்னைக் காத்துக் கொள்ளக் கேடயம் தந்திருக்கிறீர்கள்!" என்று நகைச்சுவை படப் பேசினார்.

    1981 ஆம் ஆண்டு மதுரையில் ஐந்தாம் உலகத் தமிழ்மாநாடு நடந்தபோது உரைவேந்தருக்கு இந்தியப் பிரதமர் பெருமை சால் திருமதி இந்திரா காந்தி அம்மையார் வழியாகத் தமிழக முதலமைச்சர் மாண்புமிகு எம் ஜி.ஆர். பத்தாயிர ரூபாய் பொற்கிழி வழங்கிச் சிறப்பித்தார்!

    மா.சு. சம்பந்தன், தாம் எழுதிய சிறந்த பேச்சாளர்கள் ' என்ற நூலில், தமிழ்த்தென்றல் திரு.வி.க., நாவலர் பாரதியார், தந்தை பெரியார், முத்தமிழ்க் காவலர் கி. ஆ. பெ. விசுவநாதம், பேரறிஞர் அண்ணா , சிலம்புச் செல்வர் ம.பொ.சிவஞானம், ப. ஜீவானந்தம் முதலியோரைக் குறிப்பிடும் சிறப்புப் பேச்சாளர் பதின்மரின் பட்டியலில், செந்தமிழ் நலம் துலங்கப் பேசும் சிறந்த பேச்சாளர்களாகச் சொல்லின் செல்வர்' ரா. பி. சேதுப் பிள்ளையையும், உரைவேந்தரையும் குறிப்பிட்டுள்ளார் என்பதும் இங்குச் சுட்டத்தகும்.

    இவ்வாறு உயர்பண்புகள் ஒருங்கே கொண்ட உரைவேந்தர்பால் குறை ஏதும் இல்லையா?' என்று சிலர் கேட்கக் கூடும். ஆம்! ஒரே ஒரு குறை. அது, 'மறதி' என்னும் குறை. இளமைக் காலத்தே கற்ற நூற்கருத்தையும் மறவாமல், முதுமைக் காலத்தும் மறவாமல் எடுத்துரைக்கும் ஆற்றல் உடையவரா யிருந்தாலும், தம்மிடம் உள்ள கண்ணாடியையும், பொடி டப்பி யையும் எங்காவது ஓரிடத்தில் வைத்துவிட்டு, எங்கே கண்ணாடி? எங்கே', பொடி டப்பி' என்று நீண்ட நேரம் தேடி, ஒரு வகையாகக் கண்டெடுப்பது பெரு வழக்கமாகிவிட்டது!

    தம் வீட்டின் பொருளாதார நிலை குறித்துச் சிந்தித்ததே இல்லை. நூல் பல எழுதியவரேயாயினும், அதனாலெல்லாம் பொருள் வருவாய் பெற இயலாத காலம்! அந்நிலையிலும் தம் குழந்தைகளை, ஓரளவு பொருள் சம்பாதிக்குமளவுக்குக் கல்வி வாய்ப்புக்கு உறுதுணை புரிந்துள்ளார். அவ்வளவே!

    உரைப் பணிகளின் சிகரம் - திருவருட்பா உரை!' என்று சொல்லுமளவுக்குப் பணியிலிருந்து கொண்டே 5818 பாடல்களுக்கு உரை கண்டவர் உரைவேந்தர். எப்படி இவரால் இத்துணைப் பக்கங்கட்கு உரை எழுத முடிந்தது என்றே பலரும் வியந்து போற்றுவர். அருட்செல்வர் நா. மகாலிங்கனாரின் பல்வேறு வகையான உதவிகள், உரைவேந்தருக்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்தன எனில் மிகையாகாது!

    அன்னைத் தமிழுக்காகவும், ஆன்ற சைவத்திற்காகவும், தமக்கு நினைவு தோன்றிய நாள் முதல், வாழ்நாளின் இறுதி வரையிலும் பாடுபட்ட தமிழ்ச் சான்றோராம் உரைவேந்தர்', தமது 79ஆம் அகவையில், 3.4.1981ஆம் நாளன்று, மதுரையிலுள்ள தமது இல்லத்தில், சிவப்பேறு ' எய்தினார். மதுரை நகர் இடுகாட்டில் இவர்தம் பூதஉடல் சமாதி யில் வைக்கப்பட்டு, அவ்விடத்தில் கல்வெட்டுப் பொறிக்கப் பட்டுள்ளது.

      "கற்றவர்தாம் கண்ணீர்க் கடல் மூழ்கச் சாய்ந்து தமிழ்
      உற்றகடல் மூழ்கி ஒளிந்ததே!- பெற்றநிலம்
      எங்கும் ஒளிசெய் திறந்ததுரை சாமியெனும்
      பொங்கு தமிழ்ச்சுடரிப் போது!"

    என்று கூறுமாப் போல், கற்றவர்கள் கண்ணீர்சிந்த, மன்றங்கள் மனம் வருந்த, மாணவர்கள் உளம் வெதும்ப, நண்பர்கள் நலிவடைய - இங்ஙனம் பல்திறத்தாரும் துயர்க்கடலில் ஆழ, உரைவேந்தர், பொன்றாப் புகழை இவ்வுலகில் நிறுவித் தம் பொன்னுடல் நீத்தார்!

    உரைவேந்தரின் நூற்றாண்டு நினைவைப் போற்றும் விழா ஒன்று, அண்ணாமலைச் செட்டியார் நினைவு அறக்கட்டளை யின் சார்பில், 25.9.2003 அன்று, சென்னையில் அருட்செல்வர் ' நா. மகாலிங்கம் தலைமையில், மிகச் சிறப்புற நிகழ்ந்தது. பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் உள்ளிட்ட அறிஞர் பலர், உரை-வேந்தருக்குப் புகழ் மாலை சூட்டினர்!

    காரைக்கால் அம்மையார், இறைவனிடம்,

      "இறவாத இன்ப அன்பு வேண்டிப்பின் வேண்டுகின்றார்
      பிறவாமை வேண்டும்!"

    என்று வேண்டியது போன்று, உரைவேந்தரும் இறைவனிடம் அவ்வாறே வேண்டியிருப்பார். ஆம்! இவர் செய்த - பழுதிலாத் தூய தமிழ்த்தொண்டும் சிவத்தொண்டும் அந்நிலைக்கே ஆக்கியிருக்கும். உரைவேந்தரின் நீடுபுகழ், வளமை குன்றாத கன்னித்தமிழ் போல நெடிது நிற்கும் என்பது ஒருதலை!

      "ஔவை துரைசாமி ஆன்ற பெரும்புலவர்
      கவ்வை சிறிதுமின்றிக் கன்னித் தமிழ் வளர்த்தார்!
      இந்நாளில் யாம்காணோம்; ஈடில்லா வேந்தரிவர்!
      என்னும் புகழே இவர்க்கு!"

    உரைவேந்தர்!
    -----------------
    உரை வேந்தர் ஒளவை சு.துரைசாமி பிள்ளை எழுதிய நூல்கள்

    ஊர்ப்பெயர் - வரலாற்றாராய்ச்சி (அச்சாகவில்லை)
    ஐங்குறுநூறு உரை
    ஒளவைத் தமிழ்
    சிலப்பதிகார ஆராய்ச்சி
    சிலப்பதிகாரச் சுருக்கம்
    சிவஞானபோதச் செம்பொருள்
    சிவஞான போத மூலமும் சிஞனா சுவாமிகள் அருளிய சிற்றுரையும்
    சீவக சிந்தாமணி ஆராய்ச்சி
    சீவகசிந்தாமணிச் சுருக்கம்
    சூளாமணி
    சைவ இலக்கிய வரலாறு
    ஞானாமிர்த மூலமும் பழைய உரையும்
    தமிழ்த் தாமரை
    தமிழ்நாவலர் சரிதை மூலமும் உரையும்
    திருமாற்பேற்றுத் திருப்பதிக உரை
    திருவருட்பா மூலமும் உரையும் (9 தொகுதிகள் )
    திருவோத்தூர் தேவாரத் திருப்பதிகவுரை
    தெய்வப் புலவர் திருவள்ளுவர்
    நந்தா விளக்கு
    நற்றிணை உரை
    பதிற்றுப்பத்து உரை
    பண்டைநாளைச் சேரமன்னர் வரலாறு
    பரணர்
    புதுநெறித் தமிழ் இலக்கணம் (2 பகுதிகள் )
    புறநானூறு மூலமும் உரையும் (2 பகுதிகள் )
    பெருந்தகைப் பெண்டிர்
    மணிமேகலை ஆராய்ச்சி
    மணிமேகலைச் சுருக்கம்
    மதுரைக் குமரனார்
    மத்த விலாசம் (மொழிபெயர்ப்பு )
    மருள் நீக்கியார் நாடகம் (அச்சாகவில்லை )
    யசோதர காவியம் மூலமும் உரையும்
    வரலாற்றுக் கட்டுரைகள் (வரலாற்றுக் காட்சிகள்)
    Introduction to the Study of Thiruvalluvar

    அச்சில் வெளிவந்த கட்டுரைகள்
    ஆர்க்காடு
    ஊழ்வினை
    சிவபுராணம்
    ஞானசம்பந்தர் வழங்கிய ஞானவரை
    தூத்துக்குடி சைவசித்தாந்த சபைத் தலைமைப் பேருரை

    ஒளவை சு. துரைசாமிபிள்ளை பற்றிய சின்னஞ்சிறு வெளியீடுகள்
    அறிவொளி, தி.நா. - ஔவை துரைசாமிபிள்ளை வாழ்க்கைக் குறிப்பு
    இராகவன், கோமான் ம.வி. - ஆசிரியப் பெருந்தகை ஒளவை துரைசாமி
    கிரி, பி.வி., (தொ .ஆ.) - உரைவேந்தருக்கு ஒரு நூற்றாண்டு
    சிவமணி, கு. - 20ஆம் நூற்றாண்டுத் தமிழ்த் திறனாய்வாளர்
    ஒளவை சு. துரைசாமி (கருத்தரங்கக் கட்டுரை)
    ----------

    உரைவேந்தர் ஒளவை சு. துரைசாமிபிள்ளை (1902-1981):
    பேராசிரியப் பெருந்தகை: சங்கத் தொகைநூல் பலவற்றிற்கு உரைநயம் கண்ட உரவோர்: சைவசித்தாந்த வித்தகர்; சொற்பொருள் நயம் உரைத்த சான்றோர்; பேச்சாலும் எழுத்தாலும் பிறர் உள்ளம் கவர்ந்தவர்; தமிழர் வரலாற்றைத் தகவுடன் உரைத்தவர்; ஊர்களின் உண்மைப் பெயர்களைக் கண்டறிந்தவர்; ஏடு படிப்பதிலும் கல்வெட்டு ஆராய்வதிலும் வல்லவர்; தம் சொந்த முயற்சியாலும் கடும் உழைப்பாலும் உலகம் போற்ற வாழ்ந்தவர்; மாணவர்களின் உள்ளம் கொள்ளை கொண்டவர்; தாம் வாழ்ந்த காலத்திலேயே பேரும் புகழும் பெற்றவர். ஒளவை சு. துரைசாமி பிள்ளை , பல்வேறு பட்டங்கள் பெற்றவரேயாயினும் 'உரைவேந்தர்' என்பதே இறுதிவரை நிலைத்துள்ளது. இத்தகு பட்டத்தை வழங்கியது, மதுரைத் திருவள்ளுவர் கழகம்.

    இந்நூலாசிரியர் ச. சாம்பசிவனார்
    உரைவேந்தரோடு நெருக்கமாகத் தொடர்பு கொண்டவர்; மதுரைத் திருவள்ளுவர் கழகச் செயலராக இருந்த பெருமை சாம்பசிவனார்க்கு உண்டு. இவர் எழுதிய நூல்கள் - 75; கட்டுரைகள், கவிதைகள் பல, "செந்தமிழ்ச் செல்வர், தமிழாகரர், அருந்தமிழ் மாமணி, திருக்குறள் செம்மல்" எனப் பல்வேறு பட்டங்களும், தமிழக அரசின் நல்லாசிரியர்' விருதும் பெற்றவர்; சிங்கப்பூர், மலேசியா, மொரீசியசு, இலங்கை முதலான நாடுகட்குச் சென்று உலகளாவிய மாநாடுகளில் தலைமை தாங்கியும் ஆய்வுக் கட்டுரைகள் வழங்கியுமுள்ளவர். வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் மிக உயர்ந்த மாட்சிமைப் பரிசும் பெற்றவர்; தமிழ் மாருதம்' என்ற உலகளாவிய இலக்கியத் திங்கள் இதழின் ஆசிரியர். மதுரை நகரில் சிறந்ததொரு நூலகத்தையும் உருவாக்கியவர்.
    ----------------


This file was last updated on12 May 2020.
Feel free to send the corrections to the Webmaster.